Thursday 29 March 2018

நான் ... நான் மட்டுமே

நான் ... நான் மட்டுமே


எனது பிள்ளைப்  பருவக் கருப்புவெள்ளைக் காலங்கள் தொடங்கி
பதின்பருவ வண்ண வசந்த காலங்கள் ஊடே நுழைந்து
இந்த நடுத்தர வயது நிகழ் பருவக் காலம் வரை
உள்ள படப்பதிவுகள் இதோ இங்கே
வரிசைகட்டி நிற்பது என் நினைவுகளைப் புரட்டிப் பார்த்து
நான் காலவெளியில் என் கடந்தகால நினைவுகளை நோக்கி
பயணிக்க மட்டுமல்ல ...இதைக் கண்ணுறும் உங்களையும்கூட
உங்கள் கடந்தகால பாதையினை நோக்கி

உங்களை செலுத்தவும்தான் ...!
பழைய நினைவுகளைக் கிளறி
நேரம் கிடைத்தபோதெல்லாம்
சேகரித்து வைத்த இப்படப் பதிவினை இட
இன்றுதான் எனக்கு நேரம் கிடைத்தது...!
சற்றே முயன்றால் நீங்களும் கூட
நீங்கள் நடந்துவந்த பாதையைப் பதிவிடலாமே


Friday 23 March 2018

பூமி நேரங்கள்

பூமி நேரங்கள்

பூமி நேரங்கள் 
அது என்ன பூமி நேரங்கள்?
               நாளுக்கு நாள் நமது ஆற்றல் நுகர்வுகள் அதி பெருக்கத்தின் காரணமாக தனது வாழ் நாளின் இறுதியை நோக்கி வேகமாக பூமியை உந்தித் தள்ளிக்கொண்டு இருக்கின்றோம். இந்த அழகிய பூமி ....அழிய .... அதாவது ,இந்த உலகப் பந்து அழிவதற்கு ....அதாவது இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான முழுத் தகுதியை இழப்பதற்கு முழுப் பொறுப்பும் யாருக்கு தெரியுமா ?அதன் கடைசி வரவான மனிதனுக்குத்தான் .
               ஆம். பூமியானது மனிதனுக்கு மட்டும் படைக்கப் படவில்லை .அதாவது பூமியில் மனிதன் மட்டும் தோன்றவில்லை .பல்லாயிரக்கணக்கான
உயிர்களும் தோன்றி உள்ளன.எல்லா உயிர்களும் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை இவ்வையகம் தன்னில் கொண்டுள்ளது . அதனை அனைத்து உயிர்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் இந்த பூமிப் பந்து அளித்துக் கொண்டு வருகிறது .
               ஆனால் ,சிந்திக்கவும் , சிரிக்கவும் தெரிந்த ஒரே உயிரினமான மனிதனுக்கு இன்னொரு குணமும் அதிகமாகிவிட்டது .
               அதுதான் பேராசை ...!
                தனக்காக மட்டும் இந்த பூமி படைக்கப் பட்டுள்ளதாக எண்ணிய மனிதன் ஆக்க சக்திகளுக்காக பயன் படுத்தவேண்டிய அறிவியலின் வளர்ச்சியை எந்த அளவுக்கு அழிவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கும் விஞ்சி பயன்[படுத்தி பல்லுயிர் பெருக்கத்திற்கான சுற்றுச் சூழலை நஞ்சாக்கிவருகின்றான்.நகரமயமாக்கல் மூலம் வனங்களை அழித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் மழை மேகங்களையும் கேள்விக்குறியாக்கிவிட்டான்  .
காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விளை நிலமாக்கிய மனிதன் பேராசையின் எல்லைக் கூட்டுக்கே சென்று விளை நிலங்களை விலை நிலங்களாக்கிவிட்டான் ;மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்த  இடத்தை வேகமாக கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான்.
             தொழிற்சாலைகளை பெருக்கி கழிவுகளை நதிகளிலும் கடலிலும் கலக்கவிட்டு நீர்ச் சூழலை நாசமாக்கி நீர் சூழல் உயிர்களை காவு வாங்கிக் கொண்டு இருக்கிறான் .
             செயற்கை உரங்களையும் உயிர்க்கொல்லி மருந்துகளையும் இட்டு வேளாண் புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு எஞ்சியுள்ள விளை நிலங்களை
மலடாக்கி வருகின்றான் .
             தூரத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று புற்றீசல் போல நான்கு சக்கர வாகனங்களையும் , இரு சக்கர வாகனங்களையும் பெருக்கியும் , பல்வேறு தொழிற்சாலைகளைக் கட்டி தொழிற்புரட்சி என்ற பெயரில் பூமியையே மூச்சுத் திணறவைக்கும் அளவிற்கு புகை மண்டலமாக்கி காற்றுச் சூழலை மாசுபடுத்தி விட்டான் .
           இவ்வாறு எல்லா சூழல் மண்டலங்களையும் மாசு சூழ் உலகமாக்கி பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிய மனிதன் இப்போது அட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தக் கதை என்பார்களே ...அதுபோல் தனக்கான வாழ்வாதாரத்தை தானே சுரண்டிக் கொண்டு இருக்கின்றான் .
          நுனிக் கிளையில் அமர்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டு இருக்கும் பேதைத் தனம் மட்டுமே மனிதனிடம் எஞ்சியுள்ளது. கிளை வெட்டு பட்டதும் வீழப் போவது கிளை மட்டுமல்ல .அதில் அமர்ந்து தன் சாவுக்கு தானே குழிவெட்டுவதுபோல் , கிளையை வெட்டிக்கொண்டு இருந்தானே ...அவனும் அல்லவா...?
            தினமும் தங்க முட்டையிடும் வாத்தை வரமாகப் பெற்றவன் பேராசை மிஞ்சியமையால் ஒட்டுமொத்த வரத்தையும் ஒரே நாளில் பெரும் எண்ணம் கொண்டு வாத்தின் வயிற்றையே அறுத்தானாமே ...ஒரு மூர்க்கன் ...அந்தக் கதையாகிவிட்டது ..மனிதனின் சூழல் விரோத நடத்தைகள் .
           விளைவு ........? மனிதனின் சூழல் விரோத நடத்தைகளின் விளைவு ....?
         அமில மழை ,மழியின்மையால் கடும் வறட்சி ஒருபுறம் , அதிக மழையில் சிக்கி ஜல சமாதியாக்கும் வெள்ளக் காடு ஒருபுறம் ,எல் -நினா ,லா நினோ போன்ற காற்றுச் சூறாவளிகளும் கவர்ச்சியான பெண்களின் பெயர்களைத் தாங்கி பூமியையே புரட்டிப் போடும் பேய்க் காற்று -சுழல் காற்று ஒருபுறம் -தாவரங்களின் நண்பர்களாகிய  மண் புழுக்களும் ,நுண் பாக்டீரியாக்களும் கூட வாழத் தகுதியற்று மலடாய்ப் போன விளை நிலங்கள் ஒருபுறம் - காற்று மாசுபாட்டால் குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதல் காரணமாக துருவங்களிலே உருகும் பனியானது கடலில் கலந்து கடல் மட்டத்தை உயர்த்தி மிச்சமிருக்கும் ஒரு பங்கு நிலத்தையும் மூழ்கடிக்கத் துடிக்கும் மூர்க்கத் தனம் ஒருபுறம் -தகவல் தொழில் நுட்பமும் நேனோ தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணைத் தொடும் செல்போன் கோபுரங்களை உண்டாக்கி இலவசமாக கதிர் வீச்சுகளை வழங்கி சிட்டுக் குருவிகளைப் போன்ற அழகுப் பறவைகளையும் இன்ன பிற உயிரினங்களையும் இருக்குமிடம் தெரியாமல் தொலைந்துபோகச் செய்தது மட்டுமல்லாமல் தனக்கும் புற்று நோயையும் - பெயரே தெரியாத - மருந்துகளே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது புது நோய்களையும் உண்டாக்கிய அனைத்துப் பெருமையும் நம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தம் .
            அனல் மின்னாற்றல் ,நீர் மின்னாற்றல் ,சூரிய மின்னாற்றல் ,அலையாற்றல் ,புவி வெப்ப ஆற்றல் ஆகியவற்றை பயன் படுத்தி மின்சாரம் எடுக்க வக்கில்லாத மனித இனம் பூமியில் ஆங்காங்கே அணுமின் உலைகளை நிறுவி கதிர்வீச்சு அபாயம் என்னும் வலையில் பூமியை சிக்க வைத்து விட்டான் .
               தனக்கான எல்லா ஆற்றல்களும் பூமியிலிருந்தே கிடைக்கும் என்று தெரிந்துகொண்ட மனிதன் பூமித்தாயின் கர்ப்பப் பையான  நடுபூமி வரை ஊடுருவிச் சென்று நிலக்கரி ,பெட்ரோலியம் ,எரிவாயு என அனைத்தையும் சுரண்டி எடுத்துக் கொண்டு எதிர்காலத் தலைமுறையினை நிர் கதியாக்கிய  பெருமையும் நம் காலத்தவர்க்கே நிச்சயம் சேரும் .
             இது போன்று மனிதனின் சூழல் விரோத நவடிக்கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது எங்கே போய் முடியும்....?
              அது பற்றி நமக்கென்ன அக்கறை ? நமக்கான வாழ்க்கையை நாம் அன்றாக வாழ்ந்துவிட்டுப் போகலாம் . வரும் தலை முறையினரின் வாழ்வைப் பற்றி நாம் என் கவலைப் பட வேடும் என்கிறீர்களா ?
              இந்த உலகம் இப்போது எப்படி உள்ளதோ ,இதை  விட சற்றே உன்னதமாக்கி -வாழும் சூழ்நிலையை மகிழ்ச்சிகரமானதாக்கி நம் சந்ததியருக்கு விட்டு செல்லும் பொறுப்பு நம்கையில் அல்லவா இருக்கிறது ?
              அது மட்டுமல்ல ... ! சூழல் விரோத நடவடிக்கை என்பது - சுற்றுச் சூழல் சீர்கேடு என்பது நாம் போட்ட முடிச்சு .அதை நாம்தானே அவிழ்க்க வேண்டும். !
 நம்மால் ஏற்பட்ட சிக்கலை நாம்தானே களைய வேண்டும் !
             அதற்காக இனியேனும் நமது மூளையை சற்றே கசக்கிக் கொள்ளலாமே !முதலில் எடுத்து வைக்கும் ஒருசிலரின் அடிகளால் என்ன மாற்றம் பெரிதாக வந்துவிடப் போகிறது ? என்று சிந்திக்காமல் - எதிர் கேள்விகள் கேட்காமல் --- வாதித்துக் கொண்டிராமல் - வீண் விதண்டா வாதங்களில் ஈடுபடாமல் -நேரடி செயலில் இறங்கும் நேரம் வந்துவிட்டது
              சிறுதுளி பெரிதல்லவா?
              அடி மேல் அடித்தால் ... அம்மியும் நகரும்தானே ?
              என்ன செய்யலாம் ......?
              சூழலின் சீர்கேடு மேலும் மேலும் மோசமாவதைத் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்?
               முதலில் எல்லோரும் 'கால நிலை மாற்றம் ' என்பதகான மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று மனதார எண்ண வேண்டும்.
               ஆற்றல் நுகர்வுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்போம்.அதற்கான குறியீடுதான் மார்ச்-24 -The Earth  மார்ச்-24-The Earth  Hour - இரவு 8-30 மணி முதல் 9-30 மணி வரை அனைத்து மின் உபயோகங்களை நிறுத்தம் செய்தல் .
                  குண்டு விளக்கிலிருந்து (இப்போது இவை அரிதாகவே பயன் படுத்துகின்றார்கள் -அநேகம் பேர் சூழல் விளக்கிற்கு -CFL அல்லது LED -க்கு மாறிவிட்டார்கள் )குழல் விளக்கு வரை அனைத்து ஒளி ஆற்றல்களையும் நிறுத்துவோம்.மின் விசிறிகள்  ,தொலைகாட்சிகள்  ,குளிரூட்டிகள் என உள்ள அத்துணை மின் நுகர்வுப் பொருட்களின் இயக்கங்களையும் கூட இந்த ஒரு மணிநேரம் நிறுத்திவைப்போம் .இது வீடுகளில் வசிப்பவர்களுக்கான குடும்பஸ்தர்களுக்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம் ,வியாபாரிகள் ,வர்த்தக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இதில் மனமுவந்து பெருந்தன்மையுடன் பங்கேற்க முன்வரவேண்டும் .  உயிர்  காக்கும் அத்தியாவசிய பொருட்கள் -நிறுவனங்கள் மட்டும் விதிவிலக்கு பெறட்டும். ஏனைய பொழுதுபோக்கு தளங்களான திரையரங்குகள் ,உணவகங்கள் , தங்கும் விடுதிகள் ,ஷாப்பிங் மால்கள் போன்றவை ஈறாக அனைத்து தரப்பினரும் தாமாகவே முன்வந்து மின்சார இயக்கத்தினை நிறுத்த வேண்டும்.தாவர எண்ணெய் விளக்குகள் ,மெழுகு வர்த்திகள் ஆகியவற்றின் ஒளியிலும் அந்த ஒரு மணி நேரத்தை -60 நிமிடங்களை -3600 விநாடிகளை -நமது குடும்ப உறுப்பினர்களுடன் -நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசிக் களிப்போம் .
                 சற்றே கற்பனை செய்து பாருங்கள் ! ஒருமணி நேரம் நம் வீட்டில் அனைத்து மின் நுகர்வும் நிறுத்தப் பட்டால் மிச்சமாகும் அல்லது சேகரமாகும் மின் அழகு எவ்வளவு ? நம் வீட்டில் மட்டும் இவ்வளவு மிச்சம் என்றால் ,நம் ஊர் மொத்தமும் எவ்வளவு யூனிட்  மின்சாரம் மிச்சமாகும்?நம் ஊரில் மட்டுமே இவ்வளவு மின்சார சக்தி மிச்சப்பட்டால் மாவட்டம் முழுவதும் ...மாநிலம் முழுவதும் ,,,நாடு முழுமைக்கும் ...? நாட்டிற்கே இவ்வளவு மின்சாரம் மிச்சமெனில் ஒட்டு மொத்த உலகத்திற்கும் ....?  
                  கற்பனை செய்து பாருங்கள் ! நம் தமிழகத்தில் மட்டுமோ அல்லது கடலூர் மாவட்டத்திலோ,பண்ருட்டியிலோ  மட்டும் இப்படி செய்யப் போவது இல்லை .!தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக மனித இனம் செயல் பட வேண்டிய நேரம் இது  அல்லவா?
                 அதனால் மனித இனம் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் - கண்டங்களிலும் -ஏன் ...உலகம் முழுவதுமே  அந்த ஒரு மணிநேரம் இயற்கை ஆர்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் தானாகவே முன்வந்து மின்சாரத்தினை நிறுத்தி இந்த இருள் சூழ் உலகை ஒருமணி நேரம் முழுமைக்கும் இயற்கை ஒளியில் மட்டுமே மூழ்கவைக்க தயாராகிறார்கள்  .
                 இதனை உலகில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான WWF.COM  ,SCOUT.ORG உள்ளிட்டவை ஒரு இயக்கமாகவே மாற்றி கடந்த 2011 முதல் செயல்படுத்தி வருகின்றன .விருப்பம் கொண்டு நீங்களும் இணையலாமே இந்த இயக்கத்தில்...                                                                                                       EARTH HOUR என்ற இணைய தளத்திலும் ,முக நூல் (FACE BOOK ),டுவிட்டர் (TWITTER) பக்கங்களிலும் ,யூ டியூப் (YOU TUBE)தளத்திலும் மேலும் இதனைப் பற்றி விபரங்களை அறியலாம் .
               ஆற்றலை சேமிப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே உதாரணத்திற்காக மின்சார இயக்க நிறுத்தம் பற்றி இங்கு கூறப் பட்டுள்ளது .
  இதுபோல் ,போக்குவரத்து துறையை  எடுத்துக் கொண்டால் நான்கு சக்கர ,இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் திரவ எரிபொருளான பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் அளவுகளை நினைத்துப் பாருங்கள் .எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சேமகலங்களில் இயங்கும் அல்லது சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன .ஆனால் அவை மிக சொற்பமே .தனிப்  போக்குவரத்தினை பயன்படுத்துவதை தவிர்த்து பொது போக்குவரத்தினை பயன் படுத்தும் மனநிலைக்கு நாம் அனைவரும் ,மாறவேண்டும் .நமக்கு உடற் பயிற்சியை அளிக்கும் -சூழலுக்கு ஊறு  விளைவிக்காத மிதிவண்டிப் பயன்பாட்டை மனதார ஏற்கவேண்டும்.அதற்கு அரசும் தன்  பங்கிற்கு மிதிவண்டியை பயன்படுத்துபவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக சில சலுகைகளை அறிவிக்கலாம் .இது போல எந்த இடங்களில் -எந்த வகைகளில் -எந்த முறைகளில்  ஆற்றலை சேமிக்க இயலுமோ அந்த வழிகளில் முயல வேண்டும்.மக்களை முயலச் செய்ய வேண்டும். மரங்களை வெட்டுவோர் மீதான தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் . மரக் கன்றுகள் நடுவதை மிக மிக  .அதிகப் படுத்தவேண்டும் .குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் ---சாலை விரிவாக்கத்திற்காக நாம் வெட்டி வீழ்த்திய மரங்களின்  எண்ணிக்கையை கேட்டால் தலை சுற்றும், அதற்கான பதில் மரங்களை நட்டுப் பராமரிக்கின்றோமா என்றால்  அநேகமாக இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும் .
            எனவே மனிதன் இனிமேலாவது சுய நலத்தை தொலைத்து-ஆடம்பர வாழ்க்கையை -வசதியான வாழ்க்கையை மட்டுமே மோகிக்காமல் , சூழல் நலத்தையும் எண்ணவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளான் என்பதுதான் நிஜம் .
             
               வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
               வைத்தூறு போலக் கெடும் .
   
என்றான் வள்ளுவப் பெருந்தகை.
               இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும் என்பதை உணர்ந்து சூழல் விரோத நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வோம்.
                இயற்கையைப் பாதுகாப்போம் .எங்கும் மரங்களை நட்டு வைப்போம் .
 பூமி நேரங்கள் (EARTH HOUR )-இயக்கத்தில் நாமும் கலந்துகொள்வோம்.நாம் அறிந்ததைப் பிறருக்கும் பகிர்வோம் .அதற்கு முக நூல் ,டுவிட்டர் ,வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்துவோம் .பூமிப் பந்தைக் காப்போம் .
                  குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கான அறைகூவல் இது . வாருங்கள் !
               உலகம் உங்கள் கைகளில் ...
               இல்லை.... இல்லை ....நமது கைகளில்


விடுகதையாகும் விஞ்ஞானம்

விடுகதையாகும்  விஞ்ஞானம்



விஞ்ஞான  முன்னேற்றம் என்னும் பெயரால் 
          அஞ்ஞானம் அகற்றியதாய்  கர்வம் கொண்டு 
இஞ்ஞாலம் முழுமைக்கும் துரோகம் செய்து 
          இன்னல்பல தருகின்றான் மனிதன் நாளும் 

பகுத்துண்டு பல்லுயிரை ஓம்புக வென்றான் 
          பாங்காகக் குறள்தந்த வள்ளுவன் அன்று  
மிகுதியான பேராசை கொண்டே மனிதன் 
          மிச்சமுள்ள உயிர்ச் சூழல் கெடுக்கின்றானே 

அறிவியல் இவ்வுலகத்தின் ஆக்கத் திற்கே 
           அறிந்திருந்தும் அழிவுக்காய் செய்தான் மனிதன் 
தறிகெட்டுப் போகின்ற அவனை இன்றே
           தடுத்தால் மட்டும்தான் உய்யும் உலகம் 

தூரத்தை விரைவாகக் கடப்ப தற்கே 
          துரிதமாகச் செல்லுகின்ற வாகனம் படைத்தான் 
பாரத்தைக் கூட அவை  சுமக்கும் நன்றாய் 
          பாதகமாய்ப் புகை கக்கிச் சூழலும் கெடுக்கும் 

முறையற்றுப் பெருகியதன்  காரணத் தாலும் 
          மூர்க்கமாகச் செலுத்துவோரின் மதிவசத்  தாலும் 
நிறையபேரின் விலையில்லா உயிர்களை எல்லாம் 
          நிலஉலகை நீங்க வைக்கும் விபத்தின் பெயரால்.

கடினமான பாறைகளை  பிளப்ப தற்கும் 
          கச்சிதமாய் சுரங்கங்கள் அமைப்ப தற்கும்
வெடிபொருளைக் கண்டறிந்தார் அறிஞர் ஒருவர் 
         வேண்டாத தொல்லையெலாம் விளைந்தது பாரீர் !

வெடிபொருளும் பரிணாம வளர்ச்சி கொண்டே 
           வேட்டுவைக்கும் அணுகுண்டாய் மாறிய திங்கே 
கடிதினிலே முழுஉலகம் தனையும் நன்றே 
           கச்சிதமாய் அழிக்குந்திறன் அதற்கே யுண்டாம்

விந்தைமிகு மின்சக்தி தனையும் கூட 
           விபத்தாய்தான் மனிதன் கண்டுகொண்டான் அன்று 
அந்தோமிகப் பரிதாபம் அதன் துணையின்றி 
           அணுகணமும் நகராது  அவன் வாழ்நாளில் 

தொலைதூர மனிதருடன் தொடர்பு கொள்ள 
           தொலைபேசிச்  சாதனத்தைப் படைத்தான் இங்கே 
மலைத்துப் நின்றதுதான் மிச்சம் ஐயோ 
           மதிமயங்கி மனம் கெடுத்தது செல்போனாகி 

ஓயாமல் செல்போனில் பேசிக்கொண்டே 
            ஒருபக்கமாகத் தன்தலையை சாய்த்து நின்றே 
மாயாலோக முகநூல் கட்செவி தன்னில்
            மதிமயங்கி  மாந்தரெல்லாம்  மூழ்கு கின்றார் 

உலகனைத்தும் உள்ளங்கை தன்னில் நன்றாய் 
            உள்ளதென்று சொல்லும்    படியாகத்  தானே
வலைப் பின்னல்  ஒன்றையிங்கு மனிதன் நெய்தான் 
            வலியதொரு  இணையம்எனப் பெயரை இட்டான் 

தேடுபொறி தனிலெதனை உள்ளிட் டாலும் 
             தெளிவாகக் காட்டிடுமே  விபரம் நொடியில் 
ஊடுருவி வளருகின்ற களைகள் போலே 
             ஒழுங்குநெறி கெடுத்துவிடும் அல்லவை  காட்டி 


விட்டில்கள் விளக்கின்மேல் வீழ்ந்தாற்போல
             வீணாக வீழ்ந்துகெடும் இளையோர் கூட்டம் 
பட்டால்தான் புத்திவரும் சிலருக் கிங்கே 
             பட்டும்கெட்டும் புத்திவரா பதர்தான் பலபேர் 

உடலுழைப்பு வேலைகளை செய்யும் பொறிகள் 
             உதவிக்காய் வந்ததென எண்ணி மாந்தர் 
கடமைகளை செய்வதற்கும் சோம்பிப் போனார்
             காலமெல்லாம் நோய்களுக்கே இரையாய் ஆனார்

நடப்பதற்கு கூட மிகப்  பெருமூச் செறிந்து
            நாக்கு தள்ளும் வண்ணம்  உடல்பெருத்தே நின்றான்
உடல்நன்றாய் இளைப்பதற்காய் அனுதினந் தோறும்
            உடற்பெயர்ச்சி எனும்பெயரில் தனைவருத்திக் கொண்டான்

இன்னும்பல இருக்கிறது எடுத்தியம்பி டவே
            இருப்பினும்நான் இத்துடனே  முடித்திட வேணும்
சொன்னதை யெல்லாம் கேட்டு பகுத்தறிவுடனே
             செயல்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்திடு வீரே !

தீயிங்கு நன்மைக்கா தீமைக்கா  சொல்
              தீங்கென்பது  தீயிலில்லை விளங்கி கொள்வாய்
நீயிங்கதைக் கையாளும் முறையா லன்றோ
              நிச்சயமாய் அதன் பலனைநிர்ணயிக் கின்றாய்

கத்தி கொண்டு காய்கனியை நாம்நறுக் கிடலாம்
              காலனையும் வரவழைக்க கழுத்தறுத் திடலாம்
புத்திகொண்டு கருமங்கள் நிறைவேற் றிட்டால்
              புவியிலிங்கு புன்னகையின்   தேசம் மலரும்

இனிமேலும் அறிவியலை ஆக்கத் திற்கே
              இட்டுச்செல்லும் பாதையிலே பயணிப்ப போமே
கனியிருக்கக் காய்கவர்வ தெதற்கு என்ற
              கனிதமிழில் மொழிகின்ற குறள்வழி நடப்போம்



                                                                                            -  மாணவ நண்பன் 



ஐயா ,
வணக்கம் .
தங்கள் சர்வதேசக் கவிதை போட்டியில் பங்கேற்கும் நான் எழுதிய

விடுகதையாகும்  விஞ்ஞானம் எனும் 

இக்கவிதை இது வரையிலும் எந்த பத்திரிகையிலும் இடம்பெறவில்லை என உறுதி கூறுகின்றேன் .மேலும்  கவிதை தேர்வாகும் பட்சத்தில் நூலாக்கத்தில்
இடம் பெறவும் மனமாற மகிழ்ந்து சம்மதிக்கிறேன்.




பெயர் : மாணவ நண்பன் @
                 அ .முத்துக் குமரன்
                 த /பெ   சு .அப்பர்சாமி
                 13,  2-ஆவது குறுக்குத் தெரு
                 பட்டுசாமி நகர் ,கோட்டலாம்பாக்கம்
                 புதுப்பேட்டை -அஞ்சல்
                 பண்ணுருட்டி வட்டம்
                 கடலூர் மாவட்டம்
                 607108


பிறந்த நாள்                    :13-07-1967
பேசி மகிழ                      :9842618876 
கட்செவி அஞ்சலுக்கு :8608097188
மின்னஞ்சல் முகவரி  :bhuvanaamkn@gmail.com



Friday 16 March 2018

கிருஷ்ண சிந்து

கிருஷ்ண சிந்து

பிருந்தாவனம் வளர் கண்ணன்
செய்யும் லீலைகளில்  மன்னன்
       
          நந்த கோபாலனின் மகனா யவன் வளர்போதினில்
          செய்தான் பல லீலை ...கிருஷ்ண லீலை
                                         லீலை ....கிருஷ்ண லீலை
                                                                                         (  தன நன்னே தன நன்னே தானா  )

பூதனை வதம் 


பூதனையின் முலை கடித்து
கடும் வலிதாங் காதவள் துடித்து
         
           அவள் பூதாகர உடல் சாய்ந்திட பாலாயவள்  உயிர் பருகிய
           கிருஷ்ணன் ...பால கிருஷ்ணன்
                             கிருஷ்ணன் ...பால கிருஷ்ணன்
                                                                                        (  தன நன்னே தன நன்னே தானா  )


நவநீத கிருஷ்ணன் ( வெண்ணைத் திருடி )

யாதவச் சிறுவர்கள் கூடி
வெண்ணைத் தாழிகளை யவன் தேடி

            அவர் முதுகேறியே உறிசாய்த்திட சிறு  கரம் கொண்டு
            வழித்தள்ளியே தின்றான் வெண்ணை திருடி
                           திருடி... வெண்ணைத் திருடி
                                                                                       (  தன நன்னே தன நன்னே தானா )


மண் தின்ற வாயன் ( புவனம் காட்டல் )

அன்று தின்றுவிட்டான் வெண்ணை
ஐயோ இன்றோ தின்கின்றானே மண்ணை

             என்றே பதறிய தன்தாய் யசோதை வியந்திடவே
             காட்டிவிட்டான்  அவனும் வாயில் புவனம்
                                               அவனும் வாயில் புவனம் 
                                                                                       (  தன நன்னே தன நன்னே தானா )

 காளிங்க நர்த்தனம்

காளிங்க  மடுவினில் குதித்தே
நாக காளிங்கனின் தலை மிதித்தே

               அவன் வாலை யொரு கரம் பிடித்திட  தன் காலை யவன்
               அசைத்தாடிய நர்த்தனம் காளிங்க நர்த்தனம்  
                                               நர்த்தனம் காளிங்க நர்த்தனம் 
                                                                                        (  தன நன்னே தன நன்னே தானா )

கோவர்த்தன கிரிதாரி 

இந்திர பூஜையைத் தடுத்தே
கோவர்த்தன மலைக் கதைக் கொடுத்தே

    அதன் விளைவாய்க் கடும் மழை பெய்திட ஊர் மக்களின்  உயிர் காத்திட
    மலை பெயர்த்தான்    குடையாய்  பிடித்தான் .
                                          கோவர்தனன் ..குடை பிடித்தான் .
                                                                                         (  தன நன்னே தன நன்னே தானா )


துகில் கவரும் கள்வன் 

கோபியர் எல்லோரும் கூடி
யமுனை நதியினிலே நீராடி

        மகிழ் நேரந்தனில் துகில் வாரியே மரமேறியே சிரித்தானவன்
        குறும்பும் மனம் விரும்பும்
                                   குறும்பும் மனம் விரும்பும்
                                                                                         (  தன நன்னே தன நன்னே தானா )

இராச  லீலை

யமுனை நதிக்கரை யோரம்
முழு மதியொன்று உலவிடும் நேரம்

        வேய்ங்குழலூதிட மனம் மயங்கிய   கோபியரொடு
        அவனாடிய லீலை ...ராச லீலை
                                 லீலை ...ராச லீலை

                                                                                         (  தன நன்னே தன நன்னே தானா )







                          
   





                                         


 








                                                                             


Wednesday 14 March 2018

நூற்றாண்டு விழா வாழ்த்துக்கள்

மாணவர் சேவையில் 23 ஆண்டுகள் ...

நூற்றாண்டு  விழா வாழ்த்துக்கள்

ஸ்வாசிகா இயக்கம் தனது வெள்ளிவிழாவை நோக்கி தனது மாணவர் சேவையை தொடரும் நேரத்தில்  நூற்றாண்டு விழா  காணும்  தொரப்பாடி   ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு   தனது மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ...

என்றும் மாணவர் சேவையில் ...


A .முத்துக்குமரன் -   நிறுவனர்
G .மதன்  -                     தலைவர்
R ,ராஜேஷ் குமார் -  பொதுச் செயலாளர்
M  .முருகானந்தம்  -   பொருளாளர்
R . ராஜலிங்கம்  -        ஆலோசகர்

மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள்








Tuesday 13 March 2018

ரம்மியக் காட்சி

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு திடீர் பயணம் ...
ஞாயிறு அன்று ....
ஞாயிறு மறையும் வேளை ...
எனது திறன் பேசியின் கண்கள் அவ்வப்போது
தனது  கண்ணில் பட்ட காட்சிகளை
தன் நினைவுத் திரையில் சேகரித்துக்கொண்டது .
சிவகங்கைப் பூங்காவில் தனது  இலைகளையெல்லாம்









தொலைத்துவிட்டு நின்றிருந்த ஒரு ஏகாந்த மரம் ...
கதிரவன் கொடுத்துக்கொண்டிருந்த
அந்த நாளைய நிறைவு ஒளியின் பின்புலத்தில்
ராஜ ராஜன் கட்டிய தட்சிண மேருவின்
ரம்மியக் காட்சி
உங்கள் விழிகளுக்கு விருந்தாக ..





தாய்க்கு தாலாட்டு

இது என் தாய்க்கு நான் பாடும் தாலாட்டு
என்தாய்க்கு என்றா கூறினேன் ...?
இல்லை ...இல்லை...நம் தாய்க்கு
தாலாட்டு என்றா கூறினேன் ...?
இல்லை இல்லை ...
நான் என்ன இவளை உறங்க வைக்கவா போகிறேன் ?
அல்லவே ...
உற்சாகப் படுத்தத்தானே போகிறேன் ...!
அப்படியானால்  இவளை துயிலெழுப்ப
நான் பாடும் சுப்ரபாதம் ...
திருப்பள்ளியெழுச்சி ...

பாரதியும்  பாடினான் அன்று
பாரதமாதாவுக்கு ஒரு பள்ளியெழுச்சி
இன்று இந்த மாணவ நண்பனும் பாடுகிறேன்
என் பள்ளிக்கும் ஒரு பள்ளியெழுச்சி
இதற்கு காரணம் என் மாணவ சகோதர்களின்
பள்ளிக்காய் திரண்ட சீர்மிகு எழுச்சி !

பள்ளிக் கூடம்
இரண்டு வார்த்தைகளில் ஒரு கவிதை
ஏழு எழுத்துக்களில் எனக்கு வாய்த்த ஒரு அம்மா
எனக்கு மட்டுமா?
இதை இங்கே கூட்டமாய் குழுமி இருக்கிறோமே
நம் அனைவருக்கும் கூட
இவள்தானே தாயுமானவள் ...!

என் தாயுமானவளே ...!
என் இரண்டாம் தாயே ...!
இன்னுமேன்உ றக்கம் ...துயிலெழு !

நம்மை ஈன்ற அன்னை கூட
நம்மை சுமந்ததென்னவோ பத்து மாதங்கள்தான்
ஆனால் எம் தாயே...!
ஐந்து  ஆண்டுகள் அல்லவா எங்களை சுமந்திருந்தாய்
உன் வகுப்பறை என்னும் கருவறையில்
அன்று மாணவனாய்க் கருக்கொண்டோம்
எங்கள் ஆசான்கள் ஊட்டிய அமுதக்  கல்விப்  பாலைப்
பருகிய காரணத்தால் அல்லவா இன்று
ஆசிரியனாய்
மருத்துவனாய்
பொறியாளனாய்
காவல்துறை அலுவலனாய்
வழக்கறிஞனாய்
விஞ்ஞானியாய்
கலைஞனாய்
கவிஞனாய்
இன்னும் இன்னும்
பல்கலை வித்தகனாய் உருக்கொண்டோம்...!
அத்தனைக்கும் மேலாய்
நல்ல மனிதனாய் இருக்கின்றோம்...!
எமையெல்லாம் ஆசிர்வதிக்க எண்ணமில்லையா../
விரைந்து துயிலெழு 1

அன்று தொடங்கி இன்று வரையிலும்
மாணவச் சமுதாயமாகிய எங்களையெல்லாம்
ஆசான்கள் என்னும் சிற்பிகள் கொண்டு
அனுபவம் என்னும் உளியினால்
செதுக்கிச் சிலையாக்கும் சீர்மிகு பணிக்குக்
களம்  அமைத்துக் கொடுக்கும்
சிற்பக்  கூடம் அல்லவா நீ!
சீக்கிரம் துயிலெழு !

நூற்றாண்டுகளின் நுழைவாயிலை நோக்கி
பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் உனக்கு
ஆண்டுகள் பல கடந்தாலும் 
எம் தமிழன்னைபோல சீரிளமை கொண்டு இளங்குகின்றாய் 
உன் மக்கள் அல்லவா  நாங்கள் !
உன்நூற்றாண்டைக் கொண்டாட மனம் கொண்டோம்

தலைமையாசிரியரின்  பகீரதப் பிரயத்தனம் காரணமாய்
இங்கு பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் உறுதுணையாய் நிற்க 
இவ்வூரின் நாலஉள்ளங்கள் பல ஆதரவுக்கு கரம் நீட்ட

புத்துணர்வு பெற்று இன்று
புத்தொளிர் பள்ளியானாய்
பெருமிதத்துடன் பூரித்து நிற்கிறாய்!
போதும் உறக்கம் ...! உடனே துயிலெழு !

எம் தாயே ...!
குடியிருந்த கோயில் காண நாங்கள்
குவிந்துள்ளோம் ஒன்றாய் இன்று...!
பல தலைமுறைகள் உன்னால்தான் இன்று
நாங்கள் அனைவரும் உன்னில் இன்று ...!
வாழ்விற்கான பாதையை காட்டிய வள்ளலே ...!
வாழ்வாங்கு நாங்கள் வாழும் செய்திகள் பகிர
எங்கள் கால்கள் உனக்கான பாதை நோக்கப் பயணப்பட்டன
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயாய்
நீ திகழும் கோலம் காண கூடியுள்ளோம் இங்கு.
நின் பாதமலர் தொழுகின்றோம்
எம் பள்ளியே துயிலெழு !

இதோ நாங்களெல்லாம்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி மூழ்கி
மலரும் நினைவுகளை
முத்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம்!
நெகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்து
பள்ளிப் பருவ  நினைவுகளை
பிள்ளைப் பருவ நினைவுகளை 
அசை போட்டு மகிழ்கின்றோம் !
அறிவுக் கண் திறந்த  ஆசான்களையெல்லாம்
ஒருங்கே கண்டு கண்கள்  பனித்திருக்கின்றோம் !
ஒளிவிளக்கே துயிலெழு!


உன்னால் நாங்கள் பெருமை அடைந்தோம்...!
இன்று உன்னையும் நாங்கள் பெருமைப் படுத்துகின்றோம்!
இப்பள்ளியில் படிப்பதனால்  பெருமையடைகின்றோம்...!
இப்பள்ளியும் எங்களால் பெருமையடைச் செய்வோம்
என்ற உறுதிமொழி ஏற்றோம் அன்று !
அவ்வுறுதிமொழியினை நிறைவேற்றி
அனைவரும் உன்முன்னே இன்று !அன்பே துயிலெழு!


எம் நூற்றாண்டுப் பள்ளியே  
எம்மை வளர்த்து ஆளாக்கிய பள்ளியே...!
எம் வாரிசுகளின் வருங்காலத்தையும்
உன்வசமே ஒப்படைக்கின்றோம்
எங்களை போன்றே
அவர்களையும் செதுக்கியெடு!
செம்மைப் படுத்திச் சீர்தூக்கு !
உன்னால் சிறப்புற
உன்னால் மேம்பட
உன்னால் உயர்வடைய
இதோ எம் மாணவர் சமுத்திரம்
உன்முன் தவம் கிடக்கின்றது !
உறக்கம்போதும் அம்மா உடனே துயிலெழு !

எமக்கு அறிவைப் புகட்டிய ஆசான்களுக்கும்
எம் பிள்ளைப் பருவக் குறும்புகளுக்கு
இடம் கொடுத்த உனக்கும்
என் நெகிழ்ச்சிமிகு சமர்ப்பணங்கள் !
என்போன்றே ஆயிரமாயிரம்பேர்
சமர்ப்பணங்கள் ஏற்றிட
எம்தாய் நீ துயிலெழு!

நினைவலைகளில் நீந்திய களிப்புடன் .....!
வாய்ப்புக்கு நன்றி பகிர்ந்து
வழிவிடுகின்றேன் வரும் காலத்திற்கு...!
வசந்தங்கள் காத்திருக்கின்றன ...!
வாருங்கள் என் சொந்தங்களே!
நம்மை வளர்த்துவிட்ட அன்னைப் பள்ளிக்கு 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவோம் ...

நாம் மறைந்தாலும் தலைமுறைகளைத் தாண்டியும் 

நம் தலைமுறைகளை வளர்த்தெடுக்க  வாய்த்திருக்கின்ற 
நல் அன்னையே வாழ்க நீ 
இந்த வையத்து நாட்டிலெல்லாம் ...
வாழிய வாழியவே ...!