Wednesday, 13 December 2017

போதும் காதலை வாழ விடு

                                                போதும் காதலை  வாழ விடு


விடியுது விடியுது புதுயுகம் பிறக்குது
          சாதி  இருளுக்கு விடையைக் கொடு
அன்று தொடங்கி   இன்று வரைக்கும்
          காதலுக்கு அழிவில்லை கவலை விடு

சாதியின் பெயரால் காதலைப் பிரிக்கும்
         கயமை உறவை எரித்து விடு
காதலுக் கெதிராய் எவர்வந் தாலும்
         கதையை முடிப்போம் வாளை எடு

சாதி வெறியினால் ஆணவக் கொலைகள்
         புரிவோர் சிரங்களை அறுத்து எடு
காதலின் உணர்வுகள் கயவர்கள் அறியட்டும்
        அதுவரை  அவர்களைப் புடைத்து எடு

காளையின் உரிமை மீட்க்கக்  கிளம்பிய
        மெரீனாக் கடலே வந்து விடு
காதலைக்  காத்திட   வேண்டும் உடனே
         இளையோர் படையே ஒன்று படு

சாதிகள் ஆயிரம் ஆயினும் கூட
         செந்நீர் ஒன்றே அறிந்து விடு
ஏனைய சாதிகள் அழித்திவ் வுலகில்
         காதலர் சாதியை வாழ விடு

உலகே திரண்டு காதலை எதிர்த்தால்
         பிரபஞ்சம் முழுதும் பொசுக்கி விடு
காதலர் உயிரை எடுத்தது போதும்
         போதும் காதலை வாழ விடு.


இது   காதலர்களின்  தேசிய கீதம்








பாரதிக் கனவு

                                                                   பாரதிக் கனவு

ஏனைய  தொழில்கள்  எல்லாம்
             கிடக்கட்டும்   பக்க   மாக
ஏர்த்தொழில்   மட்டும்   இங்கே
             இருக்கட்டும்   முதன்மை   யாக

விளைநிலம்   எல்லாம்   இங்கே
            விண்முட்டும்   கான்கிரீட்   காடாய்
வீணாக்கி   விட்டதற்   காய்
             பரிகாரம்   தேடு   இன்றே

கடல்மணல்    வெளிகள்   எல்லாம்
            நெற்காடாய்   செய்வோம்    நாமே
கடலெல்லாம்   கழனி   ஆக்கும்
             தொழில்நுட்பம்    தேடு    வோமே

வான்நோக்கும்   மொட்டை   மாடி
             முழுத்திலும்    விதைகள்   தூவி
காய்கறி   கீரை   கனிகள்
              விளைவிக்கும்  செயலாற்   றிடுவோம்

செயற்கைக்கோள்   கொண்டு   நாட்டை
              படமாக     எடுத்திட்     டாலும்
பசுமைநன்     நீலம்      தவிர
              நிறமேதும்   தெரிய   வேண்டாம்

வயிற்றுக்குச்   சோறிட   வேண்டும்
              இங்குவாழும்   மனிதருக்    கெல்லாம்
என்றபா    ரதியின்     கனவை
               நிறைவேற்    றுவோம்நாம்    வாரீர் !

கனவுக்கோர் பஞ்சமில்லை

                                                   கனவுக்கோர் பஞ்சமில்லை 

மனப்பேழை காணுகின்ற கனவை எல்லாம் 
             கண போழ்தில் நனவாக்கத் துடிக்கின்றீரே
வனப்புமிகு மங்கையரைச் சேர போகும் 
             காளையெனப் பொறுமை மிக இழக்கின்றீரே 

ஏடெடுத்துப் படிக்காமல் தேர்வில் வென்று 
            மாநிலத்தில் முத்லிடத்தைப் பிடிக்கும் கனவு 
வேர்வைசிந்தி உழைக்காமல் செல்வம் சேர்த்து 
           ஓரிரவில் பில்கேட்சாய் மாறும் கனவு

மணமுடிக்கும் மங்கையவள் தந்தை வந்து 
          மணக்கொடையாய் விமானத்தை நல்கும் கனவு 
செல்லும் நெடுவழியெங்கும் ரசிகர் கூட்டம் 
          ஆர்ப்பரித்துக் கையசைக்கும் நடிகர் கனவு 

பணம் வழங்கும் எந்திரத்தின் தேவையின்றி 
           கட்டுக் கட்டாய்  பணம்புழங்கும் தங்கக் கனவு 
மருமகளைத் தன்மகளாய்த் தாங்கி நிற்கும் 
           மாமியார்கள் நிறைந்திருக்கும் மங்கலாக கனவு 

மங்கையர்தம் கணவர்களை மதித்துப் போற்றும் 
           உலகுக்கு வந்ததுபோல் உன்னதக் கனவு 
மங்கையரை ஓருயிராய் உணர்ந்து எண்ணி 
           காளையர்கள் காத்துநிற்கும் கண்ணியக் கனவு 

ஆட்சியரும் அமைச்சர்களும் தங்கள் பிள்ளை    
           கல்விபெற அரசுப்பள்ளி அணுகும் கனவு  
கடவுச் சீட்டில்லாமல்  பயணம் செய்து  
            கண்டம்விட்டுக்  கண்டம்தாவும் அபத்தக் கனவு

விருட்டென்று விண்தாவி  விண்மீன் கூட்டம் 
           தன்னோடு உரையாடும் விந்தைக் கனவு  
ஆழ்கடலின் தரைதொட்டு முத்தெ டுத்து 
           திமிங்கலத்தின் தலைவருடும் நேசக் கனவு   

வான்பொய்க்கா மழைபெய்து வளங்கள் பெருகி 
           உணவுக்கோர் பஞ்சம்வரா உண்ணத்தக்க கனவு 
முதல்மகனும் காவல் இன்றிக்  குடிமகனோடு
            சமமாகப் பயணிக்கும் சமத்துவக் கனவு 

பாரதமே தூய்மையாகத் துலங்கி நின்று 
            ஆரோக்கிய முதன்மைபெறும் அற்புதக் கனவு 
 அமெரிக்கா முதலான அத்துணை நாடும் 
             இந்தியாவின் நட்புக்கோரும் இன்புறு கனவு 

 கனவுகளே வாராத உறக்கம்  கொண்டு 
             காலையிலே கண்விழிக்கும் கற்பனைக் கனவு 
யார்க்கும் நேர்மையாக நடக்கின்ற நெஞ்சமில்லை 
              நீர்காணுகின்ற கனவுக்கோர் பஞ்சம் இல்லை  

Sunday, 10 December 2017

பாரதிக்கு வந்தனம் 

புதுவையில் ஒரு சித்திரப் பயணம் @ பாரதிக்கு சித்திராஞ்சலி

            டிசம்பர்-11 மகாகவி பாரதியாரின்  தினத்தை முன்னிட்டு புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியாரின்  நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தில் புதுவை கவிதை வானில் என்ற அமைப்பு கவிதாஞ்சலி ,இசையாஞ்சலி மற்றும் சித்ராஞ்சலி (ஓவியம் தீட்டுதல்) ஆகியவற்றை 
09-12-2017 .சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்திருந்தது .ஏராளமான பள்ளி மாணவர்கள்,ஓவியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
           கவிதை வானில் அமைப்பின் நிறுவனர் திருமதி கலா விசு அவர்களின் அழைப்பின் பேரில் 6 ஆம் வகுப்பு மாணவர் மூவர் .7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ,8 ஆம் வகுப்பு மாணவர் மூவர் ,9 ஆம்  வகுப்பு மாணவர் மூவர்,10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,11 ஆம் வகுப்பு மாணவர் மூவர் என  எங்கள் பள்ளி மாணவர்கள் 14  பேரை ஓவியம் வரைவதற்காகஅழைத்துச் சென்றிருந்தேன்.அனேகமாக கலந்துகொண்ட ஒரே அரசுப்பள்ளி எங்கள் பள்ளி மட்டுமே...! தனியார் பள்ளியின் மாணவர்களே அதிகம்.....ஒரு சிலரை  பெற்றோரும் அழைத்து வந்திருந்தனர்.
 அந்த இடத்திற்கு நான் செல்வதும் இதுவே முதல் முறை.அங்கிருந்த பாரதியாரின் அறிய புகைப் படங்கள், ஓவியங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தோம்.உள்ளே ஒரு ஹாலில் நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்தன.சிலர் இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தனர் ...!சில மாணவியர் பரத நாட்டிய நிகழ்வை நிகழ்த்தினார் ///சில மாணவர்கள் வரைந்துகொண்டிருந்தனர்.அவர்களுடன் அமர்ந்த எங்கள் பள்ளி மாணவர்களும் விதம் விதமாக ...வித்தியாசமான தோற்றங்களில் பாரதியாரை வரைந்தனர் .நான் முன்னரே வரைந்து எடுத்துச் சென்றிருந்த  பாரதியாரின் 15 வகையான ஓவியங்களை காட்சிப் படுத்தினேன்.
          முனுசாமி என்கின்ற சிற்பி களிமண்ணால்  பாரதியாரின் உருவத்தை வடிவமைத்துக் கொண்டிருந்தார் .சில ஓவியர்கள் அமர்ந்து வரையாது தொடங்கியிருந்தனர்.நானு அமர்ந்து 7 நிமிடங்களுக்குள் பாரதி மற்றும் செல்லம்மாள் இவர்களின் உருவத்தை வண்ணமாகத் தீட்டினேன்.எம் பள்ளி மாணவர்கள் சிலர் பென்சில் ஷேடிங் முறையிலும் சிலர் வண்ண ஓவியமாகவும் வரைந்தனர் .ஒரு மாணவன் மணல் கொண்டு பாரதியாரை வரைந்தான் மற்றொரு மாணவர் பருப்பு வகைகள் ,கடுகு உள்ளிட்ட பொருட்களால் அலங்கரித்து வரைந்திருந்தான் .புதுவை மற்றும் காரைக்கால் பகுதி மாணவர்கள் சிறந்த வண்ணங்களைப் பயன்படுத்தி பாரதியின் உருவத்தை ஓவியங்களாகத்  தீட்டினர் .
                மீண்டும் எனது ஓவியங்கள் அடுக்கப்பட்ட பகுதிக்கு வந்தேன்.அங்கு எனது ஓவியங்களை ஒருவர் வியந்து பாராட்டிக்கொண்டிருந்தார் .அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரைப் பற்றி அவரிடமே வினவினேன்.அவரோ மிக அமைதியாக எனது பெயர் பாரதி என்றார் .பாரதிதாசனின் பேரன் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனின் மகன் என்றும் கூறி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார் .புரட்சிக்  கவிஞர் பாரதிதாசனின் பேரன் என்பதை அறிந்து ஒருகணம் என்னுள் திகைப்பு நிலவியது...எவ்வளவு எளிமை?மறுகணம் திகைப்பு நீங்கி மகிழ்வுடன் அவரது கரம் பற்றிக் குலுக்கினேன்.மாணவர்களிடமும் 
அவரை அறிமுகப்படுத்தினேன்.அவருக்கு என்னுடைய மனவண்ணங்கள் நூலை நினைவுப் பரிசாக வழங்கினேன்.அவர் முன்னிலையில் பாரதியாரைப் பற்றிய கவிதை ஒன்றை வாசித்து,பின்னர் பாருக்குள்ளே நல்ல  என்ற பாரதியாரின் பாடலைப் பாடினேன்.நான் வரைந்த பாரதி செல்லம்மாளின் ஓவியத்தை அதன் வரைநேரம் அறிந்து வியந்து பாராட்டினார் .தந்து தாத்தா பாரதிதாசனின் உருவங்களையும் அவரது பிறந்த தினத்தையொட்டி அவரது படங்களை வரையுமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார்.அவருடன் நின்று எம் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களுடன் குழுப்படமும் எடுத்துக்கொண்டோம்.
              பின்னர் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்கள் .முக்கியமாக சிற்பி முனுசாமி மற்றும் சித்திரக் கவிஞர் ரவி உள்ளிட்ட பல ஓவியர்களின் அறிமுகத்திற்கு காரணமாக இருந்தது இந்நாள்.மாணவர்களுக்கும் இது புது அனுபவம். தாங்கள் வண்ணங்களை பயன்படுத்துவதில் உள்ள நிலைமை பற்றியும் அறிந்துகொண்டனர். 
புதுவைப் பள்ளி மாணவர்களை போல வித்தியாசமான வண்ணங்களை,  வண்ணம் தீட்டும் உபகரணங்களை  வாங்கவும் ஆர்வம் கொண்டனர்.எங்களுக்கு அழைப்பு விடுத்து அறிய வாய்ப்பை அளித்த  திருமதி கலா விசு உள்ளிட்ட அனைவரிடமும் விடைபெற்றபோது பகல் 2.30 மணி .
                பின்னர் புதுவைப் பகுதியின் பிரபல ஓவியர் நண்பர் சுகுமாரன் அவர்களோடு தொடர்பு கொண்டு புதுவையில் அன்றைய தினம் நடைபெறுகின்ற ஓவியக்  கண்காட்சிகள் குறித்துக் கேட்டறிந்தேன்.மாணவர்களின் புதுவை விஜயம் மேலும் அவர்களுக்கு பலனளிக்க வேண்டுமே.அவர்களது ஆர்வம் ஓவியக் கலையின் மீது இன்னும் அதிகரிக்கவேண்டும் அல்லவா .அதனால் அருகிலிருந்த ஓவியக்  கண்காட்சி அரங்கிற்கு அவரே வந்திருந்து அழைத்துச் சென்றார்.
                பிரபல ஓவியர் புதுவை முனுசாமி அவர்களின் கண்காட்சி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில்(மேஷன் பெருமாள் ஹோட்டல் ) நடைபெற்றுக்கொண்டிருந்தது .அங்கு சென்று ஓவியங்களை பார்வையிட்டோம் அனைத்துமே நவீன ஓவியங்கள்.அக்ரலிக் மற்றும் என்னை வண்ணம் கொண்டு தீட்டப்பட்டவை.ரியலிசம் பற்றி மட்டுமே அறிந்திருந்த எம் பள்ளி மாணவர்கள் ஓவியங்களின் புதிய பரிமாணங்கள் கண்டு ...புதிய தளங்கள் கண்டு வியந்து பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து அமரன் ஆர்ட் கேலரிக்கு சுகுமாரன் எங்களை அழைத்துச் சென்றார். அங்கும் பல எண்ணற்ற விதம் விதமான ஓவியங்களை பார்வையிட்டனர்.நிச்சயம் அவர்களது ஓவியம் வரைவதன் மீதான தாகம் அதிகரித்து இருக்கும் .அமரன் ஆர்ட் கேலரியில் பண்ணுருட்டிப் பகுதியில் கிடைக்கப் பெறாத பல வண்ணம் தீட்டும் உபகரணங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.வாய்ப்புள்ள மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டனர்.
              பின்னர் சுகுமாரன் சாருக்கு நன்றி கூறி மணக்குள விநாயகர் கோவிலைதரிசித்து ,அரவிந்தர் ஆசிரமம் சென்று அன்னை சமாதியின் அருகில் கண்மூடி தியானித்து ,புதுவைக்கு கடற்கரையின் காற்றை அனுபவித்து ...அண்ணல் காந்திசிலைக்கு ஹாய் சொல்லி ...நேரு பூங்காவின் ஆயி மண்டபத்தினருகில் ஓய்வெடுத்து புதுவையிடமிருந்து விடைபெறும் நேரம் சரியாக மாலை 6.30.குறிப்பாக மாணவன் பரத் என்பவனைத் தவிர மீதமுள்ள 13 பேருக்குமே இதுதான் புதுவைக்கு முதற் பயணம்...புதுவை மாநகருக்குள் நடத்திய சித்திரப்  பயணம்  நிச்சயம் மறக்கவே முடியாத ஆனந்த அதிசய அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.கண்டிப்பாக அடுத்தமுறை இவர்களை புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்திற்கு அழைத்து வரவேண்டும்.அது அவர்களது ஓவியக்  கலையின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டும் அல்லவா ?




அக்னிக் குஞ்சே என் அன்பான ..பாரதியே.!

அக்னிக் குஞ்சே என் அன்பான ..பாரதியே.!

பாரதத் திருநாட்டின் கவிப் புதல்வனே 
பாரதத்தை பார்க்கே திலகமாக்கி சூட்டி மகிழ்ந்த பாரதியே 
சுதந்திரச் சூரியனின் கதிர்களை பேரொளியை 
பாரதத்தில் பரவாமல் தடுத்திட்ட ஆங்கிலேயக் காடுகளை 
விடுதலை உணர்வை கவிதை  நெருப்புகளாய் வீசியெறிந்து 
வனமழித்த எம் அக்கினிக் குஞ்சே ...
வெந்து தணிந்தது காடு...உன்னால்
வந்தது ஆனந்த சுதந்திரம் அன்று....!

ஆனால்...அந்தோ 
இன்று கொள்ளையர் கூட்டத்தால் காரிருளில் மூழ்கி 
கதிரொளியாம் ஆனந்தம் தொலைத்து  
கதியற்றுக் கிடக்கிறாள் பாரதத் தாய் 
அவள் இன்னல் களைய வேண்டாமா ?
இன்னுமேன் தயக்கம்....?
ஊழல் பேய்களை ஓட ஓட விரட்ட 
உன் துணை வேண்டும் எமக்கு .

அக்கினிக் குஞ்சே என் அன்பான பாரதியே ..
விண்ணுலகம் துறந்து வா ...!
அழைக்கிறோம் விரைந்து வா...!
எமை நோக்கிப் பறந்து வா ...!
மீண்டும் ஒருமுறை பிறந்து வா...!
அக்கினிக்  குஞ்சே என் அன்பான பாரதியே ...!
மீண்டும் நீ பிறந்து வா ...!





Monday, 4 December 2017

சாரணியத்தில் எனது குருமார்கள்...

சாரணியத்தில் எனது குருமார்கள்...
                          சாரண இயக்கம் ஒரு உலகளாவிய இயக்கம் .
ஒரு முறை ஒருவன் சாரணன் ஆகிவிட்டால் உயிர் உள்ளவரை அவன் சாரணனே (    ONCE A SCOUT ALWAYS A SCOUT   )
                        நான் சாரணன் ஆனதும் கூட சுவாரஸ்யமான ஒரு தற்செயல் நிகழ்வுதான்.அன்றிலிருந்து இன்று வரை நான் என்னை ஒரு முழுமையான சாரணனாகத்தான் உணர்கிறேன்.என் சுவாசம்,குருதி ,நரம்புகள் எங்கும் சாரணன் என்ற உணர்வும் உலகளாவிய சாரண இயக்கத்தில் ஓர் அங்கம் என்ற பெருமிதமும் விரவிப்  போய் ஊறிக்  கிடக்கின்றன. படியுங்களேன் ...நான் ஒரு சாரணன் ஆன கதையை ...எனது சாரண குருமார்கள் பற்றியும் கூறுகிறேன்.

                          முதன் முதலில் புதுப்பேட்டை கிளை நூலகத்தில் 'குருளையர் படை  '(cubs )என்ற நூலை படிக்க  நேர்ந்தது .நான் அப்போது கிரஸண்ட்  ஆங்கிலப் பள்ளி -மழலையர்  தொடக்கப் பள்ளி என்ற கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தேன்.1995 என்று நினைவு.அந்நூலை படிப்பதற்கு முன் எனக்கு சாரணியத்தில் துளியும் அனுபவம் கிடையாது.அந்நூலை படித்ததும் ஏதோ ஒரு ஆர்வத்தில் நானாகவே அதில் கூறியுள்ள முறைப்படி scarf  மட்டும் தைத்துக் கொண்டு பள்ளிச் சீருடைமேல் மாணவர்களை அணியச் செய்து குருளையர் உறுதிமொழி  ,நானாகவே மெட்டு அமைத்த சாரண இறைவணக்கப் பாடல்  பரம்பொருள் ஞான பக்தி தா ...( தயா கர் தான் பக்தி கா ...பாடல் எல்லாம் அப்போது எனக்கு அறிமுகமே இல்லை.)கொடிப்பாடலான பாரத சாரண சாரணியர் கொடி பண்பாய் பறக்கிறதே ...ஆகிய பாடல்களை பாடி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன்.பின்னர் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள ஒரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் திரு .தங்கபாண்டியன் ஐயா அவர்களை பற்றி என் தங்கை மூலம் ( எனது தங்கை  அப்போது அப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.)கேள்விப்பட்டு அவரை அழைத்து வந்து படையை முறைப்படி துவக்கினேன்.அவர் எனது ஆர்வத்தைப் பார்த்து நெல்லிக் குப்பம் என்ற ஊரைச் சார்ந்த சாம்ராஜ் என்ற மூத்த சாரணரை அறிமுகம் செய்து வைத்தார் .சாம்ராஜ் ஐயாதான் எனக்கு  'வாகுல்கள்  ' மற்றும் பேடன் பவல் அவர்களின் திரு உருவப்படம் ஆகியவற்றை வழங்கினார் .பின்னர் இருவருடங்களாக அப்படையை நடத்தி வந்தேன்.ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அதை தொடர்ந்து நடத்த இயலவில்லை .
                        இந்நிலையில் 2001 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி னக்கு கருணை அடிப் படையில் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி  கிடைத்தது.10 தினங்கள் கடந்தன.முதல் மாத சம்பள
கவரை என்னிடம் அளிக்கும்போது அப்போதைய தலைமை ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் என்னிடம் நீங்கள் சாரண இயக்கத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . எனக்கு மகிழ்வாக இருந்தது. மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன்.
             பின்னர் 2002ல் கடலூர் தேவனாம் பட்டினம் , பீட்டர் பிஷப் கல்லூரியில் அடிப்படை  பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்தது .
(18-09-2002 முதல் 27-09-2002 வரை)திருவாளர் N .R ,என்று அழைக்கப் படும் ராமமூர்த்தி ஐயாதான் அப்போது முகாம் தலைவராக இருந்தார் .D.R. ஐயா .இளைய குமார்  ஐயா , வேலாயுதம் ஐயா ,செந்தில் ஐயா ,வீரப்பா ஐயா ஆகியவர்களை எனக்கு பயிற்சியாளர்களாக அறிமுகம் செய்த முகாமும் அதுவே.10 நாட்கள் நடைபெற்ற முகாம் எனக்கு சாரண இயக்கத்தைப் பற்றி தெளிவானதொரு அறிமுகத்தை அளித்தது.
                  தினசரிப் பணிகள்,இறைவணக்கக் கூட்டம்,குதிரை லாட வடிவ அணிவகுப்பு,,அணிமுறை பயிற்சி,வழிநடைப் பயணம்,விதம் விதமான கைத் தட்டல்கள் ,ஊக்க ஒலிகள் ,,,விதம் விதமான சாரண விளையாட்டுகள்,சாரணப் பாடல்கள்,முடிச்சுகள்,கட்டுகள்,பாடித்தீ நிகழ்வுகள்.பவலாரின் ஆறு உடற் பயிற்சிகள்...இவை எனக்கு மற்றும் ஒரு உலகத்தை அறிமுகம் செய்தன.இவை அனைத்துமே பதின் பருவ சிறார்களை ஒரு ஆசிரியர் பால் ஈர்க்கின்ற அற்புத ...மந்திரங்கள்.அதுவும் குறிப்பாக அந்த சர்வ  சமய வழிபாட்டுக் கூட்டம் எனக்கு எல்லையில்லா சிலிர்ப்பையும் ,ஆனந்த பரவசத்தையும் ஏற்படுத்தி ஒருவித அமைதியை மனமெங்கும் வியாபிக்கவிட்டது.
                 அதுவும் திருச்சோ புரம் அண்மையில் உள்ள அரிவாள் மூக்கு என்ற இடத்திற்கு...மிகப் பெரிய மணல் மேடு ...அழகி ,சொல்ல மறந்த கதை போன்ற படங்களில் கூட அப்பகுதியை நீங்கள் பார்த்திருக்கலாம் ...கடலூர் மாவட்டத்தில் ஒரு மினியேச்சர் ஜெய் சாலமீர் பாலைவனம் போன்ற ஒரு இடம்.அங்கு  அழைத்துச் சென்ற நடை பயணம் வாழ்நாளில்  முடியாத அனுபவத்தை தந்தது .மீண்டும் மாணவப் பருவத்திற்கே எம் போன்ற ஆசிரியர்களை அழைத்துச் சென்று முழுக்க முழுக்க ஒரு மாணவனாகவே என்னை உணர வைத்த தருணங்கள் அவை.அதன் பின்னர் பலமுறை அந்த இடத்திற்கு... நண்பர்களுடன் ...குடும்பத்தாருடன்.எனது பள்ளி சாரணர்களுடன் என சென்றும் கூட அப்பயிற்சியின்போது சக பயிற்சியாளர்களுடன் சென்று வந்த அனுபவத்தின் மகிழ்ச்சி மற்ற  அனுபவங்களை பின்னுக்குத் தள்ளுவது என்னவோ நிஜம்தான்.
               அன்று தொடங்கிய எனது சாரணியத்தின் மீதான பற்று இன்று வரையிலும் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கக் காரணம் திரு .ராமமூர்த்தி  ஐயா மற்றும் திரு துரை.ராமலிங்கம் ஐயா இவர்கள் எனக்கு அளித்த அடிப்படை பயிற்சி உண்மையிலேயே மிக சிறப்பாக இருந்ததன் காரணமாகத்தான் என்றால் அது மிகை அல்ல .
              அதன் பின்னர் என் பள்ளியில் நடந்த படைக் கூட்டங்கள் அற்புதமான தருணங்களை எனக்கும் எனது சாரணர்களுக்கும் தந்ததன்  காரணமாகத்தான் இன்னும்கூட பல சாரண மாணவர்கள் என்னுடன் தொலைபேசியிலும் ,முக நூலிலும் இன்னும் தொடர்பில் உள்ளனர் .
             பின்னர் ஒரு வருடத்திற்குப் பின்னர் அதே தேவனாம் பட்டினம் ...அதே  பிஷப் பீட்டர் கல்லூரி ...மீண்டும் ஒரு 7 நாள் பயிற்சி ..
.(03-12-2003 முதல் 10-12-2003 வரை)இம்முறை அட்வான்ஸ் கோர்ஸ் என்ற முன்னோடி பயிற்சி .இம்முறை முகாம் தலைவராக இருந்தவர் திரு .B . R . என்று அழைக்கப் படும் பா.ராமச்சந்திரன் ஐயா - SCOUTING FOR BOYS -என்ற நூலை அழகுத் தமிழில் ...எளிய தமிழில் ...சிறுவர் சாரணியம் என்ற நூலாக மொழிபெயர்த்து வெளியிட்டாரே ...அவரேதான்.மிகவும் கண்டிப்புடன் வழி நடத்தினார் ...அவரது அணுகுமுறை எங்களுக்கு  அப்போது சிம்ம சொப்பனமாக இருந்தது என்றே  வேண்டும்.அப்போதும் D.R.  N.R. மற்றும் AIR அன்று அழைக்கப்படும் எங்கள் அனைவரின் அபிமானத்துக்கு உரிய இளைய குமார் ஆகிய மூவர்  கூட்டணி எங்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்தார்கள்.செந்தில் குமார் , வேலாயுதம் ,KGR என அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் போன்றோர் பயிற்சியின் உதவியாளர்களாய் திகழ்ந்தார்கள்.அடிப்படைப் பயிற்சியில் பெறாத பல பயிற்சிகள் சிறப்பாக வழங்கப் பட்டன.DR ஐயா மூலம்தான் சாரண வழி நடைப் பயணத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அணிமுறைப் பயிற்சியின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவம் இவற்றை அறிந்தேன் .இளைய குமார் ஐயா மட்டுமே SIGNALING ,SKY WATCH   மற்றும் MAPPING  ஆகியவற்றை அவ்வளவு எளிதாய் நடத்த முடியும் .ஆக்கல்  கலையை ..கூடாரம் கட்டும் முறைகளை B . R ஐயாவிடம் இருந்து அவ்வளவு எளிதாகக் கற்றோம்.குறிப்பாக இயற்கை வண்ண ஓவியங்கள் ,அடுப்பே இல்லாத ...பாத்திரங்களே இல்லாத சமையல் ஆகியவற்றை இம் முகாமில்தான் நான் தெரிந்து கொண்டேன்.இது எல்லாமே விரைவாக சொல்ல வேண்டுமே என்று சுருக்கமாகக் கூறுகிறேன் .நடந்த சம்பவங்களை ...ஒவ்வொரு நிகழ்வாகக் கூறினால் கண்டிப்பாக ஒரு மெகா சீரியல் போல் நீண்டுகொண்டே செல்லும் ...!கண்டிப்பாக இவ்விடம் N .R அவர்கள் வேடிக்கையாகப் பாடும் சென்னாங்குன்னிக்கும் செவ்வாழை மீனுக்கும் கல்யாணமாம் கல்யாணம் .... முத்து  செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை  ஆகிய பாடல்களும்....சர்வ சமய வழிபாட்டின்போது மிக உருக்கமாகப் பாடும் சூரியன் வருவது யாராலே என்ற பாடலை குறிப்பிட்டே ஆகவேண்டும்.இதனிடையே டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று எனது முதல் திருமண நாள் கொண்டாட்டத்திற்காய் 7 ஆம் தேதி  இரவு அனுமதி பெற்று மறுநாள் காலை அதாவது 8 ஆம் தேதி காலி 9 மணிக்குள் முகாம் திரும்புவதாக ஒப்புதல் அளித்து B R அய்யாவிடம் சிறப்பு அனுமதி பெற்று பரபரவென்று முகாம் திரும்பியது தனி கதை .



                  அதன் பின்னர் எனது பள்ளியில் படைக் கூட்டம் நடத்துவது, முகாம் நடத்துவது என  ஆர்வத்துடனா அல்லது ஆர்வக் கோளாருடனா என்று  பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு எனது சாரண நடவடிக்கைகள் இருந்தன.
                   அதன்பின்னர்தான் சாரணர் கையேடு என்ற தொகுப்பு நூலை DR ஐயா ,N .R ஐயாஇவர்கள் முன்னிலையில் காடாம்புலியூர் அரசு  பள்ளியில் நடைபெற்ற ஒரு முகாமில் வெளியிட்டேன் .
                   அரசுப் பள்ளியில் பணி  புரியும்  ஆசிரியர்களின் பங்களிப்போடும் நன்கொடையாளர்கள் துணை கொண்டும் மூன்று நாட்கள் பயிற்சி முகாம்களை மாவட்ட பொறுப்பாளர்களைக் கொண்டும்  சகா சாரண ஆசிரிய சகோதரர்களைக் கொண்டும் வருடந்தோறும் நடத்தி வருகிறேன்..எனது இம்முயற்சியில் இரு முறை மட்டுமே சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது
                 மேலும் இந்த இடையறாத முயற்சிகளும் சாரண மாணவர்களின் ஒத்துழைப்போடும் ஆற்றிவரும் பணிகளும்,எனது சாரண குருமார்களின் ஆசியும் எனக்கு MESSENGERS OF PEACE STAR -2014 என்ற சர்வ தேச விருதை  பெற உதவி செய்துள்ளன.அவ்வாறு எனக்கு இவ்விருது கிடைக்க எனக்குப் பரிந்துரை செய்த தேசிய சாரநாத் பொறுப்பாளர்களான 
திரு  கிருஷ்னமூர்த்தி ,திரு மது சூதன் ஆவலா , திரு .சரத் ராஜ் ஆகியோருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.
                 மற்றுமொரு பயிற்சி சாரண ஆசிரியர் பெற வேண்டிய மிக உயர்ந்த பயிற்சியான இமய வனக் கலைப்  பயிற்சி...இதை நான் பெற்றது உதகை மாவட்டம் குன்னூரில் ...நல்ல கோடை வெயில் கொளுத்தும் மே மாதம் ...குளு குளு என ஒரு பயிற்சி மாநிலப் பயிற்சி மையத்தில் ...அப்போது முகாம் தலைவராக இருந்தவர் மாநிலப் பயிற்சி ஆணையர் திரு C ,அண்ணாமலை அய்யா அவர்கள்.அங்கும்கூட கேத்தி நோக்கிய வழிநடைப் பயண அனுபவமும் கூடாரங்களில் மற்றும் மர வீடுகளில் (HUT) தங்கிய அனுபவமும் மறக்க முடியாதவை.
                அதன் பின்னர் மத்திய பிரதேசம் பச்மரியில்  தேசியப் பயிற்சி மையத்தில் நான் பங்கேற்ற
RE UNION FOR HIMALAYAN WOOD BADGE .முகாம் ..முகாம் தலைவராக திரு சலீம் குரேஷி ஐயா ..இம்முகாம் பற்றிய அனுபவங்கள் நிச்சயம் தனிப் பதிவுதான்.விரைவில்....
                இவ்வாறு எனக்குள் உறைந்த இந்த சாரண உணர்வுதான் நான் புதியதாகக் கட்டியுள்ள என் வீட்டின் வெளிப் புறச் சுவரில்  உலக சாரணர் சின்னத்தையும் ,பாரத சாரண சாரணியர் சின்னத்தையும் வடிவமைக்கச் செய்தது எனலாம்.
                மிக நீண்டுவிட்டது அல்லவா ...! சரி ...செய்திக்கு வருகிறேன் .27.11.2017 அன்று நடைபெற்ற சாரண ஆசிரியர்கள் பொதுக்குழுக் கூட்டத்திற்கு எனது குருமார்கள் இருவர் ஒருங்கே வருகை தந்திருந்தனர்.இருவரையும் ஏக காலத்தில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.இதோ அந்நினைவாக அவர்களுடன் எடுத்துக்கொண்ட விண்ணப் படம் ...அப்படம் நோக்கியபோது என்னுள் எழுந்த நினைவுகள் ..எண்ண  அலைகள்தான் ...அதன் வெளிப்பாடுதான் இப்பதிவு ...