Thursday 21 June 2018

ஆளுநர் விருது பெற்ற சாரணர்கள்

        இன்று காலை ஆளுநர் விருது பெற்ற சாரணர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு பூவராக மூர்த்தி அவர்களிடமும் துணை தலைமை ஆசிரியர்கள் திருமதி அமலி ,திருமதி கலைச் செல்வி ஆகியோரிடமும் வாழ்த்து பெற்றனர் .

பண்ணுருட்டி அரசுப் பள்ளி சாரணர்களுக்கு ஆளுநர் விருது

பண்ணுருட்டி அரசுப்  பள்ளி சாரணர்களுக்கு ஆளுநர் விருது 

            பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாரணர்களுக்கு ஆளுநர் விருது வழங்கப் பட்டது .சென்னை ஆளுநர் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முன்னிலையில் மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் இவ்விருதை கிருஷ்னேஸ்வரனுக்கு வழங்கினார் .கிருஷ்னேஸ்வரனுடன் அஜீத் குமார் ,அன்பரசன் ,ஹேமச்சந்திரன் ஆகிய சாரணர்களும் இவ்விருதை பெற்றுள்ளனர் .

         சாரணர் இயக்கம் ஒரு உலகளாவிய இயக்கமாகும். பாரத சாரண சாரணிய இயக்கத்தால் வருடந்தோறும் சிறந்த சாரணர்களுக்கு வழங்கப்படும் மாநில அளவில் மிக உயர்ந்த விருதுதான் ராஜ்யபுரஸ்கார் விருது என அழைக்கப்படும் ஆளுநர் விருது .ஒரு மாணவர் சாரணராக இணைந்து மூன்று வருடங்களில் பல படிநிலைகளைக் கடந்து , பல்வேறு சமுதாய நல சேவைகளை புரிந்து திறமை காண் சின்னங்களையும் ,பல சிறப்புச் சின்னங்களையும் பெற வேண்டும் . அதன்பின்னர் நடைபெறும் சோதனைமுகாமில் முதலுதவி ,ஆக்கல்  கலை  , கூடாரம் அமைத்தல் ,அளவிடுதல்,வரைபடப் பயிற்சி மற்றும் எழுத்துத்தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்படுவார் .அவ்வகையில் பல் சாரணர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் ஒரு மாவட்டத்துக்கு நான்கு சாரணர்கள் நான்கு சாரணியர்கள் மட்டுமே ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவுக்கு  அழைக்கப் படுவார்கள் .இது வரையிலும் இவ்வாய்ப்பானது  பிரபலமான தனியார் பள்ளி அல்லது நிதி உதவி பெரும் பள்ளியின்  சாரணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.நமதுகடலூர் மாவட்டத்திலேயே .முதன்முறையாக ஒரு அரசுப்பள்ளிக்கு இம்முறை இந்த பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டது அந்த அடிப்படையில் கடந்த 14 -06 - 2018 ,வியாழக் கிழமை அன்று சென்னை ராஜபவனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக சாரண ஆசிரியர் முத்துக்குமரன் இப்பள்ளியின் சாரணர்கள் நால்வருடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கல்வியமைச்சர் மாண்பு மிகு செங்கோட்டையன் ,பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும்  மாநில முதன்மை ஆணையருமான உயர்திரு இளங்கோவன் ,மாநில சாரணத்   தலைவர் உயர்திரு மணி உள்ளிட்ட சாரணப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில்தான் மேதகு ஆளுநர்,பண்ணுருட்டி அரசுப் பள்ளி சாரணர் கிருஷ்னேஸ்வரனுக்கும் சிதம்பரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சாரணி கார்த்திகாவுக்கு ராஜ்யபுரஸ்கார் விருதினை வழங்கிப் பாராட்டினார் .

          பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாரணர்கள் வருடந்தோறும் இவ்விருதுகளை பெற்று வந்தபோதிலும் கூட ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.இவ்வாய்ப்பை வழங்கிய மாவட்ட சாரணச் செயலர் உயர்திரு செந்தில் குமார்,மூத்த சாரணப் பயிற்சியாளர் உயர்திரு இளையகுமார், பயிற்சி ஆணையர் உயர்திரு வேலாயுதம் ,அமைப்பு ஆணையர் செல்வி கயல்விழி உள்ளிட்ட அணைத்து மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு பண்ணுருட்டி பள்ளியின் சாரணர் படையை மிகச் சிறப்பாக செயல்படுத்தி பள்ளியின் செயல்பாடுகளை உலகறியச் செய்துவரும் சாரண ஆசிரியர் திரு முத்துக் குமாரனையும் பாராட்டுகிறோம்.மேலும் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த  சாரணர்களையும் வாழ்த்துகிறோம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர்திரு பூவராகமூர்த்தி கூறினார் .மேலும் துணைத் தலைமை ஆசிரியர்கள் திருமதி அமலி ,திருமதி கலைச்  செல்வி மற்றும்  அனைத்து ஆசிரியர்களும்  விருது பெற்ற சாரணர்களை வாழ்த்தினர் .

          இப்பள்ளியின் சாரண ஆசிரியர் முத்துக் குமரன் தனது சாரண சேவைகளுக்காக சர்வதேசவிருதான  மெசஞ்சர் ஆஃப்  பீஸ் என்ற விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. 


















         



Friday 15 June 2018

அ .முத்துக் குமரன்

பெயர் :                                               அ .முத்துக் குமரன்.@ சுரேஷ்
பெற்றோர்                                        சு.அப்பர் சாமி & சுந்தரவல்லி
மனைவி                                            வெ .புவனேஸ்வரி
பிறந்த தேதி                                    13-09-1967
கல்வித் தகுதி                                  முதுகலை தமிழ் .
                                                               சித்திரக் கலையில் பட்டையக் கல்வி

பணி                                                    ஓவிய ஆசிரியர்

சிறப்புப் பணி                                சாரண ஆசிரியர்
                                                              சாரணியத்தில் இமய                                                                                                                      வனக்கலைப்  பயிற்சியை முடித்திருப்பவர்
                                                              140 க்கும் மேற்பட்ட மாணவர்கள்                                                                                              மாநிலத்தில் சாரணியத்தின்
                                                              உயர்ந்த விருதான
                                                              ராஜ்ய புரஸ்கார் என்ற ஆளுநர்
                                                              விருதை பெறவைத்தவர்.இருவரை நாட்டின்                                                                      உயர்ந்த விருதான ராஷ்ட்ரபதி விருது
                                                              என்ற குடியரசுத் தலைவர் விருதை
                                                              பெற வைத்தவர் .


இதர பணிகள்                              ஸ்வாசிகா என்னும் மாணவர் அமைப்பை                                                                           நிறுவி 23 ஆண்டுகளுக்கும்
                                                             மேலாக சமூகப்பணி ஆற்றிவருகிறார் .
                                                             கோடைக்காலத்தில் இலவசமாக ஓவிய                                                                                 பயிற்சியினை அளித்துவரும்
                                                             இவர் இச் சேவையின் மூலம்
                                                             பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு
                                                             ஓவியத்தில் பயிற்சிகளை
                                                             அளித்துவருவதோடு
                                                             பல மாணவர்களை ஓவியக் கலைக்
                                                             கல்லூரியில் சேர்ந்து பயிலவும்
                                                            அத்துறை சார்ந்த பணிகளில் சேர்த்து
                                                            மிளிரவும் துணைபுரிந்து வருகின்றார் .மேலும்                                                                  தனது அமைப்பின் மூலம் பல
                                                            துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களை
                                                            இனம் கண்டு  அவர்களுக்கு விருதுகள்
                                                            வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார்

இதர சிறப்புகள் :                     கவிதைகள் , பாடல்களை எழுதுவதில் வல்லவர் .
                                                         தானே மெட்டமைத்து பல பாடல்களை                                                                                 இயற்றியுள்ள இவர் வில்லுப்பாட்டு
                                                         நிகழ்வுகள் நடத்துவதிலும்
                                                         ஒப்பனையோடு கூடிய மாணவர்களுக்கான
                                                         மேடை நாடகங்களை அமைப்பதிலும்                                                                                   திறமையானவர் .
                                                         புதுவை அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை                                                               நடத்திய சாலையோர ஓவியக் கண்காட்சிகளில்
                                                         (Road show ) & புதுவை - ஆரோவில்  மோகனம்                                                                       அமைப்பு நடத்திய கண்காட்சிகள் ,
                                                         புதுவை யாத்ரா ஆர்ட் அகாடமி நடத்திய
                                                         கண்காட்சிகளிலும் பங்கேற்று தனது                                                                                     ஓவியங்களைக் காட்சி படுத்திவருகிறார் .

சமீபத்தைய சாதனை    :  தமிழ் நாட்டுப் பாட நூல் தற்போது வெளியிட்டுள்ள                                                        புதிய நூல்களை வடிவமைக்கும் பணிமனையில்
                                                      ஓவியர்கள் குழுவில் பங்கேற்று முதல் மற்றும்
                                                     ஆறாம் வகுப்பு தமிழ் பாட நூல்களுக்கான
                                                      ஓவியங்களை வரைந்தமைக்காக
                                                      நூல் ஆக்கியோர் பெயர் பட்டியலில்
                                                      இவரது பெயரும் அச்சிடப்பட்டு உள்ளது .

                                                      2017-18 க்கான கல்வியாண்டில் சாரணர்களுக்கான
                                                     ஆளுநர் விருதை ( ராஜ்ய புரஸ்கார் விருது )கடந்த
                                                     14 -06-2018 அன்று சென்னை கவர்னர் மாளிகையில்
                                                      (ராஜபவன்)நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்
                                                      கடலூர் மாவட்டத்தின் சார்பாக
                                                      தனது பள்ளி சாரணர்களுடன் சென்று
                                                      மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள்
                                                       கரங்களால் தனது சாரணர்களை பெற                                                                                 வைத்துள்ளார் .அதன் மூலம் ஆளுநர் மாளிகைக்கு                                                         சென்று ஆளுநர் கரங்களால் விருதுபெற்ற
                                                       ஒரே அரசுப்  பள்ளி  என்ற பெருமையை
                                                       தனது பள்ளிக்குப் பெற்றுத் தந்துள்ளார் .


வெளியிட்டுள்ள நூல்கள் :     சாரணர் கையேடு -1

                                                           சாரணர் கையேடு -2

                                                           மணிவிழா மலர் ( தொகுப்பு நூல் )
                                                       
                                                           மனவண்ணங்கள் ( கவிதைத் தொகுப்பு )

                                                           மகாபாரதம்  (எளிய பாடல் நடையில் )

                                                           இராமாயணம் ( அச்சில்)

பெற்றுள்ள பாராட்டுக்கள்
மற்றும் விருதுகள்                    :

திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய

                                    சைவ சித்தாந்த ரத்தினம் என்னும் பட்டம்                        2000


பண்ணுருட்டி ஜான்டூயி பள்ளி வழங்கிய

                                     வாழ்நாள் சாதனையாளர் விருது -                                        2011

பண்ணுருட்டி செந்தமிழ் சங்கம் வழங்கிய

                                   செந்தமிழ் நர் சேவகர் விருது -                                                   2012

புது டில்லி பாரதீய தலித் சாகித்ய அகாடமி வழங்கிய

                                  டாக்டர் அம்பேத்கார் நேஷனல் பெல்லோஷிப் விருது -2013

பண்ணுருட்டி கலைச் சோலை இசை நாட்டிய பள்ளி வழங்கிய

                                   சித்திரக் கலை சேவா மணி விருது -                                        2014

திருவதிகை தேச கன்னட சைனீகர் நல சங்கம் வழங்கிய

                                   சைனீகர் சித்திரக்கலை சேவா சுடர் விருது -                      2014

கல்கத்தாவில் உலக சாரணர் இயக்கம் வழங்கிய

                                   மெசஞ்சர் ஆஃப் பீஸ்  ஸ்டார் -2014
                                   (நட்சத்திர அமைதித்தூதர் -2014 )

                    என்ற சர்வதேச விருது - சாரண சேவைகளுக்கான விருது -            2015

ஆசியா பசிபிக் மண்டலத்தில் 100 பேர் -
இந்தியாவில் 24 பேர் -
தமிழகத்தில் 2 பேர்
கடலூர் மாவட்டத்தில் ஒருவர்

திருவதிகை தேச கன்னட சைனீகர் சமூக நல சங்கம் வழங்கிய

                                      சைனீக சேவா ரத்னா விருது -                                                 2016 

பண்ணுருட்டி ரோட்டரி சங்கம் வழங்கிய

                                     தி பெஸ்ட் ஸ்டுடென்ட் மோட்டிவேட்டர் விருது -             2017

பாண்டிச்சேரி புதுவை கவிதை வானில் அமைப்பு வழங்கிய

                                    நுண்கலைத் திலகம் விருது -                                                     2017

கோவை வசந்த வாசல் கவிமன்றம் வழங்கிய 

                                    கவி நல்  மணி  விருது -                                                                  2018 
















































Friday 1 June 2018

சன் பைன் ஆர்ட்ஸ் ஓவிய முகாம்

சன் பைன் ஆர்ட்ஸ் ஓவிய முகாம்



சன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி ,யாத்ரா ஆர்ட் பவுண்டேஷன் & பசுமை புதுச்சேரி  ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து அண்மையில் அதாவது  வியாழன்  ( 31-05-2018) அன்று பசுமை  தலைப்பிலான  ஓவிய முகாமை நடத்தின .அதுமட்டுமன்றி 31-08-2018 முதல் 10-06-2018 வரையிலும்  நடைபெறும் வண்ணம்  குழுக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .




சன் பைன் ஆர்ட்ஸ் அகாடமியின் தலைவர்  திரு  ரவி அவர்கள் அழைப்பின் பேரில் ஓவியக் கண்காட்சி பங்கேற்பாளராகவும் ,விழாவிற்கான விருந்தினராகவும் சென்றிருந்தேன் .

உடன் எங்கள் பகுதியில் உள்ள ஓவிய ஆர்வம் உள்ள எட்டு மாணவர்களையும் உடன்  அழைத்துச்  சென்று இருந்தேன் .

இடம் : யாத்ரா ஆர்ட் பவுண்டேஷன் ,குயிலாப் பாளையம் ,ஆரோவில் .
ஆரோவில் நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பேசிக்கொண்டே  பாத யாத்திரை மூலம் யாத்ராவை அடைந்தோம் .
நல்ல பசுமையான இயற்கைக் சூழல் . சிலு சிலுவென காற்றை அள்ளிவீசும் மரங்கள் ...என்னை பறி என்று என் கைகளைத்  வண்ணம் காய்த்துத் தொங்கிய மாமரங்கள் ,பண்ணுருட்டியில்தான் நான் வளர்வேனா ...இங்கும் பார் என்னை என்று கூவி அழைத்த காய்களால் நிறைந்த பலா மரங்கள் என இயற்கை கொஞ்சும் சூழல் ...!

ஓவியர்கள் இளமுருகன் ,மதிவாணன் ,ரவி ஆகியோர் எங்களை வரவேற்று உபசரித்தனர் .இவர்கள் ஏற்கெனவே நாங்கள் நடத்திய ஓவிய பயிற்சி முகாமில் கலந்துகொண்டு எங்கள் பகுதி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள்.இவர்களுடன் ஓவியர்கள் திருமதி பூங்கொடி , தீப லக்ஷ்மி ஆகியோரையும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு பல புதிய ஓவியர்களின் அறிமுகமும் கிடைத்தது கூடுதல் நிறைவு .

காலை 10-30 மணியளவில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு துவங்கியது .ஓவியர்களுக்கும் , மாணவர்களுக்கும் ( வளரும் ஓவியர்களுக்கு) ஓவியம் தீட்டுவதர்கான வெள்ளை சார்ட் தரப்பட்டது . வருகை தந்திருந்த 50 க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பசுமை  என்கின்ற தலைப்பில் ஓவியங்களை தீட்ட ஆரம்பிக்க ,மாலை நடைபெறும் கண்காட்சி துவக்கவிழாவுக்கான ஓவியங்களை காட்சிப் படுத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

மாணவர்கள் தங்களுக்கு பிடித்த இடத்தில அமர்ந்து வெள்ளைக் காகிதத்தை பச்சை வர்ணங்கள் கொண்டு தூரிகையால் அலங்கரிக்க ஓவியர்கள் மற்றொருபுறம் அமர்ந்து கலக்க ஆரம்பித்தார்கள் ...வண்ணங்களும் கலக்கல்தான் ...ஓவியங்களும் கலக்கல்தான் .

பகல் 1-30 மணியளவில் அனைவருக்கும் சுவையான  உணவு பச்சைப் பசேலென்ற தலைவாழையிலையில் அன்பு சேர்த்து பரிமாறப்பட்டது .

யாத்ரா சீனிவாசன் அவர்களின் குடும்பமே பம்பரமாக சுழன்று உபசரித்துக் கொண்டிருந்தது .

உணவுக்குப் பின்னர் மீண்டும் கலைப்பணி துவங்கியது .ஒவ்வொருவராக ஓவியங்களை நிறைவு செய்து அளிக்க அவையும் காட்சிப்படுத்தப் பட்டன .

புதுவை மண்ணானது வளரும் ஓவியர்களுக்கு ஒரு சிறந்த களம் அமைத்துக் கொடுக்கின்றது .ஆனால் எம் பகுதி மாணவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் மிகக் குறைவு .எனவே என்னுடன் வந்த மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்வாகவும் , வித்தியாசமான அனுபவமாகவும் ...அதுவும் ஒரு நாள் முழுக்க ஓவிய சூழலிலிலேயே இருந்த மாற்று நிகழ்வாகவும் மனதை ஆக்கிரமித்தது எனலாம் .

மாலை 5.30 மணியளவில் விழா துவங்கியது .

புதுவை முதல்வரின் பாராளு மன்ற செயலர் மேதகு   K .லட்சுமி நாராயணன்           அவர்கள் கலந்துகொண்டு ஓவியக்  கண்காட்சியைத் திறந்துவைத்தார் .அவரே தனது கரங்களால் குத்துவிளக்கினை ஒளியூட்டத் துவங்க ,மேலும் புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தின் முதல்வர் Dr. திரு. P .v .பிரபாகரன் அவர்கள், நான் ,யாத்ரா சீனுவாசன் ,சன் பைன் ஆர்ட்ஸ் ரவி ஆகியோர் தொடர்ந்து குத்துவிளக்கினை ஒளியூட்டினோம் .பின்னர் விருந்தினர்கள் அனைவரும் ஓவியங்களை பார்வையிட தமது ஓவியங்கள் குறித்த விளக்கங்களை  ஒவ்வொரு ஓவியரும் அளித்தனர் . பின்னர் முறைப்படி மேடையில் விழா துவங்கியது . யாத்ரா சீனுவாசன் அவர்கள் சிரித்த முகத்துடன் தனது சிறப்பான கணீர் குரலில் நிகழ்வுகளைத் தொகுத்தவிதம் அருமையோ அருமை . முதல் நிகழ்வாக யாத்ரா கலைக்குழுவினரின் பரத  நாட்டியம் , வீணை இசை நிகழ்வுஎன  துவக்கமே கலை காட்டியது..மன்னிக்கவும் ..! களைகட்டியது  ...

பின்னர் விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடையை அலங்கரிக்க அழைக்கப் பட அந்த மரங்கள் சூழ்ந்த இயற்கையான மேடை அமைப்பு விருந்தினர்களால் நிறைந்தது .

சன் ரவி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர் .யாத்ரா சீனிவாசனின் சிறுகதை தொகுப்பு நூலும் ஓவியர்       அவர்களின் ஓவியம் தொடர்பான நூலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன .
ஓவியக் கலை குறித்த உரைவீச்சு வாழ்த்துரையானது .
நாடாளுமன்றச்  செயலரின் பேச்சு அவரது அரசியல் தாண்டிய கலைஆர்வத்தையும் ,ஈடுபாட்டையும் ரசனையையும் வெளிப்படவைத்தது எனலாம் .

தொடர்ந்து பங்கேற்ற அனைத்து ஓவியர்களுக்கும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட பங்கேற்ப்புச் சான்றிதழும் அவரது கரங்களால் வழங்கப்பட்டன.

இந்தக் கலை விழா நிறைவடையும் நேரம் நெருங்க சன்  பைன் ஆர்ட்ஸ் செயலர் திரு மதிவாணன் அவர்கள் நன்றியுரைக்க 7.30மணியளவில் எங்களது கலைக் குளியல் நிறைவுபெற்றது .

விழா நிகழ்வுகள் முடிந்து வெளிவரும்போது என் மனதில் தோன்றிய வினா இதுதான்.ஒருகாலத்தில் கலை வளர்த்தெடுத்தது இத் தமிழ் மண்...ஆனால் இப்போதோ .ஓவியம் மற்றும் கலை சார்ந்த  நிகழ்வுகள் தமிழ் மண்ணில் அதிகம் முன்னெடுக்கப்படுவதில்லை ...அப்படியே எங்காவது ஒருசில தனியார் அமைப்புகள் இப்படிப்பட்ட நிகழ்வுகளை நடத்தினாலும் அரசு , அரசியல்வாதிகள்அல்லது அரசு சார்ந்த அமைப்பினரோ அல்லது ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை .இதுபோன்ற கலை சார்ந்த நிகழ்வுகள் நமது சமூக சூழலில் நடைபெறவேண்டும் .தனியார் தொண்டு நிறுவனங்கள் , ரோட்டரி ,அரிமா போன்ற சர்வதேச அமைப்புகள் தாங்கள் நடத்தும் மருத்துவ முகாம்களைத் தாண்டி  இதுபோன்ற கலை , ஓவிய முகாம்களை அவ்வப்போது அமைத்து வளரும் கலைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தமுனைய வேண்டும் .அரசும் இது போன்ற நிகழ்வுகளை  வார விடுமுறை நாட்களில் நடத்த யோசிக்கலாம் .மத்திய அரசு நடத்தும் கலா உத்சவ் ஒரு முன்னோடி நிகழ்வு என்றாலும் கூட அடிக்கடி நடத்தப்படுவது இல்லை .மாவட்ட நிர்வாகமும் ,உள்ளாட்சி அமைப்புகளும் கூட இப்படிப்பட்ட கலை நிகழ்வுகளை அவ்வப்போது நடத்தும்போது வளரும் பருவத்தினர் பயன்பெறுவதோடு நமது கலை பூமி கலவர பூமியாகாமல் கலைவளர்க்கும் பூமியாகும் ...யோசிப்பார்களா...நமது ஆட்சியாளர்களும் ...மக்கள் நலம் சார்ந்த சிந்தனையாளர்களும் ...?