Wednesday 28 February 2018

தாமரை

                                                                 தாமரை








அழகு மலர் தாமரை

             ஆசை ஊட்டும் தாமரை

அற்புதமாய் மணத்தை வீசும்

            அடுக்கு மலர் தாமரை


செம்மை நிறம் கொண்டு இங்கு

            சேற்றில் மலரும் தாமரை

செல்வ மகள் இலட்சுமியும்

            சென்று அமரும் தாமரை


குளத்தின் பச்சை இலைகளின்

            நடுவில் மலரும் தாமரை

குமுத மலர்கள் இடையிலும்

            பூத்துக் குலுங்கும் தாமரை


வெண்மை நிறத் தாமரை

             வாணி விரும்பும் தாமரை

வேகவைத்துக் காய்ச்சிக் குடிக்க

             வியாதி நீக்கும் தாமரை


மலர்களிலே ராணி போல

             மலர்ந் திருக்கும் தாமரை

மாந்தர் புகழும் பாரதத்து

             தேசிய மலர் தாமரை 


கண்களுக்கு உவமை கூறி

              கவிஞர் புகழும் தாமரை

கண்ணன் பாத மலரைப் போல

              மென்மை கொண்ட  தாமரை 















 


இரவு எழுதிய கவிதை

                                                    இரவு எழுதிய கவிதை


மங்கையர் முகமது உவமை கூறிட

                வானது தந்திடும்  ஓர் கொடையோ

மாதம் இருமுறை வளர்ந்தும் தேய்ந்தும்

               வாழ்வது உணர்த்திடும் தத்துவமோ



ஏழைகள் இல்ல இருளது நீக்கிட

               இலவச ஒளியுமிழ் விளக் கதுவோ

ஏகன் தன்முடி அணியாய்த்  தரித்திடும்

              மூன்றாம் பிறையாம்  நிலவதுவோ



ஏழிரு நாட்கள் வளர்ந்து மறுநாள்

               வெண்சுடர் வீசிடும் பௌர்ணமியோ

ஏழிரு நாட்கள் தேய்ந்து அமா

                வாசையாய்  இருண்டிடும் கோளதுவோ


நம்மனம் கொண்ட தனிமை நீக்கிட

                 இரவினில் துணைவரும் நட்பதுவோ

நாடெல்லாம் தாண்டக் கடவுச் சீட்டே

                தேவைப் படாத பறவை யதோ


காரிருள் கூந்தலில்  விண்மீன் வைரங்கள்

               பூட்டி ஒளிர்ந்திடும் பெண்ணனங்கோ

கவின்மிகு குமுத மலரது மலரத்தன்

              கிரணக் கரம்தரும் தாயவளோ


காதலர்க் கெல்லாம் உணர்வினைத் தூண்டிட

               காலம் ஏற்றிய விடிவிளக்கோ

கவிகளுக் கெல்லாம் கருப் பொருளாக

               இரவது எழுதிய கவிதையிதோ 










பெயர்ச் சொல் மட்டுமல்ல - நிலா

பெயர்ச் சொல் மட்டுமல்ல - நிலா 

நிலவு 

திங்கள் 

வெண்மதி 

சந்திரன் 

அம்புலி  ...

என நீளும் 

பெயர்ச் சொல் மட்டுமா நிலா ...?

அல்ல ...அல்ல..

அது கவிஞருக்கெல்லாம் 

கவிதைகள்  நெய்திட  கருப்பொருளாகி 

அவர்தம் மனதைத் தூண்டுமோர் 

                                                    வினைச் சொல் !

விண்மீன்கள் இடையில் 

மகாராணிபோல் 

வான்தனில் உலவிடும் 

                                                   இடைச் சொல் !


பெண்களின் அழகினைக் 

கவிதையில் பேசி

கவின் உரித்துக் காட்டிடும் 

                                                 உரிச்  சொல்  !


நாம் நடக்கும் வேளையில் 

நம்முடன் நகர்ந்து 

திரும்பும் திசையில் 

நம்மை நோக்கிச் சிரிக்கும் 

                                                   திசைச் சொல் !

ஆதியில் தோன்றி 

அந்தம் காணா 

அற்புத வரம் பெற்று வந்திட்ட 

                                                  உயிர்ச் சொல் !

இரு எழுத்துக்கள் மட்டும் 

கொண்ட கவிதையாய் 

நம்மை மகிழ்விக்கும் ஒரு 

                                                  தமிழ்ச்  சொல்  !

ஆம்...!

வெறும் பெயர்ச் சொல் மட்டுமல்ல... நிலா !

நம் நிலா !






Thursday 22 February 2018

சாரண இயக்கத்தில் சேர்ந்திடுவோம்

சாரண இயக்கத்தில் சேர்ந்திடுவோம்

சாரணரு இயக்கத்தில சேர்ந்திடுவோமே -நாம
சட்டத்தோடு உறுதிமொழி ஏற்றிடுவோமே
சீருடையும் பாங்குடனே உடுத்திடுவோமே -நாம
மூணு விரல் நீட்டி சல்யூட் அடிச்சிடுவோமே

இடது கரம் நீட்டி கையை குலுக்கிடுவோமே -நாம
முடிச்சுகளும் கட்டுகளும் கற்றிடுவோமே
முதலுதவி பயிற்சி நன்கு கற்றிடுவோமே -நாம
உயிர் காக்கும் சேவை  பல புரிந்திடுவோமே

கூடாரம் அமைக்கும் கலை தேர்ந்திடுவோமே -நாம
மகிழ்வு தரும் நடை பயணம் போயிடுவோமே
இரவுகளில் தங்கும் முகாம் அமைத்திடுவோமே -நாம
கலை வளர்க்கும் பாடித்தீயை நிகழ்த்திடுவோமே

மூன்று படி நிலைகளை நாம் கடந்திடுவோமே -நாம
ஆளுநரு விருது பெற்று மகிழ்ந்திடுவோமே
ஆறுவகை உடற்பயிற்சிகள் பழகிடுவோமே -நாம
நம்முடலைக் கட்டாக வைத்திடுவோமே

இணையவழிப் பெருந்திரளில் பங்கெடுப்போமே - நாம  
வேற்று நாட்டு சாரணருடன் பேசிடுவோமே
குடியரசுத் தலைவர் விருது பெற்றிடுவோமே -நாம
நல்லதொரு குடிமகனாய் விளங்கிடுவோமே







Wednesday 21 February 2018

வாத்தியார்

                                        வாத்தியார் 

பள்ளிக் கூட  வாத்தியாரு போறாரு பாரு 
அவரு  கையில் ரெண்டு புத்தகத்தை வச்சிருக்காரு 
அம்மையப்பன் போல நமக்கு விளங்கிடுவாரு - அவரு 
நம்ம கைய புடிச்சு வாழும் வழி காட்டிடுவாரு 

விளங்காத  பாடம்   சொல்லித் தந்திடுவாரு 
வகுப்பறையில்   கதைகள்   சொல்லி  சிரிக்க வைப்பாரு 
தவறு செய்யும் போதில் நம்மை எச்சரிப்பாரு -இவரு 
தகப்பனாரு போல நம்ம அரவணைப்பாரு 

செல்லக்   குறும்பு செய்கையில் ரசிச்சிடுவாரு 
செயலில் வீரராக நம்மை உயர்த்திடுவாரு 
நமக்கு இருக்கும் கலைத் திறமையக்  கண்டறிவாரு -அதை 
வளர்த்து நாமும் உச்சம் தொட துணையிருப்பாரு 

வகுப்பறையின் தூய்மையினைப் பேணிடுவாரு 
குறித்த நேரம் வருகை தந்து காத்திருப்பாரு 
கையில் பிரம்பு வைத்திருந்தும் அடிக்க மாட்டாரு -தன் 
மாணவரின் கனவைக் கண்ணில் சுமந்திருப்பாரு !





Tuesday 20 February 2018

ஐஸ் வண்டி

                                    ஐஸ் வண்டி

ஐசு வண்டி ஐசு வண்டி வருகுது பாரு

ஆரன் அடிச்சு ஐசு வண்டி வருகுது பாரு

பாலு ஐசு குச்சி ஐசு   இருக்குது பாரு

நம்ம நாக்கில் நாக்கில் எச்சி இப்போ ஊறுது பாரு

காசு கொடுத்து வாங்கித் தின்ன கையில  பாரு

வெயில் பட்டு ஐசு கொஞ்சம் உருகுது பாரு

கையில் வழியும் ஐஸ நாக்கு நக்குது பாரு

இதுக்கு ஈடான சுவை உண்டா உலகினில் கூறு .





தென்னை மரம்

தென்னை மரம்

ஓங்கி ஓங்கி உயர்ந்த மரம் ஒன்று இங்கே இருக்குது
நீல வானம் தொட்டுவிட தலையை விரித்து துடிக்குது

படிப் படியாய் வடுக்கள் கொண்டு சாய்ந்து தரையில் நிற்குது
குலை குலையாய் காய்கள் காய்த்து மட்டை   நடுவில் தொங்குது

தென்றல் காற்றில் விரித்த தலையை ஆட்டி ஆட்டி மகிழுது
குளிர்ந்த இள நீரை வழங்க காத்து தவமும் கிடக்குது

வேரில் உறிஞ்சும் நீரையெல்லாம் இனிப்பினிப்பாய்  மாத்துது
இவ்வளவு உயர்ந்திருந்தும் நிழலைத் தர மறுக்குது

கீற்றுகளில் ஓலை கொண்டு சலசலத்து அசையுது
புதிய பாளை விரித்து விரித்து பூக்கள் மழை பொழியுது

தரையில் நின்று மேலே பார்த்து இள நீரூக் கேங்கும் எங்களை
முயன்று முயன்று மேல்நோக்கி ஏறி வர அழைக்குது

உச்சி தொட்டு காய் பறித்து உண்ணச் சொல்லி பார்க்குது
ஊர்தோறும் மகிழ்ந்திடவே சாமரமாய் வீசுது 

முயற்சி செய்து உயரம் தொட்டால் உயரம் கூடும் வாழ்க்கையில்
என்றதொரு பாடம் நன்றாய் தென்னை  மரம்   நடத்துது



 

பள்ளிக் கூடம்

                                   பள்ளிக் கூடம்

பாடம் நாங்கள் கற்றிட
ஒன்று சேரும் இடமிது
ஆசிரியர் என்னும் ஓர்
பெற்றோர் வாழும் வீடிது

புதிய நண்பர் பலருடன்
உறவும் இங்கே பிறக்குது
ஒழுக்கம் தன்னை வளர்த்திட
உதவுகின்ற இடம் இது

உற்சா கத்தை தருகின்ற
உயர்ந்த தொரு தளமிது
அறி வியலைக் கற்றிட
ஆய்வுக் கூடம் உள்ளது

விளையாடி நாங்கள் மகிழ்ந்திட
மைதா னமும் இருக்குது
கதைகள் படித்து மகிழ்ந்திட
நூ லகமும் கொண்டது

கூடிக் கல்வி கற்றிட
வகுப் பாறைகள் உள்ளது
எங்கள் குறும்புத் தனங்களை
பார்த்து மகிழும் இடமிது

பள்ளிப் பருவம் முடிந்திட
கண் ணீருடன் பிரிவது
மீண்டும் ஒன்று சேர்ந்திட
ஏக்கம் மிகவும் தருவது

இரவு தூங்க மட்டுமே
எங்கள் வீடு உள்ளது
பகலில் பறந்து மகிழ்ந்திட
எங்கள் பள்ளிக்கூடு உள்ளது



 



யானை

               யானை 

யானை யம்மா யானை 
உருவம் பருத்த யானை 
தூண்கள் போலக் கால்கள்
நான்கு கொண்ட யானை 

முறத்தைப் போலக்  காது 
கொண்டு வீசும் யானை 
வெள்ளைக் கொம்பு போல 
தந்தம் கொண்ட யானை 

கோலி குண்டு போல 
கண்கள் கொண்ட யானை 
அசையும் பாம்பைப் போன்ற 
துதிக்கை கொண்ட யானை 

பிள்ளை யார்க்குத் தலையை 
இரவல் தந்த யானை 
மகிழ்ச்சி கொண்டால் தலையை 
உயர்த்திப் பிளிறும் யானை 

பெரிய கோயில் தனிலே 
குடி இருக்கும் யானை 
குழந்தை களை  ஏற்றி 
குதூ களிக்கும்  யானை 





Monday 19 February 2018

மக்கள் தலைவர்


மக்கள்   தலைவர் 





மக்கள் மனதில் நிற்கின்ற
மாபெரும் தலைவர் நீர்தானே
மாணவர் பசியைத் தீர்த்திடுமோர்
மாபெரும் திட்டம் தந்தவரே

திரைப் படங்களிலே நடித்தவர்
தீராப் புகழைப் பெற்றவரே
மக்கள் திலகம் என்றேதான்
பட்டப் பெயரைக் கொண்டவரே

இலவச சீருடை தந்தவரே
ஈகை குணங்கள் நிறைந்தவரே
தமிழக மக்களின் துயர்நீக்க
தங்கத்  திட்டங்கள் தந்தவரே

ரோஜா நிறத்தைக் கொண்டவரே
குழந்தையைப் போல சிரிப்பவரே
எளிமை குணங்கள் நிறைந்தவரே
தாய்மை உள்ளம் கொண்டவரே

எம்ஜியார் என்றே அன்போடு
எம்மக்கள் உம்மை அழைக்கின்றார்
தமிழகம் உள்ள வரையிலுமே
உம்புகழ் என்றும் வாழ்ந்திடுமே .







Saturday 17 February 2018

இனியது தமிழே

 இனியது தமிழே

 இனியது இனியது  நம் தமிழே


தொன்மை வாய்ந்தது நம்தமிழே 

செம்மை மொழியது நம்தமிழே

 நம் தாய் மொழியாம் அது நம் தமிழே



பேச இனியது நம்தமிழே

பாடவும் இனியது நம்தமிழே

கற்கவும் இனியது நம்தமிழே

படித்திட இனியது நம் தமிழே



மொழிகளுள்  சிறந்தது  நம் தமிழே

இணையத்துள் உலவுது நம் தமிழே

மேன்மை மிக்கது நம் தமிழே

மேதினி முழுவதும் நம் தமிழே



இலக்கணம் சிறப்பது நம் தமிழே

இலக்கியம் வளர்ப்பது நம் தமிழே

உணர்வினில் கலந்தது  நம் தமிழே

உயிரினும் சிறந்தது நம்தமிழே