Saturday, 29 December 2018

திருநூலாற்றுப்படை - 14


திருநூலாற்றுப்படை - 14

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூலறிமுகம் -14




ஓடோடிக் கடந்துவிடும் நமது வாழ்வின் வசந்தகாலமான பள்ளிப்பருவம்...
அது ஒரு கனாக்காலம்..
நாம் நினைந்து நினைந்து மகிழும்
மாணவப் பருவ நினைவலைகளி்ல் நம் மனதில் வந்து மோதுவது ,
நம் உணர்வில் கலந்திட்ட ....
பள்ளியில் நம்மோடு ஒன்றாய்ப் பயின்ற, பதின் பருவ நண்பர்கள் மட்டுமல்ல ..
தனது கற்றல் முறைகளால் ,தனது அன்பான
அரவணைப்பால்,அன்போடு தோளில் கரமிட்டுக் கூறும் ஆலோசனைகளால் ,சிரிக்க சிரிக்கக் கதைகள் கூறி வகுப்பறையை இனிய சூழலாக்கிய தருணங்களால் ,
கண்டிப்பாக அதே நேரத்தில் கருணையோடு நம்மை நடத்திய விதத்தால்,
நமது தனித்திறன்களைக் கண்டறிந்து அவற்றை பட்டதீட்டிய காரணத்தால் ,
பசி நேரங்களில் நம் கண் பார்த்தே
ஏம்பா ..சாப்பாடு கொண்டு வரலியா என வாஞ்சையோடு வினவி ஒரு பத்து ரூபாயை வலிந்து நம் கையில் திணித்து ஏதாவது வாங்கிச் சாப்பிடு எனக் கூறியோ அல்லது தான் கொணர்ந்த உணவில் பாதியை அன்புடன் நமக்கும் பகிர்ந்தளித்த தாயுள்ளத்தால் ...
தோல்வியில் முகம் வாடி கண்களில் நீர் கோர்த்து தனிமையில் வெறிக்க அமர்ந்திருக்கையில் அருகில் அமர்ந்து மெல்ல தலைதடவி , காரணம் கேட்டு சரி..சரி..கண்ணத் தொடைச்சுக்கோ .. அடுத்தமுறை பாத்துக்கலாம் என்று தைரியம்கூறும் ஒரு தந்தையைப் போன்ற கரிசனத்தாலோ ....இன்னும்..இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் நம் மனதில் நீங்கா இடம்பிடித்த நம் கனவுப் பருவ ஆசிரியர்களும்தானே ...!
அப்படி நமது ஒவ்வொருவருக்கும் ஒரு அல்லது சில கனவு ஆசிரியர்கள் இருப்பார்கள் ..நல்ல ஆசிரியர்களுக்கான ஒரு முன்னுதாரணமாக ...நல்லாசிரியர் விருதினைப் பெற்றிராவிட்டாலும்..
அதைப்பற்றிய எதிர்பார்ப்பே இல்லாமல்
தனது கல்விப் பணியை ஒரு தவமாகவே செய்து வாழ்ந்த அந்தப் பேரன்பர்களை நம்முள்ளிருந்து வெளிக்கொணர உதவும் நூல் இது .
இது ஒரு தொகுப்பு நூல் .
பிரபல எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை அசைபோட்டு ஒரு கனவு ஆசிரியர் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என தனது இதயத்தில் சிம்மாசனமிட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும்
தனது ஆசிரியர்களை உதாரண புருஷர்களாக முன்னிறுத்தும் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
அசோகமித்திரன்
பிரபஞ்சன்
பொன்னீலன்
தியடோர் பாஸ்கரன்
ஆர்.பாலகிருஷ்ணன்
ச.மாடசாமி
இரத்தின நடராஜன்
ச.தமிழ்ச்செல்வன்
பிரளயன்
பாமா
ஞாநி
ஆயிஷா நடராசன்
ஓவியர் டிராஸ்கி மருது
எஸ்.ராமகிருஷ்ணன்
த.வி.வெங்கடேஸ்வரன்
இறையன்பு
கீரனூர் ஜாகிர் ராஜா
பவா செல்லதுரை
ஆகிய பதினெட்டு பிரபலங்களின் அனுபவக் கனவுகளை பழக்கலவையாக்கியுள்ள
இந்நூலின் தொகுப்பாசிரியரான க.துளசிதாஸ் , அந்த அற்புதமான பழக்கலவையின் மேலாக தனது கனவெனும் இனிய தேனூற்றி நா ஊற வைப்பதோடு அதன் மேல் ஒரு செக்கச் சிவந்த செர்ரிப் பழத்தை மகுடமாக வைப்பது போல
இக்கட்டுரைத் தொகுப்பின் நிறைவாக
ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தினை
ஒரு மகுடம் போலும் சூட்டி ஒரு அதி ருசி பொருந்திய ப்ரூட் சாலடை அழகான கண்ணாடிக் கிண்ணத்தில் ஸ்பூன் போட்டுத் தந்திருப்பது போன்று இந்த நூலை நம் கரங்களில் எடுத்துத் தந்துள்ளார்.
இந்நூலை வாசிக்கும்போது நிச்சயமாக நமது மனக்கண் முன் நமது கனவு ஆசிரியர்களும் வந்து செல்வதை தவிர்க்கமுடியாது.
குறிப்பாக ஆபிரகாம் லிங்கன் அவர்களின் அந்தக் கடிதம் நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் வாசித்தேயாகவேண்டிய ஒன்றாகும்.
இக்கட்டுரையாளர்களின் படத்துடன் அவர்கள் பற்றிய குறிப்புகளையும் அளித்திருப்பது கூடுதல் சிறப்பு .
இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு புது வெளிச்சம் கிடைக்கும் என நூலாசிரியர் நம்பிக்கை தெரிவிக்கிறார் தனது முன்னுரையில்.
எனக்கும் கூட அந்த நம்பிக்கையுண்டு ..
வாசியுங்கள் ...
ஆசிரியர்கள் மட்டுமல்ல ...!
ஒவ்வொரு மனிதருமே...!
ஏனெனில் ஒவ்வொரு பெற்றோரும்
தம் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர் ...!
ஒவ்வொரு மனிதரும் நிச்சயம் ஒரு பெற்றோர்...!
எனவே அனைவரும் இந்நூலை வாசியுங்கள் !
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 8 நாட்கள்

Tuesday, 25 December 2018

திருநூலாற்றுப்படை -13

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -13



இசையால் வசமாக இதயம் எது ...?
இறைவனே இசை வடிவம் எனும்போது ...!
இந்த இருவரிகளுமே இசையையும் மனிதர்தம் இதயத்தையும் இருவேறாகப் பிரிக்கமுடியாது என்பதைத்தான் இயம்புகின்றன்.
காற்று ,நீர்,உணவு , போன்றே இசையும் உலகெங்கும் உள்ள மக்களால் நாடு, இன,மத,மொழி பேதமின்றி நுகரப்படுகின்றது எனலாம்.எந்த ஒரு கலையையும் தனக்குப் பிடிக்கவில்லை என ஒருவன் ஒதுக்கினாலும் அவனால் இசையை மட்டும் பிடிக்கவில்லை என நிச்சயம் ஒதுக்கிவிட இயலாது .ஏனெனில் அவன் வாழ்வே இசையால் பாடல்களால் பின்னிப் பிணைந்தவையன்றோ .பிறப்பிலே தொடங்கும் தாலாட்டும்,திருமணத்திலே இசைக்கும் மங்கள இசையும் இறப்பிலே ஒலிக்கும் சேகண்டியும் ஓலமிடும் சங்கும் வைக்கும் ஒப்பாரியும் என இசையில் தொடங்கி இசையில் நிறையும் வாழ்வல்லவா அது ...?
தங்களுக்குள் ஆயிரம் கருத்து பேதங்களைக் கொண்டுள்ள மதங்கள் தமக்குள் ஒரு ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
இறைவனுக்கு இசையால் தொடுத்த
பாமாலையால் நடத்தும் வழிபாடுதான் அது .
எனக்குமேகூட இசையின்மேலுள்ள காதல் ,வெறி ,பைத்தியம் இவற்றையெல்லாம் எனது #இசைப்_புராணம் என்னும் தொடர்பதிவில் குறிப்பிட்டுஇருந்தேன்.எழுந்தவுடன் என்னுடன் இசையும் விழித்துவிடும், குளியலின்போதும்,
கடவுளை வழிபடும்போதும்,
உணவருந்தும்போதும்
என்வீட்டு டேப்ரெகார்டரோ அல்லது பண்பலையோ இணைத்துக்கொண்டுதான் இருக்கும் .ஏதாவது நூல்களை வாசிக்கும்போதும்கூட மெல்லிய ஒலியில் (பாடல்களற்ற,வார்த்தைகளற்ற ) வெறும் கருவி இசைமட்டும் ஒலித்துக் கொண்டிருக்கும்.இரவில்
உறங்கும்வேளையில்கூட இதே கேட்டு உறங்குவதையே என் கண்கள் இன்றளவும் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளன.நான் உறங்கியபின்னரே எனது டேப்ரெகார்டர் ஆட்டோஸ்டாப்பாகி உறங்கச்செல்வது வழக்கம்.இதோ இதை நான் டைப்பும்போதும்கூட திருவெம்பாவை ஒலிப்பேழை பின்னனியில் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றது.
நிற்க ....
நாம் நூலிற்குள் நுழைவோம் ...
கர்னாடக இசை ,சாஸ்திரீயஇசை ,
ஹிந்துஸ்தானி இசை ,
மேற்கத்திய இசை ,நாட்டுப்புற இசை ,என பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு நூற்றாண்டு காலமாக திரையிசைதான் மக்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது .அதுவும் இளைஞர்கள் ,நடுத்தர வயதினர் என்று தன் காதுகளில் ஹெட்போனை செறுகிக்கொண்டு சாலையில் நடப்போரையும் ,இருசக்கர வாகனங்களில் விரைவோரையும் ,பேருந்துகளிலும் ரயில் வண்டிகளிலும் உடன் பயணிப்போரையும் பார்த்தாலே நமக்கு விளங்கிவிடும் திரையிசை நமது மக்களை பாடாய் படுத்துகிறது ; பேயாய் பிடித்து ஆட்டுகிறது என்று.திரைப்படப் பாடல்கள் இன்றைய தலைமுறையைச் சீரழிக்கின்றன என்று பரவலான ஒரு சமூகக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.இந்த நூலில் இதை அழகாக ,ஆணித்தரமாக மறுதளிக்கிறார்.
தீ , மின்சாரம் உள்ளிட்டவை போல அனைத்திலுமே நன்மையும் உண்டு தீமையும் உண்டு ..நாம் அவற்றை பயனாக்கிக்கொள்ளாமலா இருக்கிறோம் .தீயன விலக்கி நன்மையைப் பெறுவதில்லையா ....குடிப்பதற்கே அருகதையற்ற கடல்நீரிலிருந்துதானே உணவுக்கு சுவைகூட்டும் ,உடலுக்கு நலம் சேர்க்கும் உப்பைப் பெறுகிறோம் என வினவி, அன்னம் பாலொடு கலந்திட்ட நீர்க் கலவையிலிருந்து நீரை விடுத்து பாலை மட்டும் பருகுவாற்போன்று நாமும் திரைப்படங்களில் இருந்தும் ,
திரையிசைகளிலிருந்தும் தீயன விலக்கி நன்மை தரும் , நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் ,மனதிற்கு அமைதியும் ,உரமும் சேர்க்கும் நல்லிசையை ,நற்கருத்துக்களை
எடுத்துக்கொள்ள வழிகாட்டுகிறார் நூலாசிரியரின் தனது முன்னுரையில்.
இருபது தலைப்புகளில் ஆராய்ந்து ஒப்பு நோக்கி சுவைபடக் கட்டுரைகளாக்கி அருமையான விருந்து படைத்துள்ளார் நம் இரசனைக்கு .
திரையிசைப் பாடல்களை - பல்வேறு காலகட்டங்களில் ,பல்வேறு பாடலாசிரியர்களும் ,கவிஞர்களும் தந்திட்ட அரிய கருத்தாழம் மிக்க பாடல்களை நன்கு இரசித்து உள்வாங்கி ,ஆராய்ந்து இக்கட்டுரைகளை படைத்துள்ளார்.
திரையிசைகளில் காணப்படும் அல்லது பாடுபொருளாக் கொண்டு பாடப்படும்
பாடல்கள் உரைக்கின்றவற்றை அற்புதமாக வரிசைப்படுத்தியுள்ளார் .
சிறையில் பெற்ற ஞானம் தொடங்கி
திரையிசையில் உழைப்பாளர் பெருமை ,
மகளிர் நிலை ,
கம்பராமாயணம் ,
பறவைகளும் விலங்குகளும்,
எண்கள்,
நன்னெறிகள்,
நிலவு
தாலாட்டு
தாய்மை
தூது
இலக்கியங்கள்
கண்கள்
பணம்
சிரிப்பு
கதைப் பாடல்கள்
வாழ்த்துதல்
சகோதரபாசம்
கடவுள்
உவமை ஆகியவற்றை ஆராய்ந்து ,ஒப்பிட்டு
தகுந்த பாடல்களோடு ஒரு மாலையாகவே கலைநயத்துடன் கோர்த்துள்ளார்.
பெரும்பாலான பாடல்களனைத்தும் அடிக்கடி நாம் கேட்டு ரசித்த பிரபலப் பாடல்களே .
உதாரணத்திற்கு திரையிசையில் தூது என்ற தலைப்பில் ,திரைப்படங்களில்
இடம்பெற்ற கடிதத் தூது ,தென்றல் தூது ,நிலவுத் தூது உள்ளிட்ட பல தூதுப்பாடல்களை சுட்டிக்காட்டுகிறார் ..
அனைத்துமே நாம் கேட்டு இரசித்த பாடல்கள்தான்.
அன்புள்ள மான்விழியே ...
(குழந்தையும் தெய்வமும்)
நான் அனுப்புவது கடிதம் அல்ல ...
(பேசும் தெய்வம்)
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..
(பாவை விளக்கு)
பொன்னெழில் பூத்தது புதுவானில்...
(கலங்கரை விளக்கம்)
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா..
(உயர்ந்த மனிதன்)
வெண்முகிலே கொஞ்சம் நில்லு ...
(விக்கிரமாதித்தன்)
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ..
(கலங்கரை விளக்கம்)
அந்த சிவகாமி மகனிடம் தூது சொல்லடி...
(பட்டணத்தில் பூதம்)
தூது சொல்ல ஒரு தோழி இல்லயென ...
(பச்சை விளக்கு)
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை ....
(அச்சமில்லை அச்சமில்லை )
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ...
(பெரியவீட்டுப் பண்ணைக்காரன்)
என்று பட்டியலிடப்பட்ட பாடல்களில் நான் எதிர்பார்த்த சில பாடல்களை காணவில்லை
தூது சொல்வதாரடி ....
(தேவர்மகன்)
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ....
( ஈரமான ரோஜாவே )
ஓ ..தென்றலே ..ஒரு பாட்டு பாடு ..
( சந்தனக் காற்று )
இது உதாரணத்திற்குத்தான் ...எனில் நூலில் இடம்பெற்றுள்ள தலைப்பிற்கான பாடல் வரிசைகளை நீங்களே ஊகம் செய்துகொள்ளலாம் .
எனது முன்னிளமைக் காலங்களில் நிலாப் பாடல்கள் வரிசையில் நான் தெரிவு செய்து, ஒலிப்பேழைகளில் பண்ணுருட்டி ஸ்ருதி மியூசிக் நடராஜனிடம் பதிவுசெய்து வாங்கிய பாடல்கள் அனேகமாக நாற்பதுக்கும் மேலிருக்கும்.இரண்டு நைன்ட்டி கேசட்டுகளில் பதிவு செய்து தந்தார்.மேலும் தென்றல் எனும் தலைப்பில் இருபது பாடல்களை பதிவு செய்து வந்ததெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றது .
இந்நூலை நீங்கள் வாசித்ததும் திரைப்படப் பாடல்களின் மீதான உங்கள் பார்வையும் இரசனையும் நிச்சயம் வேறொரு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது நிச்சயம் ...!
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 9 நாட்கள் .

திருநூலாற்றுப்படை -12

புத்தகத் திருவிழா -2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -12



நூலாசிரியர் தொ.ப என சுருக்கமாக அழைக்கப்படுபவர்.தமிழகத்தின்
முன்னனி ஆய்வாளர்களில் ஒருவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது பாளையங்கோட்டையில் வசித்துவருகிறார்.டிசம்பர் 2009ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்நூல் ஆகஸ்டு 2017 ல் பதின்மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளதெனில் ஆய்வு வட்டத்திற்கு வெளியிலும் இந்த நூல் பெற்றுள்ள வரவேற்பை அறியலாம்.
சித்தன்னவாசல் குகை ஓவியங்களுள் ஒன்றைத் தன் மேலட்டையில் கொண்டிலங்கும் இந்நூல் , உள்ளேயும் ஆங்காங்கு சில கோட்டோவியங்களையும் கொண்டுள்ளது.
உள்ளே மொத்தம் ஏழு கட்டுரைகள்.
தமிழ் ,வீடும் வாழ்வும் ,
தைப்பூசம் ,பல்லாங்குழி,
தமிழக பௌத்த எச்சங்கள்,
பேச்சு வழக்கும் இலக்கண வழக்கம் ,
கறுப்பு என்பவை அவை .
ஒவ்வொரு தலைப்பின்கீழும் நாம் சற்றும் எதிர்பாரா துணைத் தலைப்பின்கீழ் நம்மோடு பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
உதாரணத்திற்கு முதல் அத்தியாயமான தமிழ் என்ற தலைப்பில் நாம் சற்றும் எதிர்பாராத, உணவைத் தொடுகிறார்.பருகும் தண்ணீர்,தமிழர் உணவு,உணர்வும் உப்பும்,உணவும் நம்பிக்கையும் எண்ணெய்,,பிச்சை ,தெங்கும் தேங்காயும்,உரலும் உலக்கையும்,சிறு தெய்வங்களின் உணவு என்ற துணைத் தலைப்புகளின்கீழ் பண்டைக்காலம் முதல் தமிழர்களிடையே உணவோடும் உணர்வொடும் , வாழ்வியல் முறையோடும் நெறியோடும் இரண்டறக் கலந்துவிட்ட பண்பாட்டு விழுமியங்களை நம் கண் முன் காட்சிப்படுத்துகிறது இவரது நடை.
உணவிற்கு வழங்கப்படும் பெயர்களின் காரணங்கள்,சங்க இலக்கியங்களில் கிடைக்கும் உணவுக் குறிப்புகள்,பழந்தமிழர் உணவுவழக்கம் ,மகப்பேற்றுத் தீட்டு , எங்கள் வீட்டில் இன்றளவும் அனுசரிக்கப்படும் செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடு என்அழைக்கப்படும் ஔவையார் நோன்பு - இதில் படையலிடப்படும் உணவு வகைகள் ஆண்களின் கண்களில் படக்கூடாது என்ற காலம்காலமான நம்பிக்கைகள் என அனைத்தயும் தொட்டுச் செல்கிறார்.
அதேபோல் வீடும் வாழ்வும் என்ற தலைப்பின்கீழ் வீடு ,தோட்டம், தமிழர்தம் உடை ,நெசவு,உறவுப் பெயர்கள், பெயர்வைக்கும் முறைகள்,பெயர்க் காரணங்கள்,உறவு முறைகள், தாலியும் மஞ்சளும் ,சங்கும் சாமியும் ஆகிய தலைப்புகளை எடுத்துக்கொண்டு நாம் அறிந்திடாத பல தகவல்களை சங்க காலம்தொட்டு நிலவிவரும் நமது பண்பாடு ,கலாச்சார விழுமியங்களை -
ஆடைகள், அணிகலன்கள் , தாலியணிவது ,மஞ்ள்பூசிக்குளிப்பது,
ஆடைகள் நெய்வது,பாய் நெசவு , சங்கணிகள் ,சங்கின் வகைகளும் பயன்பாடும் என இன்றளவும் தொட்டுத் தொடரும் அத்தனை வழக்கங்களின் ஆணிவேர் வரை சென்று அவற்றின் ஆதியினை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்துகிறார்.
மற்றொரு அத்தியாயமான தைப்பூசம் என்ற தலைப்பில் ஏதோ வடலூரையும் ,வள்ளலார் பெருமானையும் ,தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களைக் கூறப் போகிறார் என உள் புகுந்தால் நமக்குக் கிடைப்பவை வேறு .பொங்கல் பண்டிகை முறைகள், தீபாவளியின் வரவு ,விநாயகர் வழிபாட்டு முறைகள், துலுக்க நாச்சியார்,மதங்கள், சாதிகள்,தமிழகத்தின் தொல்குடிகளான பறையர்,மத்தியானப் பறையர்,பண்டாரம் -இவர்களின் வாழ்வியல் ,பார்ப்பனர்களுக்கு முந்தைய பழைய குருமார்கள்,இசுலாமியப் பாணர்கள் என நமக்கு வெவ்வேறு செய்திகளை மாலையாக்கி அணிவிக்கிறார்.
பல்லாங்குழி என்னும் தலைப்பில் அந்த விளையாட்டை விளையாடும் முறை மட்டுமன்றி அதன் தாத்பர்யம் ,அடிக்கூறுகள் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறார்.மேலும் ,ஆடு புலியாட்டம் , தாயக் கட்டைகள் , சூதாட்டம்,எனப்போய் இன்றைய கலத்தில் நடைபெறும் சூதாட்டத்திற்கும் விளையாட்டுக்கும் உள்ள தொடர்பினை நையாண்டியோடு இடித்துரைக்கிறார்.மேலும் மகப்பேறற்றோர் தவிட்டுக்கு தத்தெடுத்துக்கொள்ளும் முறை ,எடுத்து வளர்க்கும் முறைகள் பற்றியும் பேசுகிறார்.துடுப்புக்குழிப் போடுதல் எனும் தலைப்பு மகப்பேற்றின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இழவு வீட்டில் நடக்கும் ஒரு சம்பிரதாயமோ நம்மை திகைக்க வைக்கிறது .செம்பில் மூன்று முறை மலர்களிட்டு இறந்தவனின் மனைவி மூன்றுமாதக் கருவினை வயிற்றில் சுமந்திருப்பதை ஊருக்கு அறிவிக்கும் மூதாட்டியின் செயல்கள் அங்கு கூடியுள்ளோரை மட்டுமன்றி நம்மையும் அனுதாபப்பட வைக்கிறது. என்ன ஒரு பண்பாட்டு அசைவு !அத்துடன் கல்லறையைப் பற்றிய செய்திகளையும் தரத்தவறவில்லை ஆசிரியர்.
பௌத்தம், சமணம், நிர்வாணம்,சைவ மரபுக்கு மீண்டும் திரும்பிய திருநாவுக்கரசர், சித்தர்கள்,சித்தர் பாடல்கள் என பல சமயம் சார்ந்த தகவல்களை தந்துசெல்கிறார்.
நிறைவாக நிறத்தைக் கையிலெடுக்கிறார்.அதுவும் கறுப்பு நிறம்.அழகியல் சார்ந்து அந்நிறம் நம்மில் ஏற்படுத்திவைத்திருக்கும் தாக்கம் .சமூக முரண்கள் மனிதத் தோலின் நிறத்தைக் கொண்டு வெளிப்படுகின்ற வழக்கத்தை ஆராய்கிறது இக்கட்டுரை .கருப்பு நிறம், சிவப்பு நிறம் கொண்ட கடவுளர்கள் தொடங்கி சாதீய அடிப்படையிலான நிறங்களை அவர் அலசும் அலசலில் ஆண்டாண்டு காலங்களாக ஏறியுள்ள நம் மனதின் சாயமே நீங்கிவுடுகின்றது எனில் அது மிகையன்று.
இந்நூலின் முகப்புரையில் குறிபிடப்பட்டிருப்பது போன்று தொ.ப அவர்களிடமிருந்து தெறிக்கும் கருத்துகளும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்து பெற்ற பட்டறிவும் உண்மையிலேயே ஒரு வாசகரை மலைக்க வைப்பது நிச்சயம். நான் இன்னமும் அந்த மலைப்பிலிருந்து மீளவில்லை .
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 11 நாட்கள் .

திருநூலாற்றுப்படை -11

திருநூலாற்றுப்படை

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 11



பொதுவாகவே பயணங்கள் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை .பயணம் அறிவை விசாலமாக்கும் என்பது முதுமொழி .பயணங்கள் மேல் எனக்கு மற்றவர்களை விட ஓர் அலாதி ஈர்ப்பு உண்டு .என் வாழ்நாளில் பெரும் பாகத்தை பயணங்களுடன்தான் கழிக்கிறேன்.எனது பணியும் கூட நிறைய பயணங்களை எனக்காக சாத்தியமாக்கித் தருகின்றது .
எனது நூலகத்தில்கூட பயணம் சார்ந்த கட்டுரை நூல்களுக்கு தனியாக ஓர் இடமும் உண்டு.பயணக் கட்டுரைகள் எப்போதும் என்னை ஈர்த்து வருபவை.
நான் சிறு வயதில் படித்து மிகவும் ரசித்த சிந்துபாத் கதைகள் கூட அவனது கடல் பயணம் சார்ந்தவைதானே ..!
நெ.து.சு, கல்கி, பரணீதரன் தொடங்கி சமீபத்திய சமீபகாலங்களில் எழுதிவரும் டாக்டர்.சுதா சேஷையன் வரை பலரது பயணக்கட்டுரைகள் இன்னமும் வாசகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகின்றன.
பயணம் ஒரு வித போதை .
எஸ்.ரா வின் ' தேசாந்திரி ' எனக்குள் ஒரு மயக்க உணர்வையே உண்டாக்கியிருக்கிறது.
நாம் நம் சிறு வயதில் வரலாறு புத்தகங்களில் வாசித்த கொலம்பஸ்,மார்க்கோபோலோ ,
வாஸ்கோடகாமா,யுவான் சுவாங் இவர்களெல்லாம் யாத்ரீகர்களே .
இந்த நூலும் இவர்களைப் பற்றிய ,இவர்களைப் போன்ற பயண ஆர்வல்களைப் பற்றிய ,
இவர்களின் கடற்பயண அனுபவங்கள் பற்றிய தொகுப்பே .
விகடன் குழும நூல்களுள் ஒன்றான சுட்டி விகடனில் தொடராக வந்த கட்டுரைகள் அழகுறத் தொகுக்கப்பட்டுள்ள பொக்கிஷம்தான் இந்நூல்.இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயணங்கள் ஒவ்வொன்றும் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தவை.
பயணங்கள் எதையெல்லாம் சாதித்தன என்பதையெல்லாம் பாதை எனும் தனது முன்னுரையில் பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.
உண்மையில் புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்படக் காரணமே கணற்பயணங்கள்தானே!
எனக்கும்கூட வாழ்வில் ஒருமுறை கடலில் ,கப்பலில் பயணிக்க ஆசை உண்டு .இதற்குமுன் ஒரு இயந்திரப்படகேறி குமரிக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும் ,திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வந்திருக்கிறேன்.அது சில மணி நேரப் பயணமே ! மற்றொருமுறை பிச்சாவரத்திற்கு அருகில் உள்ள எம்ஜியார் திட்டு என்னும் இடத்திற்கும் சென்றுள்ளேன்.இதெல்லாம் ஒரு கடற் பயணமா என்று சிரிப்பது எனக்குத் தெரிகிறது. எனக்குமே கூட அதை எண்ணினால் சிரிப்பு வருகிறதுதான்.
ஆனால் எனது எண்ணம் வேறு .கப்பலில் ஏறி ஒரு நெடும்பயணம் செல்லவேண்டும்.ஏதேனும் ஒரு அண்டை நாட்டுக்கு .சிங்கப்பூர் ,மலேசியா போன்று . அல்லது குறைந்தபட்சம் நமது நாட்டிற்குட்பட்ட அந்தமான் ,நிக்கோபார் தீவுகளுக்கேனும் பயணம் செய்ய பேராவல்தான்.
கப்பலும் தயார். கடலும் தயார்.என்று இந்நூலின் நிறைவில் என் எரியும் ஆவலில் நெய்யூற்றுகிறார் மருதன்.ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வம் தூண்டுகின்றன.
இடையிடையே பயணிகளின் படங்கள்வேறு.நிச்சயம் இந்நூல் உங்களைக் கவரும்.
பயணங்கள் முடிவதில்லை...!
ஆம் ,பயணங்கள் ஒருபொழுதும் முடிவதில்லைதான்.
கவுன்ட் டவுன் - 12 நாட்கள்.

Sunday, 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...10

எனது நட்பு வட்டத்தில் உள்ள ஆசிரியத் தோழமைகள் நிச்சயம் இதனை படிக்கவும் ,பிற ஆசிரியர்களோடு பகிரவும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்
சென்னை புத்தகத் திருவிழா -2019
ிறப்புப்பதிவு
நூல் அறிமுகம் - 10



இந்த நூல் பற்றிய அறிமுக உரைக்கு முன் எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழ் பெற்ற சிறுகதையான
#மரி_என்கிற_ஆட்டுக்குட்டி
(பள்ளிச் சூழல் சார்ந்த கதை) என்னும் படைப்பிற்கான அவரது முன்னுரையை இங்கு மேற்கோள் காட்டவேண்டியது அவசியமாகிறது .ஒருவகையில் இது அவருக்குச் செய்யும் எழுத்தாஞ்சலியும் கூட
ஒருவேளை அவர் இன்றைய மேல் நிலைப் பள்ளிச் சூழலில் தாமும் ஒரு ஆசிரியராக பணிபுரிந்து வந்திருந்தால் அவரது நிலைப்பாடு வேறாக இருந்திருக்கலாம் .
யானைகள் பிச்சை எடுக்கின்றன. கரடிகள் சைக்கிள் விடுகின்றன என்பது போன்ற விஷயங்கள் நடைமுறையான கருணை இல்லாத சமூகத்தில் வாழ்கிற நமக்கு, குழந்தைகள் சித்திரவதைப்படுகின்றன என்பது ஆச்சரியம் இல்லை.
கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் குழந்தைகளை அடக்கிச் சிறைப்படுத்திப் 'பாடம்' நடத்துகிற பள்ளிகள், ஆசிரியர்கள் அதற்குப் பிறகும் வீட்டுப்பாடம் கொடுத்துக் குழந்தைகளின் மாலைகளைக் களவாடுகிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் நிச்சயம் சொர்க்கம் போகமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஒரு மாபெரும் வாணலியில் அந்த ஆசிரியர்கள் விளக்கெண்ணையில் வறுக்கப்படுவார்கள் என்பதிலும்‌ எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூடக் கொடுக்கமுடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப்போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம்.
இதுதான் அந்த முன்னுரை .
இனி என்னுரை ...
பள்ளியில் பயில வரும் தம் இரண்டாம் குழந்தைகள் எனும் மாணவ சமுதாயத்தின் மேல் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் எனும் ஆசிரியர்கள் சமுதாயம்
வகுப்பறையில் காட்டும் வன்முறையின் மீதான பிரபஞ்சனின் பார்வையின் உள்ளக்குமுறல்களின் வார்த்தை வடிவங்கள்தான் இச்சிறு முன்னுரை .
மாணவர்களை அடித்தல் ,உதைத்தல் ,
மண்டியிடச்செய்தல் ,தோப்புக்கரணம் போடச்செய்தல் இன்ன பிற உடல்ரீதியான தண்டனைகள் ,அனைத்து மாணவர்முன் வசைமாரி பொழிந்து தலைகுனிய வைத்தல் ,உருவத்தை ,ஆடை அணியும் முறையை வைத்து அவர்களை எள்ளி நகையாடி மனம் நொறுங்கச் செய்தல் போன்ற மன ரீதியான தண்டனைகள் மட்டுமல்ல வன்முறை என்பது .வகுப்பில் மாணவர்களை நோக்கி ஏய் ..! பேசாத...!
கைய கட்டு ! அடச் சீ ...வாய மூடு ! கப்சிப்னு அமைதியா இரு! என்பதான வார்த்தைப் பிரயோகங்கள் கூட ஒருவகையில் அவர்கள் மீது நாம் காட்டும் வன்முறைதான் எனலாம் .
அப்படிப் பார்க்கப் போனால் இன்றைய பள்ளிச் சூழலில் பணிபுரியும் அனேகமான 99% ஆசிரியர்கள் பிரபஞ்சனின் சாபப்படி நரகம் பார்ப்பது நிச்சயம் .மீதமுள்ள ஒரு சதவிகிதம்பேர் உண்மையிலேயே தெய்வீகப் பிறவிகள்தாம்.ஒன்று அவர்கள் குழந்தைமையைக் கொண்டாடுபவர்களாக இருப்பார்கள்.இல்லை ஜென் நிலையில் ஜடமாகிப் போய் பள்ளிக்கு வந்து பணிபுரிபவர்களாக இருப்பர்.நிச்சயம் நான் இரண்டாம் வகையில் அடங்கமாட்டேன்.
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் ,தொடக்கப் பள்ளிகளில் பயிலும் பாலகர்கள் மேல் , சிரிக்கும் பூக்களின் மேல் இப்படிப்பட்ட வன்முறைகளைக் காட்டுபவர்கள் நிச்சயம் அரக்க மனம் படைத்தவர்களே ! அதில் ஐயமொன்றும் இல்லை .துரதிருஷ்டவசமாக அப்படியும்கூட சில ஆசிரியப் பெருந்தகைகள் உள்ளார்கள் என்பதனை பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் அதே நேரம் வளரிளம் பருவத்தினர் பயின்றுவரும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையோ பரிதாபம்.
வயதின் காரணமாக , வளரும் சூழல் காரணமாக ,பழகும் நட்புச் சூழல் காரணமாக
வகுப்பில் அடங்காதிருக்கும் மாணவ மாணவியரை ,தேவையில்லாத சேட்டைகள் புரிந்து வகுப்பறைச் சூழலைக் கெடுப்பவர்களை ,சக மாணவர்களுக்கும், ஏன் சில சமயங்களில் ஆசிரியர்களுக்குமே
இடைஞ்சல் தரும் பேர்வழிகளையும் என்னதான் அடிக்காமல் குணமாக வாயால் சொன்னாலும் தறிகட்டுப்போய் மூர்க்கமாக ,முறைப்புத் தனமாக நடந்துகொள்ளும் மாணவர்களைக் கையாளத் தெரியாமல் ,அரசின் உத்தரவுக்கு பயந்து அல்லது கீழ்படிந்து கைகள் கட்டப்பட்டுவிட்டதாகப் புலம்பிக்கொண்டு எக்கேடும் கெட்டு ஒழியட்டும் ...நமக்கு ஏன் வம்பு என விட்டுவிட்டு தேமே என பாடத்தை நடத்திவிட்டு சம்பளத்தை வாங்கிக்கொண்டு நல்ல பிள்ளைகளாய்(!?) வீட்டிற்குச் செல்லும் ஆசிரியர்கள் ஒரு வகை .
மாணவர்கள் செய்யும் சேட்டைகளை ஆரம்பத்தில் சகித்துக்கொண்டாலும் போகப் போக சற்றே பொறுமை இழந்துபோய் பொறுத்துக்கொள்ள முடியாமல் இரத்த அழுத்தம் எகிறி ,வசைமாரி பொழிந்து அர்ச்சிப்பதும் ,அரசின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு என்ன ஆனாலும் பாத்துடறேன் ஒருகை என்று பிரம்பைக் கையில் ஏந்தி சம்பந்தப்பட்டவர்களையும் சில சமயங்களில் சம்பந்தமே இல்லாதவர்களையும்கூட வெளுத்துக்கட்டும்
ஆசிரியர்கள் இரண்டாம் வகை .சமயத்தில் இவர்களுக்கு பிரம்பும் தேவைப்படாது .தம் கரங்களே ஆயுதம் .( ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா ...பாக்கறியா...பாக்கறியா...?)
மூன்றாவதாக இன்னொரு ரகம் இருக்கிறது.
எதற்கெடுத்தாலும் தர தரவென்று மாணவர்களை தலைமை ஆசிரியரிடம் பிறர் பார்க்க பார்க்க இழுத்துச் சென்று அவரிடமே சார்...இவனுக்கு டிசி கொடுத்து துரத்துங்க சார்... இவனோட எல்லாம் மாரடிச்சு சாக முடியாது ஒன்னு இந்த ஸ்கூலுல இவன் இருக்கனும் ...இல்ல நான் இருக்கனும் ..என சத்தமிட்டு இரைந்து தலைமை ஆசிரியர் அறையே கலகலத்துப்போகும் அளவுக்கு பொறுமை இழந்துபோய் அலப்பறை செய்யும்
ஆசிரியப் பெருமக்களும் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கத்தானே செய்வார்கள்...!
ஆக இந்த மூன்று வகையினருக்கும் இந்நூல் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான்.
21 ஆம் நூற்றாண்டின் தோழன் இந்நூல் என அறிமுகப் படுத்தும் பதிப்பகத்தார்
கல்வியாளர்கள் வழியே
தண்டனையில்லாத பயிற்றுமுறை
வன்முறையில்லாத வகுப்பறைநோக்கி
புதிய பாதை அமைக்கிறார்
ஆயிஷா நடராசன் என்று முன்மொழிவை வைத்துள்ளனர் பின் அட்டையில்.
அது உண்மைதான்.
குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்...?எனத்துவங்கும் முதல் அத்தியாயம் நம்மை உள்ளே பரபரவென விடை காணும் சிந்தனையோடு அழைத்துச் செல்கிறது .நீங்கள் குருவா ...? ஆசிரியரா என்னும் மூன்றாம் அத்தியாயத்து வினா நம்மைத் திகைப்படையச் செய்வதொடு அதே வினாவை எடுத்துக்கொண்டு நம்மை அகவெளிப் பயணம் அழைத்துச் சென்றுவிடுகிறது .
இருபத்தைந்து தலைப்புகளைக் கொண்டுள்ள இந்நூலில் அந்தத் தலைப்பகளெங்கும் வினாக்களாகவே விரவிக் கிடக்கின்றன.அவை ஒவ்வொன்றும் ஒரு சராசரி ஆசிரியரின் உள்ளத்திலே எழுந்து அடங்குபவையே .அவற்றிற்கு விடை கிடைத்துவிடுகிறது அந்தந்த அத்தியாய நிறைவில்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் சிறு முன்னுரையே போலும் ஒரு கல்வி சிந்தனையாளரின் பொன்மொழியும் அலங்கரிக்கிறது .
அவற்றுள் கல்வியாளர் கமலா முகுந்தாவின் வரிகள் நம்மை மனதோடு பளார் என ஒரு அறை விட்டுத் திகைக்கவைக்கின்றன.
அதே போல் தேவையான இடங்களில் மிக முக்கியமான புள்ளி விபரங்களையும் போகிறபோக்கில் அள்ளித் தெளித்திருப்பதில் நூலாசிரியரின் மெனக்கெடல் நன்கு தெரிகின்றது .
ஒன்று சொல்வேன். நிச்சயம் இந்நூலை வாசித்து உள்வாங்கியதும் ...நன்றாக கவனியுங்கள்....வாசித்ததும் அல்ல ...வாசித்ததை உள்வாங்கியதும் ...
நிச்சயம் இன்று புதிதாய் பிறந்தோம் என்று உணர்வீர்கள் ...
உமது வகுப்பறைச் சூழல் வசந்த காலங்களை வரவேற்கத் தயாராகிவிடும்...
உம் பள்ளி நுழைவு மாணவர்களின் வரவேற்புக் கொண்டாட்டமாகிவிடும்....
உமது குழந்தைகளின் வணங்கத்தக்க குருவாவீர்கள்...!
உமது மாணாக்கர்கள் செய்யும் வகுப்பறைக் குறும்புகளை மாலைகளாக்கி அணிந்து மகிழ்வீர்கள்....!
அவர்களது குடும்பச்சூழல் அவர்களது கண்களில் ஏற்படுத்தும் கண்ணீர் முத்துக்களை பன்னீர் முத்துகளாய் ஒற்றியெடுக்கும் பரிவான கைக்குட்டைகளாய் உமது கரங்கள் மாறிவிடும்....!
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயான கதிரோனைப் போலவே ,உமது பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களையும் பாசத்தோடு ,
வாஞ்சையோடு அரவணைக்கும் ஆயிரமாயிரம் மானசீகக் கரங்கள்
உமக்கு முளைத்துவிடும்
தேவதைகளின் வெண் சிறகுகள் போலவே ...!
குதூகலமான பேரிரைச்சல்கள் கேட்கும் மகிழ்ச்சி வகுப்பறைக்குள் வருக ...வருக ...ஆசிரியரே
என நம்மை வரவேற்று
வகுப்பு முடிந்து போகும்போது இதைவிட உற்சாகமான வகுப்பறையாக இதனை நீங்கள் கண்டிப்பாக மாற்றுவீர்கள் என்றும்
நம்பிக்கை தெரிவிக்கின்றார்.ஆயிஷா நடராசன் அவர்களின் அந்த நம்பிக்கை பொய்த்துப் போகாது என்பது நிச்சயம்.
வாழ்த்துகள் சார்.உங்களிடமிருந்து இதுபோல பல படைப்புகளை ஆசிரியர் சமுதாயமும் ,மாணவர் சமுதாயமும் ,கல்வியுலகமும் எதிர்பார்க்கின்றன.
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 13 நாட்கள் .

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...9

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 9


மனக்குகைச் சித்திரங்கள் என்னும் இந்நூல் ஒரு டைரிக்குறிப்பு எனலாம்.
ஆனால் மனமெனும் நாட்குறிப்பில் எழுதப்படாத நினைவலைகளாய் உறைந்துபோன சம்பவங்களாய் நம் ஒவ்வொருவரின் நினைவுப் பக்கங்களிலும்
பதிந்துபோய்க் கிடக்குமே ...
அவ்வப்போது காலமெனும் கோழி இரக்கமற்றுக் கிளறும்போது இலேசாக எட்டிப்பார்த்து நம்மை நிகழ்காலத்தில் இருந்து தடக்கென இறந்த காலத்திற்குள் இழுத்துப்போட்டு கால வெள்ளத்தில் நினைவலைகளில் நீச்சலிடவைக்குமே ....
நமது இருண்ட மனக்குகையின் சொரசொரப்பான சுவர்களிலே காலச்சுவடுகளால் மங்கிய வரிவடிவச் சித்திரங்களாய்த் தங்கிவிட்ட நம் வாழ்வில் பயணத்தின் இடையில் சந்திக்கும் ,குறுக்கிடும் ,இடறிவிழும் ,எந்த எதிர்ப்பும் இன்றி வாஞ்சையாய் தலைவருடும்,கனவில் கண்ட காட்சிகளாய், புகைவடிவங்களாய் மறைந்து போய் மங்கலாகும் மனிதமுகங்களின் மீட்டுருவாக்கச் சிந்தனைகளின் நூல்வடிவம்தான் இந்நூல்.
மானுடம் என்னும் அந்த ஒற்றைச் சொல் இன்னமும் உயிர்ப்போடுதான் இருக்கிறதா ஆத்மார்த்தி என்ற மாலன் அவர்களின் வினாக் கல்லுக்கு ஆத்மார்த்தியின் உள்ளக் குளத்தின் நினைவலையில் ஏற்பட்ட அதிர்வலைகள்...பதில்களாய்
மனக்குகைச் சித்திரங்கள் தொடங்கி
வாழ்தல் இனிதினும் இனிது என்று
வாழ்வைக்கொண்டும் வைரவரி அத்தியாயங்களோடு நிறைவடைவது இந்நூல் மட்டும் அல்ல ...வாசிக்கும் நம் மனமும் கூடத்தான் ...
பழையப் புத்தகக் கடை ஆறுமுகம்,
சாலையில் சித்திரம் வரையும் கந்தன்,
சித்தம் கலங்கித் திரியும் மல்லிகா அக்கா,
கிடைத்த வேலையைச் செய்யும் பாலமூர்த்தி அண்ணன் (இவருடைய அகதிக்கும் அனாதைக்கும் வித்தியாசம் இருக்குதுதானே என்ற கேள்வி வாசிக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் விழும் அடி)
எனத் தொடங்கி ஆசிரியை அகிலா ...
பரமண்ணே என விளிக்கப்படும் பரமசிவம் ...
என இன்னும் இன்னும் இந்நூலெங்கும் இருபத்தொரு அத்தியாயங்கள் வழியே நம்மோடு உறவாடும் மனிதர்கள்....
இவர்களெல்லாம் ஏதோ ஆத்மார்த்தி சந்தித்த ஜீவன்கள் என்றா நினைக்க முடிகிறது ...?
இல்லையில்லை ...நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி அங்குமிங்கும் சந்திக்கிற சாதாரண மனிதர்கள்தான்.
இந்த நூல் ஒரு மெழுகுவர்த்தி .இதனைக் கையில் ஏந்துங்கள்...
உங்கள் மனமெனும் குகைவழி உள் நுழையத் தொடங்குங்கள் ...
உள்ளே பயணிக்க பயணிக்க வழிநெடுகிலும்
குகைச் சுவரில் தீட்டப்பட்ட சித்திரங்களை
இந்நூலின் வெளிச்சம் உங்கள் அகக் கண்களுக்குக் காட்சிப்படுத்தும்.
இது சத்தியமான நிதர்சனம்...!
நன்றி ஆத்மார்த்தி ரவிசங்கர் .
தொடர்புக்கு :9524727000
பின்குறிப்பு : இவர் முகநூலிலும் எனது நட்பு வட்டத்தில் இருக்கிறார்...ஆனால் இப்பொழுதெல்லாம் இவரது பதிவுகள் காணக்கிடைப்பதில்லை .ஒருவேளை unfriend ஆகியிருக்கலாம்.

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...8

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 8



திரு .சொ.முத்துக்குமார் அவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைக் காசாளராக பணியாற்றி வருபவர்.பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர். எனது நண்பரும் கூட.நல்லதொரு பயண ஆர்வலர் .தொல்பொருள் தேடலி்ல் ஆர்வம் மிகக்கொண்டு அதுதொடர்பான பயணங்களை சலிப்பின்றி மேற்கொள்பவர் .அப்படிப் பெற்ற தனது பயண அனுபவங்களை ஆவணப்படுத்தி நூல்களாகவும் எழுதி வெளியிடுவதன் மூலம் மற்ற வரலாற்று , தொல்பொருள் ,பயண ஆர்வலர்களுக்கு அனுபவ ஆசானாகவும் நல்லதொரு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார் .அப்படிப்பட்ட அனுபவங்களின் தொகுப்புதான் இந்நூலும் கூட .
ஒவ்வொன்றுமே ஒவ்வொருவகையான அனுபவக் கட்டுரைகள்.தனது மகனோடும் மகளோடும் உரையாடும் பாணியில் எழுதப்பட்ட இந்நூலில் அவர் உண்மையால் உரையாடி உறவாடுவது நம்மோடுதான்.தனது நிறைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் என்னும் ஊரின் சிறப்பை விவரிக்கும் அத்தியாயத்தோடு தொடங்கும் இந்நூல் இரண்டாம் புத்தர் என அழைக்கப்படும்
ஸ்ரீ நாராயணகுரு என்னும் மகானின் வரலாற்றைத் தொட்டு பழையனூரின் சாட்சி பூதேஸ்வரரை வணங்கச் செய்து ,
தசரத் மான்ஜியின் மலைக்குடைவுப் பாதையில் நம்மை கரம் பிடித்து அழைத்துச் செல்கிறது .
பின்னர் Dead Sea என அழைக்கப் படும் சாக்கடலின் அதிசயச் செய்திகளை அறியச் செய்து பின்னர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான கோரக்கரின் ஜீவசமாதி அமந்திருக்கும் முகாசாபரூர் என்னும் தலத்தினை தரிசிக்கச் செய்து ,தென்னிந்திய அஜந்தாவான பனைமலைப் பேட்டையின் சித்திர அதிசயத்தைப் பருகச்செய்து ,குடவறைக் கோயில்களின் சிற்ப மகோன்னதங்களை ரசிக்கவைத்து பல்லவ மன்னர்களின் கலை தாகம் கண்டு மலைக்கவைக்கிறது.
தொடர்ந்து மேல் சித்தாமூர் சமணப் பள்ளிகளை ,சமண மடங்களை தரிசி்த்த கால்களை அங்கிருந்து நேராக திருவல்லிக்கேணி அருகில் உள்ள திருவெட்டீஸ்வரன் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது .நிறைவாக வேலுநாச்சியாரின் தியாகக் கதையைக் கூறி
வேலுநாச்சியாரின் வைரத் தாலியை தரிசிக்க சிவகங்கைக்கு அருகில் உள்ள
அரியாக்குறிச்சியில் தனது பயணத்தை இல்லை ...இல்லை ...நமது பயணத்தை பூரணமாக்குகின்றன இவரது கட்டுரைகள்.
இடையில் தகவல் இடைச்செருகலாக
செல்வச் சீமான் டாட்டா மற்றும் நாம் அதிகம் அறிந்திராத புரட்சி வீரர் பாலமுகுந்த் ஆகியோரது கதைகளையும் கூடுதலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
மொத்தத்தில் நல்லதொரு பயணக் கட்டுரைகளை வாசித்த திருப்தி .
கவுன்ட் டவுன் - 15 நாட்கள் .