Tuesday 30 September 2014

நீர்

தன்வந்திரி கோவில் சுவற்றில் 

எழுதப் பட்டு இருந்தன 

நீரின் பண்புகள்....

ஆற்று நீர் ,ஊற்று நீர் ,

அருவி நீர் ,கடல் நீர் ,

ஏரி நீர் ,சுனை நீர் ,

கிணற்று நீர் ,மண் பானை நீர்...

ஒன்றை மட்டும் விட்டுவிட்டார்கள் ... 

நம் வீட்டில் நாம் தினமும் குடிக்கும்

 'கேன்' நீர் 








Monday 29 September 2014

சிறைவாசம்

         



மாலை சூரியன் 

மலைகளில் ஒளிந்து 

கண்ணாமூச்சி ஆடப் புறப்படும் வேளை 

என் கண்ணிலா பட்டுத் தொலைக்க வேண்டும்

தண்டனை ...

புகைப்  படக் கருவிக்குள் 

காலவரையற்ற சிறைவாசம் ....









இடம் காரையாறு அணை .




வெறுமை

வெறிச்சோடிப்போன 

விளையாட்டு மைதானம் 

வெயிலோடு மட்டுமே விளையாடுகிறது 

விடுமுறைநாட்களில் ...!




விளையாட்டு

கோலி 

கண்ணாமூச்சி 

கில்லி தாண்டா 

மாண்டா பம்பரம் 

மாஞ்சா நூல் பட்டம் 

ஏழாங்காய் 

பச்சைக் குதிரை 

பல்லாங்குழி 

ஒரு குடம் தண்ணி மொண்டு ஒரே பூ பூத்தது ...

முல்லைப் பூவே முல்லைப் பூவே மெல்ல வந்து கிள்ளிட்டுப் போ 

என அத்தனையும் ஏப்பம் விட்டு 

சுட்டித்தனத்தை கட்டிப் போட்டு 

எங்கள் குழந்தைகளின் குழந்தைத் தனத்தோடு 

விளையாடிவிட்டது

தொலைக் காட்சி .










Sunday 28 September 2014

கலவரம்

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் 

பிய்ந்து போன காலணிகள்

உடைந்து நொறுங்கிக் கிடக்கும்  

கண்ணாடிச் சில்லுகள் 

உறைந்துபோய் திட்டு திட்டாய் 

இரத்தக் குளங்கள் ...!

எரிந்து புகைந்துகொண்டிருக்கும் 

இருசக்கர வாகனங்களும் பேருந்துகளும் 

கதறிப் பரிதவித்த 

மானிட ஓலங்கள் தொலைத்து 

மௌனத்தை மட்டுமே சாட்சியாய் 

மிச்சம் வைத்திருக்கிறது 

கலவரம் ஒடுக்கப்பட்டு 

கலைந்து கிடக்கிற சாலை !








அச்சம்


இலைகள் அடர்ந்த மரம் 

இன்னும் துளிர்க்கிறது 


இருப்பினும் ஓர் அச்சம் 


அருகில் 


வெட்டுப்பட்ட மரத்தின் மிச்சம் !









Thursday 25 September 2014

நவீன ஓவியங்கள்

தார்ச் சாலையில் 

ஓர மரங்களின் கீழே மட்டும் 

வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாய் 

நவீன ஓவியங்கள் ...!

பறவை எச்சங்கள் 



மகிழ்ச்சி

சுதந்திர தின ஜமாபந்தி 

பட்டா கேட்டு விண்ணப்பத்தை  

மந்திரியிடம் கொடுத்துவிட்ட 

மகிழ்ச்சியில் விவசாயி...!

வாங்கிய மனுவை அலட்சியமாய் 

வீசிஎறிந்துவிட்ட மகிழ்ச்சியில் மந்திரி!

காகிதக் கப்பல் அதோ ...! 

விவசாயியின் வேதனை சுமந்து 

நேற்று பெய்த மழையின் 

மிச்ச சொச்ச தேக்கத்தில் 

கப்பல் செய்துவிட்ட மகிழ்ச்சியில் 

மந்திரியின் பேரன் !





Wednesday 24 September 2014

கண்ணீர்

அழுகையே அறியாத 

கல்நெஞ்சக் காரிக்கும் 

கண்களில் கண்ணீர் .....!

.......வெங்காயம் உரிக்கையில் !






அன்னதானம்

ஏழையின் வாசலில்

எறும்புகளுக்கெல்லாம்  

தினம் தினம் அன்னதானம்!

.....பச்சரிசி மாக்கோலம் 



பச்சை நிறம்

மழையில்லை பல ஆண்டாய் 

மரமெல்லாம் பட்டுப்போனாலும் 

பச்சை நிறம்  மட்டும்

இன்னும் மிச்சம் இருக்கிறது .

என் வீட்டுக் கதவில் மட்டும் ...!





வெறுப்பு

வேதிக் கழிவுகளை 

மீண்டும் மீண்டும் சுமந்து வரும் 

 நதியை நோக்கி 

வெறுப்புடன் 

காறித் துப்புகிறது 

அலை எனும் உமிழ்நீரால் ...

கடல்!



சோறு

வெள்ளை வெளேரென 

தும்பைப் பூவாய் சிரிக்கின்றது 

புதிதாய் வடிக்கப்பட்ட 

வெண்சோறு 

பசித்திட்ட வயிற்றில் 

வளரும் தீயை அணைக்கப்போகிற திமிரில்

திமிரில் விழுந்தது இடி 

பணக்காரன் வீட்டு திருமண விருந்தில் ...!

குதப்பி அலைந்து மூடிவைத்த இலையில் 

முடங்கிப் போனது  சாதம்....

அவமானத்தில் கூனிக் குறுகிற்று...

குப்பைதொட்டியில் விழுந்தபோது...!

இறுதியில் 

எச்சில்   இலைப் பொறுக்கித் தின்னும் 

சிறுவன் கரம் பட்டு 

விக்கி அழுகிறது சோறு ...

விமோசனம் பெற்றதை எண்ணி ...!



சிட்டுக் குருவி

மனதுள் கேட்கும் மெல்லிய இசைக்குரல் 

காற்றில் பறக்கும் ஒற்றைச் சிறகு 

விண்ணைத் தொடும் செல்போன் கோபுரம் 

இதெல்லாம் இருக்கட்டும் ....

நீ மட்டும் எங்கு போனாய் 

சிட்டுக் குருவியே....?



Tuesday 23 September 2014

கர்வம்

வெள்ளைக் காகிதம் 

கறைப் பட்டமைக்காய் 

கர்வம் கொள்கிறது 

கவிஞனின் கைகளில் மை !



வானழுகை


அமாவாசை வானம் அழுகிறது 

நிலவைத் தொலைத்துவிட்டு  

குழந்தைக்கு உணவூட்டும்

தாயின் தட்டில்

வட்ட தோசை 



கோடை விடுமுறை

நாளை முதல் கோடை விடுமுறை 
உற்சாக ஓலம் பீறிடுகிறது 
சிறுவர் சிறுமியர் மனதில் ..!
வெறிச்சோடிப்போன வகுப்பறைகள் 
மௌனமாய் அழுகின்றன ....
கசங்கிப் போன 
காகித நினைவுகள் சுமந்து !

வானவில்

மழை விட்டதில் மகிழ்ச்சி 

மீண்டும் சூரியன் வரவு .

வண்ணம் தீட்டி ஹோலி 

கொண்டாடுகிறது இயற்கை 

வானவில் ....!

Monday 22 September 2014

வல்லூறுகளை விரட்டுவோம்

எங்கள் பள்ளியிலே
வகுப்பெடுக்கும் சில வல்லூறுகளுக்கு 
வாய் சற்றே நீளம்தான்.
வகுப்பெடுப்பார்களோ தெரியாது ...ஆனால் .
வம்படிப்பார்கள் நன்றாய் 
அதனால் அனேகமாக ..
வழக்குரைகாதைகள் தினமும் நடக்கும் 
ஆசிரியர்கள் ஓய்வறையில் ...!
ஆனால் ,
தீர்ப்புகள் மட்டும் தள்ளிப் போகும் ...
காலவரையின்றி...!
நிறைகளைக் கூட்டி மாணவர்களை
மாண்புமிக்கவர்கள்ளக்குவதை மறந்துவிட்டு 
மற்றவர்களைக் குறை கூறிக்  குறை கூறியே 
களைத்துப் போகிறார்கள்....!
களைத்துப் போன வாய்கள் ...வகுப்பெடுப்பது  எப்படி ?
அங்கே இருவர் மட்டும் வாதிகள் 
ஏனையோர் பிரதிவாதிகள்...!
இருவாதிகளும் பாட்டுக்கொருபுலவன் 
பாரதியால் பாடப்பெற்றவர்கள் ..!
நெஞ்சில் உரமும இன்றி 
நேர்மைத் திறமும் இன்றி 
வஞ்சனை செய்யும் 
வாய்ச்  சொல் வீராங்கனைகள் !
துர்வாசருக்கும் ,விஸ்வாமித்திரருக்கும் 
பெண்வேடம் போட்டுப் பார்த்தால் 
பத்தும் பொருந்தும் மெத்தப் பொருத்தம்....!
வாங்குகிற ஊதியத்துக்கு வஞ்சனையே இல்லாமல் 
வகுப்பறையில் மாணவர்க்கு 
அள்ளி அள்ளிக்  கல்விதனை 
வாரி வாரி வழங்குகின்ற வள்ளல்களுக்கிடையேதான் 
வாய்க்கு வந்தபடியெல்லாம் வாய் கூசும் வார்த்தைகளால் 
வசைமாரி பொழிந்து நிதம் 
வளர்கின்ற பிஞ்சுமனம் 
வெம்பி வெம்பி வெதும்பும் வண்ணம் 
நஞ்சு மொழி பல கூறி நாணவைப்பர் ...!
ஆசான்கள் இனத்திற்கே 
அவப்பெயர்கள் பல் தந்து 
அத்துனைப் பேர் முகத்தையும் கோண வைப்பார் ...!
நற்பயிர்கள் வளர்கின்ற நஞ்சை நிலம் வயல்தன்னில் 
வசதியாக இதுபோல களைகள் பல வளர்வதனால் 
கேடு அந்தப் பயிர்களுக்கே ...! 
கலைகளெல்லாம் பிடுங்கிவிட்டால் 
கதிர்கள் பல நன்குதரும் 
பயிர் வளர்க்கும் நிலம்போல 
பள்ளிச் சூழல் மாறிவிடும் 
வாருங்கள் நாம் கரம் கோர்ப்போம் ...!
பள்ளிகளில் களை  எடுப்போம் 
அப்படி நாம் களை எடுத்தால் 
ஆசான்கள் தொழில் கொண்ட 
அவப் பெயரும் ஓடிவிடும்....!
மாணவர்கள் எடுக்கின்ற மதிப்பெண்ணும் கூடிவிடும் ...!
மதிப்பெண்கள் கூடிவிட்டால் 
மலையளவு வாய்ப்புகள் 
மாணவரைத் தேடிவரும் ...!
நல்வாய்ப்பு பல பெற்ற 
மாணவர்கள் நிறைந்த தேசம் 
நிச்சயமாய் ஒரு நாளில் வல்லரசாய் மாறிவிடும் ...!

Monday 15 September 2014

ஓசோன் எனும் தெய்வம் காப்போம்

      ஓசோன் படலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த 
சுற்றுச் சூழல் அறிஞர்களின் கருத்தாக முன்வைக்கப் பட்டிருக்கின்ற 
இன்றைய சூழலிலே நாளை உலக ஓசோன் தினம் அனுசரிக்கப் பட உள்ளது.இதுவும் பத்தோடு ஒன்று பதினொன்றாக மற்ற கொண்டாட்டங்களைப் போல புகைப் படத்திற்கு போஸ் கொடுக்கக்கூடிய நிகழ்வாகவோ அல்லது கொடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை சம்மந்தப்பட்ட துறைகள் மாணவர்களுக்கு கல்லூரி அளவிலும் பள்ளி அளவிலும்பேரணிகள் நடத்தி , போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கிவிட்டுபோகும் நிதியை தணிக்கையாளர்களுக்கு கணக்கு காட்டிவிட்டுப் போகும் அரசு அதிகாரிகளை கைகாட்டிவிட்டுப் போகும் கண்துடைப்பு நிகழ்வாகவோ இருக்கக் கூடாது.மாறாக ஒவ்வொரு மாணவனின் மனத்திலும் ,பொதுமக்களின் மனத்திலும் உண்மையிலேயே விழிப்புணர்வு ஏற்பட்டு ,இந்த உலகிற்கு தனது பங்களிப்பை அளிக்க தானே  முன் வரக்கூடிய ஒரு தொடர் நிகழ்வாக அமைய வேண்டும்.


     

         அதன் முதல் கட்டமாக உலக ஓசோன் தினமாகிய நாளை ஒருநாளாவது ஒசோனுக்கு எமனாக இருக்கும் C F C என்கின்ற வேதிப்பொருளை -வாயுவை வெளியிடும் குளிர்சாதனப் பெட்டிகள் ,குளிரூட்டிகள் (A /C )ஆகியவற்றின் இயக்கங்களை நாளை ஒருநாளாவது நிறுத்திவைக்கலாம் (பால் பதப் படுத்தும் நிலையங்கள் மற்றும் முக்கியமான மருந்துப் பொருள்களை பாதுகாக்கும் மருந்துக் கடைகள் மட்டும் விதிவிலக்குகள் ).அதீதப் புகை கக்கும் இருசக்கர ,நான்கு சக்கர மோட்டார் வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தினை மேற்கொள்ளலாம்.ஓரம் கட்டப்பட்ட மிதிவண்டிகளை துடைத்து அதில் பயணம் செய்யலாம் . 
       
       இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்ற புலம்பல்கள் ஒரு பக்கம் எழும்பலாம்.இதெல்லாம் வேலைக்காகாது    என்ற முனுமுனுப்புகள் கேட்கலாம்.நான் ஒருவன் இதையெல்லாம் செய்துவிட்டால் ஓசோன் ஓட்டை உடனே அடைத்துக்கொள்ளுமா  ? என்ற எகத்தாளக் கேள்விகள் எழலாம்.
     
      ( காந்தி அண்ணல் பிறந்த நாளுக்கு டாஸ்மார்க கடைகளுக்கு விடுமுறை விடுவதால்  குடிகாரர்கள் குடிப்பதை நிறுத்திவிடப் போகிறார்களா? அல்லது மதுப் பழக்கம் அடியோடு அழிந்து போய்விடுமா என்ன ...!இருந்தாலும் அன்றைய தினம் மட்டுமாவது ஒருசில குடிகாரர்களாவது    குடிக்க மாட்டார்கள் அல்லவா ...பலர் முதல் நாளே வாங்கி வீட்டில் பதுக்கிக் கொண்டு அடுத்த நாள் போதை ஏற்றிக்கொள்வது வேறு விஷயம்.)  
        
      ஓசோன் ஓட்டையை அடைப்பது என்பது இந்துமாக் கடலில் சேது பந்தனம் கட்டுவதுபோன்ற செயல். அதில் நமது செயல்பாடுகள் அணில் மணல் சுமந்து சென்றதுபோலத்தான்.
        
       ஊதுகிற சங்கை ஊத்தி வைப்போம் ...
       விடிகிற போது விடியட்டுமே...
       ஆனால் நிச்சயம் விடியும் என்பது மட்டும் நிச்சயம்.     

Thursday 4 September 2014

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்



ஒவ்வொரு தாயும் 

தன் குழந்தைக்கு முதல் ஆசிரியர் ...!

ஒவ்வொரு ஆசிரியரும் 

தன்  மாணவனுக்கு இரண்டாவது தாய் .....!

இந்நன்னாளில் எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை ...

என் இரண்டாவது தாய்மார்களை 

நினைவு கூர்கிறேன்.....!

தாயுள்ளத்துடன் எனக்கு 

என் தாயினும் சாலப்பரிந்து என்பார்களே...

அது போல் என் மாணவப் பருவத்தை செதுக்கி வடிவமைத்த 

ஆலிஸ் டீச்சர் ,மும்தாஜ் டீச்சர் ,ராஜாமணி டீச்சர் ,

ஜெயா டீச்சர்,சக்கரபாணி 

சார்,பொன்னுரங்கம்  சார், சாமிநாதன் அய்யா ,

அபுல் கையும் சார்,பாபுஜான் 

சார்,ஆரோக்கிய ராஜ் சார் ,பொன்னுசாமி சார், சீனுவாசன் சார் ,

ஓவிய ஆசிரியர் கும்பலிங்கம் சார் ,ராமநாதன் சார், 

கிருஷ்ணன் சார்,V R S சார் ,

எனக்கு ஓவியத்தை முறைப்படி கற்றுக் கொடுத்த ஜீவானந்தம் சார்

 என என் வாழ்க்கையை வளப்படுத்தி என்னை ஒரு ஓவிய ஆசிரியராக 

உருவாக்கி வைத்து என் பணியை சிறப்பாக செய்யும்

 மனோநிலையை எனக்கு அளித்து எனக்கு முன்னுதாரணமாக 

வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கும் ...
            
 காலவெள்ளத்தில்.... மறதியினால் .
..
இங்கு சொல்லப்படாமல் விடுபட்டுப் போன 

அத்துணை ஆசிரியைகளுக்கும் 

...ஆசிரியர்களுக்கும் ...என் மனம் நிறைந்த 

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை 

தெரிவித்துக்கொள்கிறேன்.....

இதுபோல் இன்றும் தன்னலம் கருதாமல் தன்  

மாணாக்கர்களின் நலம் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு 

வாழ்ந்துகொண்டிருக்கும் சக  ஆசிரிய ஆசிரியர்களுக்கும் 

என் வாழ்த்துக்களை பரிமாறுகின்றேன் .