Monday 15 April 2019

மிக நீஈஈஈண்ட பதிவு.. குறிப்பாக ஓவியர்கள் , ஓவிய இரசனையாளர்கள் தவறாது வாசியுங்கள்...
நூல் ஆசிரியர் : #கணபதி_சுப்ரமணியம்
பதிப்பகம் : #யாவரும்
ஓவியம் – தேடல்கள் ,புரிதல்கள் என்கின்ற இந்த நூல் இப்பொழுது என் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது எனது நீண்ட தேடலுக்குப் பின்னும் காத்திருப்புக்குப் பின்னும்.
முதன் முதலில் இந்நூல் வெளிவரப்போவது குறித்து முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தார் திரு.கணபதி சுப்ரமணியம் அவர்கள். அவரை நான் முதன் முதலாக சந்தித்தது சென்னை நாகேஸ்வர ராவ் பார்க்கில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியொன்றில் .சக ஓவிய ஆசிரியர்களுடன் சென்னை DPI -ல் புதிய பாட நூல் ஆக்கத்தில் படம் வரையும் பிரிவில் பணிபுரிந்த போது கிடைத்த ஒரு ஞாயிறு நாளில் திரு .காஞ்சிபுரம் தியாகராஜன் அவர்கள் அந்தக் கண்காட்சிக்கு அழைத்திருந்தபடியாலும் , முகநூலில் தொடர்ந்து விளம்பரங்கள் வந்து ஈர்த்ததனாலும் ஊருக்குச் செல்வதை விடுத்து ஓவியக் கண்காட்சிக்குச் சென்ற போதுதான் அவரைச் சந்தித்தேன். அவர்தான் அந்தக் கண்காட்சி அமைப்பாளர் என்பதையும் தெரிந்து கொண்டேன். பின்னர் முகநூலில் நட்பு அழைப்பு விடுத்து நண்பர்களானோம்.
அது முதல் ஓவியம் சார்ந்த அவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வியந்து போனேன். இவை ஒரு தொகுப்பு நூலாக வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்துக் கொள்வேன். ஆம் .நினைத்தது நிஜமானது. இப்படி ஒரு நூல் உருவாக இருப்பது பற்றி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதில் பின்னூட்டத்தில் நானும் புத்தகம் வாங்க விருப்பம் தெரிவித்திருந்தேன். யாவரும் பதிப்பகத்தாரால் வண்ண நூலாக தரமான காகிதத்தில் ஒரு பதிப்பும் , கருப்பு வெள்ளையில் ஒரு பதிப்பும் வெளியாக உள்ளதாக பதிவிட்டிருந்தார்கள்.
நூல் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்தேன். அந்த நேரத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியும் வந்தது. வழக்கமாக கடைசி இரு நாட்கள் இருக்கும் போது செல்லும் நான் இந்த முறை இரண்டாம் நாளே புத்தகத் காட்சிக்குச் சென்றேன். வேண்டிய புத்தகங்களை வாங்கிய பின் யாவரும் பதிப்பக அரங்கத்திற்குச் சென்று ஓவியம் தேடல்கள் புரிதல்கள் புத்தகத்தைப் பற்றி விசாரிக்க அவர்களோ இன்னும் தயாராகவில்லை. அச்சில் இருக்கின்றது. இன்னும் 10 அல்லது 15 நாட்கள் ஆகும் சார் என்றனர். நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
அதன் பிறகு சில வாரங்கள் கழித்து முகநூல் பதிவுகளில் ஓவியம் தேடல்கள் புரிதல்கள் நூல் வெளியானதாக பதிவுகள் பல வெளி யான வண்ணம் இருந்தன. ஓவியப் பிதாமகர்களான புகழேந்தி , இராஜராஜன் உள்ளிட்ட பலர் நூலின் சிறப்புகள் குறித்து பதிவிட்ட படி இருக்க எனது ஆவல் பல மடங்கு வளர்ந்தது. அவற்றை கணபதி சுப்ரமணியன் சாரும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தபடி இருக்க அவர்கள் பகிர்ந்திருந்த லிங்கை சொடுக்கி B 4 Books ல் on lineல் புத்தகத்திற்கான விலையுடன் Delivery Charge ம் சேர்த்து 1525 ரூ கட்டி நூலுக்காக காத்திருந்தேன்.
இரண்டு வாரம் கழித்தும் நூல் வரவில்லையா தலால் கணபதி சுப்ரமணியம் சாரை தொடர்பு கொண்டு வாரம் கூற அவரும் உடனடியாக பதிப்பகத்தாரை அணுகி அவர்களிடம் கேட்டு உரிய பதில் அளித்தார். அச்சடிக்கப்பட்ட அத்தனை வண்ணப் பதிப்புகளும் உடனே விற்றுத் தீர்ந்தபடியால் மறுபதிப்பு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் , தயாரானதும் முதலில் எனக்குத் தான் அனுப்பி வைப்பார்கள் என்றும் உறுதி கூறினார். சற்று நேரத்தில் பதிப்பகத்தாரும் என்னைத் தொடர்பு கொண்டு அதே தகவலை அளித்தனர். இது மேலும் அந்த நூலின் மீதான எனது ஆவலை இன்னும் அதிகரித்தது. அவர்களிடம் கருப்பு வெள்ளைப் பிரதி இருப்பு உள்ளதா என வினவினேன். இருப்பதாக பதில் வந்தது. உடனே அதற்குப் பணத்தைக் கட்டினேன். இதனை நான் படித்து முடித்ததும் எனது பள்ளி நூலகத்திற்கு என் அன்பளிப்பாக வழங்குவது என்று முடிவு செய்து கொண்டேன். சரியாக மூன்றாம் நாள் அந்தப் புத்தம் என் கரங்களை வந்தடைந்தது. காத்திருந்த புதையல் கரங்களை வந்து அடைந்தது என மிக மகிழ்ந்தேன்.
இனி இந்த நூல் பற்றி:
ஓவியர் கணபதி சுப்ரமணியன் அவர்கள் இயற்றியுள்ள இந்நூல் ஓவியம் பற்றிய நமது பார்வையை முற்றிலும் மாற்றி அமைக்கும் , அல்லது சற்றே செப்பனிட்டு நெறிப்படுத்தும் ஓர் கருவி எனவே கொள்ளலாம்.
கலைகளில் சிறந்தது ஓவியம். அந்த ஓவியக்கலையானது எல்லைகள் இல்லாதது. காலங்கள் கடந்தது. உலகப் பொது மொழிகளுக்கு வரிவடிவம் போன்றது.நிகழ்த்துக் கலைகளுள் ஒன்றான ஓவியக்கலையை நன்கு புரிந்து கொள்ள , புரிந்து கொண்டு தொடர்ந்து அதோடு பயணப்பட உதவும் நூலாக இதனை ஆசிரியர் ஆக்கியுள்ளார்.
ஓவியங்களை வரைவது என்பது சற்றே கடினம்தான் .ஆனால் அவற்றை புரிந்து கொள்வதென்பது அதை விடவும் இன்னும் சற்றே கடினம் அல்லவா? அதோடு சமகாலத்தைய நவீன ஓவியங்களை புரிந்து கொள்வதென்பது ஒரு இரசிகனுக்கு பெரும் சவால் தான்.இந்த நூல் வாசிப்பின் அனுபவம் அதனை ஒரு ஓவிய இரசிகனுக்கு மிக எளிதாக்கி வைக்கின்றது.
திரு.கணபதி சுப்ரமணியம் அவர்கள் எழுதியுள்ள ஓவியம் - தேடல்கள்,புரிதல்கள் -1 என்னும் தலைப்பில் இந்நூல் முதல் பாகமாக வெளியாகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக உள்ளன என்பதும் இதன் மூலம் கண்கூடாகிறது.
ஜீவ கரிகாலன் அவர்களது பதிப்புரை எனது எதிர்பார்ப்பை பல மடங்காக்கியது எனில் , ஓவிய விமர்சகர் இந்திரன் அவர்களது முன்னுரை என்னை இன்னும் பரபரப்புக்குள்ளாக்கியது ...
அந்த பரபரப்புடனே பள்ளியின் தேர்வு நேரம் , தேர்தல் பயிற்சி நேரம் இவற்றின் பரபரப்புடன் போட்டியிட்டவாறு கிடைக்கும் இடைவெளிகளில் வாசித்து முடித்தேன்... இல்லை பயணப் பட்டேன் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஆம்... இப்புத்தகமே ஒரு பாதைதான். முடிவற்ற பாதை... ஏன் எனில் கலை என்பது காலவெளியின் ஒரு முடிவிலி.. எனவே அதற்கான இப்பாதையும் ஒரு முடிவற்றது தானே...?இந்தப் பாதையில் பயணப்பட்டால் காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கிப் பயணித்து நாம் நன்கறிந்த பெரிய பெரிய ஓவிய மேதைகளையும் , சமயத்தில் நாம் அறிந்தேயிராத பல ஓவிய மேதைகளையும் , அவர்கள்தம் சித்திரங்களையும் கண்ணுற்று , பயணப்பட்டு , அனுபவங்களை உள்வாங்க வைக்கிறார் ஆசிரியர் .
ஓவியம் எனும் மாபெரும் கடலின் - பெருங் கலையின் கூறுகள் அனைத்தையும் அளவற்ற உதாரணங்களுடன் விரிவான கட்டுரைகள் ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகப் பயணத்தில் ராஜா ரவிவர்மா , மைக்கேல் ஆஞ்செலோ ,
ஹைன்ரிக் க்ளே , பால் கிளே , மார்ஷல் டூஷான் , ஹன்ஸ் ஹாப்மென், வில்லியம் டி கூனிங் , அஜந்தா ஓவியங்கள் , பல்லவர் கால ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் , சோழர்கள் கால கலைப்படைப்புகள் , ஜோகன்ஸ் வெர்மியர் , ரவீந்திரநாத் தாகூர், பியட் மொன்றைன், லியனர்டோ டா வின்ஸி, வின்சென்ட் வான்கோ , ராய் செளத்ரி , பாப்லோ பிக்காசோ போன்ற எண்ணற்ற புராதன ஓவியர்கள் முதல் தற்கால ஓவியர்கள் வரை என தாவித் தாவி படைப்புக்களையும்,படைப்பாளிகளையும், ஓவியப் புரிந்துணர்வுகளையும் இணைத்து கருத்துக்களை தொகுத்து கட்டுரைகளாக அளித்துள்ளார். ஒரு தலைப்புக்கு 10 கட்டுரைகள் வீதம் நான்கு உட் தலைப்புகள். புரிதல் , அனுபவம் , பயணம், சிந்தனை என்ற அந்த உட்தலைப்புகள் நம் பயணத்தை மேலும் எளிதாக்குகின்றன .
ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அது சார்ந்த ஒரு மேற்கோள் , ஒரு ஓவியம் எனத் தொடங்கி அக்கட்டுரைக்குள் மேலும் சில முக்கியமான பிரபலமான ஓவியர்கள் வரைந்த சித்திரங்களின் தொடர்ந்த காட்சிப்படுத்தலோடு படிப்பவர்களின் விரல்கள் பிடித்து அந்தப் பாதையோடு அழைத்துச் செல்கிறார் கணபதி சுப்ரமணியம் அவர்கள்.
கவிதை , இசை , பாடல் , நடனம் , ஓவியம் என அனைத்து கலை வடிவங்களையும் ஒரு நேர்க்கோட்டில் இணைத்து , இசைக்கும் ஓவியத்திற்கும் உள்ள கருத்துருவ ஒற்றுமைகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
இந்நூலில் உள்ள நாற்பது கட்டுரைகளுமே மிக ஆழமானவை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுபவை. என் மனதில் அவ்வப்போது எழும் எண்ணங்களை பிரதிபலித்திடும் இந்த வரிகள் மிகப் பிடித்தமானவை. இவற்றை வரிகளாக்கியுள்ள கணபதி சுப்ரமணியம் அவர்களின் எண்ண ஓட்டத்தைக் கண்டு மிக வியக்கின்றேன்.
ஒரு ரசிகனின் மகிழ்ச்சிக்காகவே ஒரு கலைஞன் இயங்குவது போல் பொதுவாக நாம் எண்ணினாலும் , அவன் உண்மையில் தனது செயல் அனுபவத்திற்காக ஏக்கம் கொண்டே செயல்படுகின்றான்.
ஆஹா... என்ன ஒரு அனுபவ சிந்தனா வரிகள்...
ஓவியக்கலையின் பரிமாணத்தை இவ்வளவு துல்லியமாய் , நேர்த்தியாய் , அக்குவேறாய் ஆணிவேராய் அலசி என்பார்களே...அது போன்று அனைத்து கூறுகளையும் ஆராய்ந்து ,அனுபவத்தின் பாதையில் பயணித்த விழுமியங்கள் அனைத்தையும் வார்த்தைகளாக்கி இந்த நூலை படைத்துள்ளார் ஆசிரியர் .இக்கலையைப் பற்றிய விசாலமான பார்வையை இந் நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஓவியனும் , ஒவ்வொரு இரசிகனும் _ ஏன் ஓவியம் பற்றிய புரிதலே அற்ற ஒவ்வொரு பாமரனும் கூட புரிந்து கொள்ளும் வல்லமை கொண்டது இந்நூலின் எழுத்து நடையும் , நேர்த்தியான வடிவமைப்பும்.
ஒருவன் எப்படிப் பட்ட ஓவியனாக இருப்பினும் இந்நூலை வாசித்து முடித்தபின் அல்லது வாசித்துக் கடந்த பின் சித்திரக் கலையின் மீதான அவனது பார்வை முற்றிலும் மாறி அவனை வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்று விடும். நான் மட்டுமென்ன விதிவிலக்கா?
இந்நூலில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் நிஜ வாழ்வின் நிதர்சனங்கள் நம்மைப் பார்த்து கண்சிமிட்டுகின்றன.
உதாரணத்திற்கு:
1. சிந்திக்க :
ஓவியம் தீட்டத் தெரியாத பொழுது ஓவியம் தீட்டுவது எளிமையானது. அதுவே ஓவியம் தீட்டத் தெரியும் எனும் பொழுது மிக கடினமாகிவிடுகின்றது.
2. சிரிக்க:
ஒரு பத்திரிகையின் நிருபரை கவிஞர் என்று கூறுவதில்லை. ஆனால் அதிகக் கட்டணம் வசூலிப்பவரானால் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிப்பவரையும் , பட்டி பார்ப்பவரையும்கூட
கலைஞர் என்கிறோம்.
இந்நூல் ஓவியர்களுக்கு மட்டுமல்ல.. ஓவிய இரசனையாளர்களுக்கு மட்டுமல்ல. வளரும் ஓவியர்களான , நாளைய ஓவியர்களான ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கும் கூட குறிப்பாக காட்சித் தொடர்பியல் மாணவர்களுக்கு கருத்தியல் (Theory) சார்ந்த துணை நூலாகக் கூட பரிந்துரை செய்யலாம் என்பது எனது யோசனை.
கருப்பு வெள்ளை நூலே எனக்கு இந்த அனுபவத்தைக் கொடுத்தது என்றால் அந்த வண்ணப் பிரதி...
I am waiting...
இந்த நூலை நீங்களும் பெற வேண்டுமா?
எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை சொடுக்கவும்.

பொன்னியின் செல்வன் பூங்குழலி

இதோ இந்த நங்கை யார் எனத் தெரிகின்றதா?
பூங்குழலி..
பொன்னியின் செல்வன் பூங்குழலி
என்றால் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு அறியும்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் இதுவரை கல்கியில் எத்தனை முறை தொடராக வந்தது எனத் தெரியவில்லை..
ஆனால் அந்தத் தொடர்களுக்கு யார் யார் சித்திரம் தீட்டினார்கள் என்று சொல்ல முடியும்.
முதன் முதலில் கல்கி வார இதழில் வெளியானபோது படம் வரைந்தவர்...
கதாபாத்திரங்களை வடிவமைத்தவர் பிரபல ஓவியர் மணியம் அவர்கள். (ம.செ.அவர்களது தந்தை)
அடுத்ததாக வெளியான தொடரில் - இது 1969-ல் அதாவது நான் பிறந்து இருவருடங்கள் கழித்து - படம் வரைந்தவர் ஓவியர் வினு .இவர்தான் ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்) , வியாசர் விருந்து (மகாபாரதம்) ஆகிய தொடர்களுக்கும் ஓவியம் வரைந்தவர்.
அடுத்து எனக்குத் தெரிந்து ஓவியர் மணியம் அவர்களது பழைய ஓவியங்களைக் கொண்டே மீண்டும் ஒரு முறை தொடர் வெளியானது.
பிறகு ம.செ.அவர்கள் (பொன்னியின் செல்வன் போன்று - மணியம் செல்வன்) வண்ணமயமான ஓவியங்களை வரைந்து அசத்தியிருந்தார் அடுத்த முறை வெளியான தொடரில் .
அதன் பின்னர் வெளியான தொடரில்
ஓவியர் பத்மவாசன் அவர்கள் படங்களை வரைந்திருந்தார்.
வேறு யாரேனும் வரைந்திருந்து நான் குறிப்பிட விடுபட்டிருந்தால் நண்பர்கள் அதை பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.
ஆனால் எத்தனை பேர் வரைந்திருந்தாலும் அத்தனை பேருமே திரு மணியம் அவர்கள்
வரைந்திருந்த கதாபாத்திர உருவங்களை மாற்றாமல் , அப்படியே அடியொற்றி வரைந்து மேலும் மெருகூட்டினார்கள் என்பதுதான் சிறப்பு.
வேறு எந்த தொடராவது இத்தனை முறை மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளதா என்பது சந்தேகம் தான்.
நானே இது வரை நான்கு முறைகள் படித்து முடித்துள்ளேன். இந்த முழு ஆண்டு விடுமுறையில் மீண்டும் ஒருமுறை வாசிக்க எண்ணியுள்ளேன்.
அதே போல் இன்னொன்று குறிப்பிட வேண்டும். பொன்னியின் செல்வன் புதினத்தை புதிதாய் வாசிக்க விரும்புவோர்
அமர் கல்கியின் மற்ற நூல்களான சிவகாமியின் சபதம் வாசித்துவிட்டு ,
அதன் பின்னர் பார்த்திபன் கனவு என்னும் நூலை வாசித்துவிட்டு (இது பார்த்திபன் கனவு என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் வந்தது) நிறைவாக பொன்னியின் செல்வனை வாசிக்க வேண்டும். ஏனெனில்
காலத்தாலும் , கதையமைப்பாலும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை
முதலில் நடந்தது சிவகாமியின் சபதம்.
அடுத்ததாக பார்த்திபன் கனவு.
மூன்றாவதாக நடந்தது பொன்னியின் செல்வன்.
அதாவது சிலப்பதிகாரம் , மணிமேகலை என்ற இரட்டைக் காப்பியங்கள் போல.
அவை எவ்வாறு கதை நடைபெறும் காலத்தால் தொடர்பு கொண்டவையோ
அவ்வாறே இந்த முப்பெரும் புதினங்கள்
கதை நடைபெறும் காலத்தால் தொடர்பு கொண்டவை.
என்னிடம் உள்ள பொன்னியின் செல்வன் தொடர் தொகுப்பில் உள்ள ஓவியர் வினு அவர்களின் ஓவியங்கள் விரைவில் உங்கள் கண்களுக்கு விருந்தாய்...
ம்.. ஒன்று கூற மறந்து விட்டேன். நான் பொன்னியின் செல்வனை முதல் முறை வாசித்தது எப்போது தெரியுமா? நான் 9 ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு எழுதிய பின் வந்த கோடை விடுமுறைக்காலத்தில் - என் பதின் பருவங்களின் துவக்கத்தில் ...
மீண்டும் வாசிப்போமா?

பொன்னியின்_செல்வன் நந்தினி

ஓவியர் வினு அவர்களின் கைவண்ணத்தில் நந்தினி.
கதையின் பிரதான மாந்தர்களுள் மிக முக்கியமான ஒரு பாத்திரம்.
ஆடை அணிகலன்கள் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மிக விருப்பம் வாய்ந்தவள். இளவரசி குந்தவை நாச்சியாரையே மிஞ்சியவள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
குறிப்பாக அந்தக் கொண்டையும் தலையணிகளும் ..
ஆண்டாள் கொண்டை , மீனாட்சி கொண்டை என்பது போல கதை தொடராக வந்த அந்த காலகட்டத்தில் நந்தினி கொண்டையும் மிக புகழ் வாய்ந்ததாகவும் , பெண்களால் மிக விரும்பப்பட்டதாகவும் என் சிற்றப்பா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அந்த அளவுக்கு குந்தவை , வானதி ஆகிய கதாபாத்திரங்களை விட ஓவியர் மணியம் அவர்கள் நந்தினியின் கதாபாத்திரத்தினை பார்த்து பார்த்து வடிவமைத்திருப்பார். அவரை அடியொற்றி வரைந்த பிற ஓவியர்கள் மட்டும் என்ன...? அவரை விட ஒரு படி மேலே போய் இன்னும் அழகாக வரைந்திருந்தார்கள்.
பின்னே... அந்த அழகில் மயங்கித்தானே அவ்வளவு பெரிய வீரர் , பெரிய பழுவேட்டையர் தனது ஐம்பது வயதுக்கு மேல் அவளைத் திருமணம் செய்து கொண்டதுமல்லாமல் , எங்கு போனாலும் பல்லக்கில் வைத்து தன்னுடனே அழைத்துச் செல்கிறார் என்று பொது மக்களின் கேலிக்கும் பரிகாசத்திற்கும் ஆளான கதையைத்தான் பார்த்திருக்கிறோமே...
நல்ல வேளை.. அந்த பெரிய பழுவேட்டையர் மட்டும் இந்த முகநூல் , வாட்சப் காலத்தில் இருந்திருந்தால் அவ்வளவுதான் ... மனிதரை மீம்ஸ் போட்டே கிழித்திருப்பார்கள். .. என்று எண்ணி நம்மை சமாதானப்படுத்திக் கொள்ளக் கூட முடியவில்லை.
பொன்னியின் செல்வன் பிரியர்கள் (வெறியர்கள் .. ? ) முகநூலில் #பொன்னியின்_செல்வன்_மீம்ஸ் என்றதொரு பக்கத்தை துவக்கி அந்த கதையின் மாந்தர்கள் ஒரு கை பார்த்து வருகிறார்கள். எங்காவது முகநூலில் ஒரு கதைக்கு அல்லது வரலாற்றுப் புதினத்திற்கு இத்தனை பக்கங்களும் , குழுக்களும் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சரி.. சரி..
நந்தினி கதாபாத்திரத்தைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே நண்பர்களே...

யசோத நந்தனன்

மயிலிறகின் உருவகம் கண்ணனா அல்லது கண்ணனின் உருவகம்தான் மயிலிறகா என்று பிரித்துப் பார்க்க இயலாவண்ணம்
மயிலிறகின் வண்ணத்தையே தனக்காய்க் கொண்ட மோகன வண்ணன் ...
சகல உலகங்களையும்
தனது வேணுவின் கானத்தால்
மயக்கி கிறங்க வைக்கும் பேரழகன்..
குறையொன்றும் இல்லை..
இந்த மறைமூர்த்தி கண்ணனைத்
தஞ்சம் என்று அடைந்தோர்க்கு ..
உலக ஓவியதினத்தன்று
எனது தூரிகை வழி வந்துதித்த
யசோத நந்தனன்...

பரிதி பாவேந்தன்

 பரிதி பாவேந்தன்

புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து வந்த புரட்சிக் கவிஞராம்
            புதுக்கவிதை தந்த பாரதிக்கு தனை தாசன் என்றவராம்
மதுநிகர்த்த போதையூறும் கவிதை பலவும் தந்தவராம்
            மனமுழுதும் தமிழின் வாசம் நிறையும் குணத்தைக் கொண்டவராம்.

அழகின் சிரிப்பு இருண்ட வீடு பாண்டியன் பரிசு
            அன்பு குடும்ப விளக்கு எதிர்பாராமுத்த நூல்கள் தந்தவராம்
மழலைக்கேற்ற எளிய பாடல் பலவும் ஈந்தவராம்
            மறத் தமிழர் என்ற பெருமை எண்ணம் நெஞ்சில் கொண்டவராம்.

நறுக்கு மீசை கொண்டு பார்க்க எளிய தோற்றம் பெற்றவராம்
            நனி சிறந்த நல்ல பாடல்களால் தமிழுணர்வை  தந்தவராம்
முறுக்கு மீசை பாரதிக்கு மிகவும் பிடித்த சீடராம்
            முத்தமிழின் சிறப்பை மேலும் வளர்க்க தம் வாழ்வைத் தந்தவராம்

தமிழ் தனக்கு அமிழ்து என்ற பெயரைத் தந்தவராம்
            தமிழ்க் கடலில் மூழ்கி சங்கெடுத்து முழங்கச் சொன்னவராம்.
அமிழ்தின் சிறந்த தமிழை உயிரின் சிறந்த தென்றவராம்
            அன்னை தமிழின் இருளை போக்க வந்த பரிதி யொத்தவராம்

கவி ஆக்கம் : மாணவ நண்பன் - (முத்துக் குமரன்)

முகவரி :
கவிஞர். அ.முத்துக்குமரன் ,
கலையாசிரியர் ,
எண்: 13 , இரண்டாவது குறுக்குத்தெரு ,
பட்டுசாமி நகர்,
கோட்டலாம்பாக்கம் ,
புதுப்பேட்டை - அஞ்சல் ,
பண்ணுருட்டி - வட்டம்,
கடலூர் மாவட்டம்.
அ.கு. எண்: 607108.

தொடர்பு எண்:  9842618876
                                8608097188

மின்னஞ்சல் :bhuvanaamkn@gmail.com

Wednesday 27 March 2019

நான் சொல்வதெல்லாம் காதல்

நான் சொல்வதெல்லாம் காதல்
காதலைத் தவிர வேறொன்றுமில்லை...
இன்று காதலர் தினமாமே...
காதலுக்கென தனியே ஒரு தினம் வேண்டுமா என்ன ? என்பதுதான் எனது வினா .
காதல்...
இந்தப் பிரபஞ்சத்தை அனுதினமும் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு மூன்றெழுத்து மாயாஜாலம் ...!
செவிகளில் விழுந்த உடன் விழிகளிலே வானவில்லைத் தெறிக்கவிடும் மகேந்திபுரி
வர்ணஜாலம் ...!
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
எனத் தான் இறை மேல் கொண்ட
பக்தியையும் கூட காதலாக்கிப்
பாமாலை சூட்டி மகிழ்ந்தார்
தேவாரம் தந்த மூவருள் ஒருவரான
ஞானப்பாலுண்ட ஞானசம்பந்தர்...
மாலவன் மேல் மையலுற்று
காதலித்தவன் கரம் பற்றிடக் கனாக் கண்டு
மார்கழியில் வைகறைத் துயில் நீங்கி
திருப்பாவை பாடி
தன் தளிர்க் கரங்களால் தொடுத்திட்ட மாலையை முதலில் தான் சூடி
பின் மாயோனுக்கும் சூட்டியதால்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள்
மானுடப் பெண்பாவை ஆண்டாள் ...
காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...
என்று பகிரங்கமாகவே தன் பாட்டால் காதலிக்க அழைத்திட்டான்
முறுக்கு மீசையோடு தலையிலே முண்டாசும்
இதயத்தில் பெருங்காதலையும் சுமந்த
மகாகவி பாரதி...
அவனேதான் இன்னும் சற்று மேலே போய்
காதல் காதல் காதல்... காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.... என்றும் முழங்கி
முரசறைந்தான் அந்த முதுகவிஞன்...
காதல் என்பது என்ன?
என்ன மாதிரியான உணர்வு...?
...
...
காதல் என்பது அன்பு
காதல் என்பது பாசம்
காதல் என்பது பக்தி
காதல் என்பது பற்று
காதல் என்பது நேசம்
காதல் என்பது நட்பு
காதல் என்பது கருணை
காதல் என்பது கனவு
காதல் என்பது புனிதம்
காதல் என்பது அடிப்படை
காதல் என்பது உயிர்நேயம்
காதல் என்பது பெருங்கருணை
ஆனால் இன்றைய காலங்களில்
இளைய சமுதாயத்தினரும்
பதின்பருவத்தினரும் காதலைப் பற்றிய கருதுகோளாகக் கொண்டிருப்பது என்ன?
திரைப்படங்கள் அவர்கள் மனதிலே காதலை உருவகப்படுத்தியிருப்பது எவ்வாறு...?
காதல் என்பது ஒரு ஆண் பெண் மேல் கொள்ளும் அன்பு அல்லது
பெண் ஆண் மேல் கொள்ளும் அன்பு
என்பதாகத்தானே...
காமத்தின் மாற்றுவடிவமாகத்தானே...
இந்த காதலர் தினத்தை உலகத்தின் ஒரு சாரார் மிக ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும்
கொண்டாடிக் கொண்டிருக்க
இன்னொரு சாராரோ காதலர் தினத்தைக் கொண்டாடுவோரை
காமுகர் கூட்டமாகவே கருதி வசைபாடுவதும்
அவர்கள் மேல் வெறுப்பை
வாரி உமிழ்ந்து தூற்றித் திரிவதும்
கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்து
காதலையே கொச்சையாக்கி இகழ்வதுமாய்
களேபரம் செய்து கொண்டிருக்கிறார்களே...
ஏன் இப்படி...? அனேகமாக அவர்கள் சங்கிகளின் ராகமாக இருக்கலாம்...
இடையே இன்னொரு அதிகபட்ச வேடிக்கை என்னவென்றால் சில இளைஞர்கள் கிளம்பியிருக்கிறார்கள் ...
I Hate valentine's Day... என்றும்
நான் முரட்டு சிங்கிள் டா ...
என்றும் கூறி ப்ரொஃபைலில் வந்து
கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.
காதல் சின்னத்தையே உலக அதிசயமாகக்கொண்டுள்ள நம் பாரத பூமியில் ஏன் இப்படி ?
அதெல்லாம் தெரியாது
வார்டன்னா அடிப்போம் என்ற வடிவேலுவின் காமெடிக் கணக்காக LOVE னாலே
காதல் தான்... காதல்னாலே காமம்தான்
என்றானதற்கு மூலகாரணங்களே
நிச்சயமாகத் திரைப்படத் துறையினர் தான்
என்பதில் சந்தேகம் ஏதும் கிடையாது என்பதே உலகறிந்த உண்மைதானே...
ஆனால் 2000 வருடங்களுக்கு முன்னரே
காதல் என்பது ஆண் பெண் பாலினம் சார்ந்த அன்பு என்ற பார்வையைத் தாண்டி ஒரு உயிர் மேல் உயிர் கொள்வது என்று குறள் கொடுத்தானே வள்ளுவன்...
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
வகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்ற இருவரிகளில் தெறிக்கிறது (தெரிகிறது என்றும் படிக்கலாம்)
இந்த உலகில் வாழும் பல்லுயிர்க் கோளத்தின் மீதான நமது வள்ளுவனின் காதல்...
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடியதிலும்
பசித்தோரின் பிணி நீக்க ஏற்றி வைத்த அணையா விளக்கின் அனலிலும் வெளிப்படுகின்றது காதலின் மீதான வள்ளலாரின் மற்றொரு பரிமாணம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடி, செல்லம்மா தன் செல்லங்களின் பசி தீர்க்கவென கடன் வாங்கி வைத்திருந்த நொய்யரிசியத்தனையையும் புள்ளினங்களுக்கு வாரி வாரி இறைத்திட்ட
பாரதியின் செயலில் தெரிகிறதே ஒரு பேரன்பு.. அதுவல்லவோ காதல்...
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல...
அதையும் தாண்டிப் புனிதமானது...
னிதமானது..
இதமானது....
ஆம்...
கம்பன் தன் இராமகாதையிலே தீட்டியிருப்பான் ஒரு காட்சியை .. -
சித்திரமாக ...
மிதிலா புர நகரத்து வீதியிலே
விஸ்வாமித்திர முனிவன் முன் நடக்க ...
தன் இளவல் இலட்சுமணன் பின் தொடர
முனிவனைத் தொடர்ந்து செல்கிறான்
வில்லேந்திய கரங்களுடன்
தசரத இராமன்...
அரண்மனையின் உப்பரிகையிலே உலா வந்து கொண்டிருந்த ஜனக புத்திரி சீதா தேவி
இளவரசன் இராமச்சந்திரனைப் பார்க்கின்றன.
ஏதேச்சையாக இராமனும் அவளைப் பார்க்கின்றான்.
இக்காட்சியை கம்பன் எவ்வாறு உரைக்கின்றான் தெரியுமா.?
அண்ணலும் நோக்கினான்;
அவளும் நோக்கினாள்.... என்று
கண்ணும் கண்ணும் கலந்ததால் உண்டான காதலை நயமுடன் நவின்றிருப்பார் அந்தக்
கவிச்சக்கரவர்த்தி .
அதையே தான் நவீன திரைப்படங்கள் இவ்வாறு பாடலாக்கியிருக்கின்றன...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்.... எனவும் ,
விழியில் விழி மோதி இதயக் கதவொன்று
திறந்ததே.... எனவும்
பாடலாக்கி மகிழ்ந்திருக்கின்றனர் நமது கவிஞர் பெருமக்கள் ...
காதலைச் சொல்ல நினைத்து...
சொல்ல முடியாமல் தவிக்கும் காதலர்கள் நிலையை கண்ணதாசன் பாடியுள்ள விதத்தைப் பாருங்களேன்...
சொல்லத்தான் நினைக்கிறேன்..
சொல்லத்தான் துடிக்கிறேன்...
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்... ஓஹோ...
ஆஹா.. ஆஹா...
கண்ணதாசன் கண்ணதாசன்தான்...
இந்தப் பாடலின் முதல் சரணத்திலே பட்டையைக் கிளப்பியிருப்பார் கவிஞர்.
காதல் என்பது மழையானால் ...
அவள் கண்கள்தானே கார்மேகம்...
இவ்வரிகளுக்கு மாற்று வரிகளை உங்களால் யோசிக்கத்தான் முடியுமா?
இப்பாடல் வரிகளின் நவீன வடிவம் எது தெரியுமா ?
சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்...
காதல் சுகமானது...
அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில்
வரும் அற்புதமான பாடல் வரிகள்தான் என்னைப் பொருத்தவரை காதலர்க்கான தேசிய கீதம் என்பேன்.
வரிகள் காதுகளில் நுழையும்போதே உள்ளத்தில் காதல் பூ பூக்கும்...
மனதில் மத்தாப்பூ பூக்கும்...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்து விடு...
அலைகள் உரசும் கரையினில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு...
...
...
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்...
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்...
அடா.. அடா... வைர வரிகள் அல்லவா
நம் வைரமுத்துவின் வரிகள்...
உயிர் உருகும் சத்தம் நிஜமாக கேட்கும்... உண்மையான காதலருக்கு..
காதல் என்பது தெய்வீகமானதோ...
மானுடர்க்குச் சொந்தமானதோ...
எனக்குத் தெரியாது...
காதல் என்பது ஓர் மயிலிறகு...
அது நம் உடலை மட்டுமல்ல...
நமது மனதையும் கூட
மென்மையாக வருடும் ....
எனவே
மானிடக் காதலர்க்கும்...
தெய்வீகக் காதலர்க்கும்..
உயிர் காதலர்க்கும்...
காதல் என்ற அன்பினை அடுத்தவர்க்கு அள்ளி அள்ளி வழங்கும் அத்தனை
அன்பர்களுக்கும் ...
என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
காதலைக் கொஞ்சம் காதலிப்போமா?

நான் தீட்டிய ஓவியம் ...
கண்ணனும் ,ராதையும் 
அவர்களது விழிகள் வழியே
பெருகி வழிந்தோடும் காதலும்...
( mixed medium )

*அறுபடப்போகும் ஆடுகளுக்கான கடைசித் தீனி!*


 *அறுபடப்போகும் ஆடுகளுக்கான கடைசித் தீனி!*
*தேர்தல் நெருங்குகிறது; வெற்று கூச்சல்கள் விண்ணைத் தொடுகிறது. பழையத் தேர்தல் அறிக்கைகளின் தேதிகள் மாற்றப்பட்டு, அச்சு மாறாமல் வெளியிடப்படும். திமுக 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி' என்பதும், அதிமுக 'கச்சத்தீவை மீட்போம்' என்பதும், காங்கிரஸ் 'கல்விக் கடன் ரத்து' என்பதும் பாஜக 'இராமர் கோயில் கட்டுவோம்' என்பதும் பழைய பஞ்சாங்கம் தான் என்றாலும் புதிய அட்டைகளோடு வெளியிடப்படும்*.

*ஒரே மாதிரியான அறிக்கையை வார்த்தைகளில் சில மாற்றம் செய்து எல்லாக் கட்சிகளும் வெளியிடும். ஆனால் மக்களுக்கோ இறுதியில் மிஞ்சப்போவது ஏமாற்றம் மட்டுமே.😩😩😩😩😩😩😩இவர்கள் ஏமாறுவதுகூட சிக்கல் இல்லை, நாம் ஏமாந்துவிட்டோம் என்பதனை உணரும்🤮🤮🤮🤮🤮🤮அறிவுகூட இங்கு யாருக்குமே இல்லை என்பதுதான் பெரும் சோகம்.*
*தேர்தல் அறிக்கைகளில் இலவசப் பொருள்களைத் தருவோமென அறிவிப்பு தந்த காலம் மலையேறிப் போய்விட்டது.🍾🍾🍻💰💷💶💴 இப்பொழுது நிலத்திற்கு 6000..60000 ரூபாய் என்று npej ஏழைக் குடும்பத்திற்கு 2000 ...20000ரூபாய் என்று febqqbej
அறிவிப்பது என்பது மோசடியின் உச்சம். இவையெல்லாம் சமூக நலத் திட்டத்தில் வருமென வாய்கிழியப் பேச ஒரு பகுத்தறிவு பக்கோடா கூட்டம் இந்நேரம் கிளம்பி இருக்கும்.*
*இலவசங்கள் மக்களை மந்தைகளாக🐮🐷🐄🐄🦙🦙🐑🐐மாற்றுகிறது என்று நாம் சொன்னோம். அதற்கு திராவிட அறிவு ஜீவிகள், ஏழைகளும் பொருளாதாரச் சமநிலையை எட்டுவதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுவதாக கத்தினார்கள். இன்று பொருள்களுக்கு பதில் பணமே நேரடியாக வழங்குவதென அரசுகள் முடிவு செய்துவிட்டன.* 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
*பல கோடியில் ஒரு திட்டத்தை தீட்டி, அதில் கமிசன் பேரம் பேசி, தன்னோட டீலுக்கு யார் சம்மதிக்கின்றனரோ, அவர்களுக்கு டென்டர் வழங்கி, கமிசனைக் கணக்கச்சிதமாக வாங்கி, அந்தப் பணத்தையே வார்டு வார்டாக பிரித்துக் கொடுத்து, சட்டத்திட்டங்களுக்கு முரணாக வாக்கை விலைக் கொடுத்து வாங்கிய க.....தி, பு...... வி காலத்து அரசியல் இன்று இல்லை. நேரடியாக அரசு கருவூலத்தில் இருந்தே, சட்டத் திட்டங்களின் படியே, வாக்கிற்கு பணத்தைக் கொடுக்கும் பலே கில்லாடிகளான .எ _____மி,
தா===== மோ போன்றோர்களின் காலம் இது என்பது எப்பேற்பட்ட சமூகநல வளர்ச்சி (?) என்பதை அனைவரும் உணருங்கள்.*
*வாங்கியே பழகிய அடிமை மக்களுக்கு இந்த இலவசங்களுக்கு பின்னால் உள்ள அரசியல் ஒருபோதும் புரியப் போவதில்லை. பொருள்களை இலவசமாகக் கொடுத்தக் காலத்திலேயே, 'எனக்கு வேலை கொடு.. நானே உழைத்து எனக்கானப் பொருளை ஈட்டிக் கொள்கிறேன்'🤩🧐🧐🧐🧐🥶🥶🥶 என்று சொல்கின்ற துணிவு நம்மில் ஒருவருக்கும் வராமல் போனதன் விளைவாக, உயிர் ஆதாரமான குடிநீர் விற்பனைப் பொருளாய் மாறிப்போனது. இன்று பணத்தையே இலவசமாகத் தருகின்றனர் என்றால் அடுத்து மொத்த நாட்டையும் விற்பனைப் பண்டமாக மாற்றப் போகின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?*
*ஆனாலும், மக்களின் மனதில் உள்ளூர நப்பாசைகள் தட்டுப்படத் தொடங்கிவிட்டன. எப்பொழுது காசு வரும், முதல் வரிசையில் நின்று காசு வாங்கலாம் என்று காத்துக்கிடக்கின்றனர்.*
*ஒரு நாட்டின் உண்மையான மேம்பாடு என்பது அந்நாட்டின் மக்களும் அரசும் சுயசார்போடு வாழ்கின்றதா இல்லையா என்பதனைப் பொறுத்தே அமையும்.🤓🤓🤓🤓 இலவசங்கள் தருவதென்பது சுயசார்பு என்ற உணர்வையே அறுத்தெறியும் வேலை அன்றோ! இதனை இந்த நாட்டின் மக்களுக்கு யார் தான் கற்றுக் கொடுப்பது?* 🤔🤔🤔🤔🤔
*சுதந்திரத்தையே சுயராஜ்ஜியம் என்ற சொல்லாடலில் முழங்கிய ஒரு தேசத்தின் மொத்த மக்களும், கட்சிகள் அறிவிக்கும் பிச்சைகளில் சிறந்த பிச்சை எதுவென்று தேர்வு செய்து அவர்களுக்கு வாக்களித்து, அவர்கள் வழங்கும் பிச்சையை வரிசைக்கட்டி வாங்கிச் செல்வது அவமானம் அன்றோ!*
*முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பரமணியம்தான் சொன்னார், 'வெற்று வாக்குறுதிகளே சாதனைகளாக கொண்டாடுவது இந்திய ஜனநாயகத்திற்கு சாபக் கேடாய் மாறிப்போகும்' என்று. இதோ, இலட்சம் வங்கிக் கணக்கில் போடுவதாக வீராவசனம் பேசிய மோ____ அடுத்த தேர்தல்கால வெற்று அறிவிப்பு 6000 ரூபாய். 110 விதிகளின் நாயகி, வெற்று வாக்குறுதிகளின் தலைவி அம்மையார்
பு - வி ன் வாரிசு எ - மி அரசின் தேர்தல்கால சலுகை 2000 ரூபாய். இவர்கள் மக்களுக்கு போடப்போவதோ பட்டை நாமம் மட்டுமே.*
*இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு தோராயமாக 20 இலட்சம் கோடி. மத்திய மாநில அரசுகள் உலக வங்கியிடம் வாங்கியுள்ள கடன் 72 இலட்சம் கோடி. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இந்தியாவின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது. நாடே அடமானத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும் இலவசங்களை இவர்கள் அள்ளி வீசுகிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம்தான் என்ன? சமூக மேம்பாடா? பொருளாதார சமநிலையா? மக்களின் மீது பற்றா? ஏழைகளின் மீது காதலா?*
*இல்லை... இல்லவே இல்லை...*
*நாளை காலை கசாப்புக் கடையில் வெட்டப்படும் ஆடாக இருந்தாலும், இன்று இரவு புல் போடுவது என்பது ஆட்டின் மீதான காதல் அல்ல... கடைசி தீனி... அவ்வளவுதான்...*
*வாக்காள பெருங்குடி ஆடுகளே...*
*பலி பீடத்தில் தலையைவைக்கும் முன் ஒரு முறை இலவசப் பிச்சைகளை வாங்கிவிட்டுச் செல்லுங்கள்...*
*வாக்கும் நாடும் விற்பனைக்கு வந்துவிட்டப்பின் இலவசங்கள் என்பவை மந்தைகளாய் மாறிய மனிதர்களுக்கு விருந்தாகத்தான் தெரியும்... ஆனால் அதுவே கடைசி தீனி என்பதை அந்த ஆடுகளால் உணரத்தான் முடியுமோ!*
- *பேராசிரியர்*