Tuesday 29 May 2018

ஒரு உன்னதம் உப தொழிலாகிறது -1

ஒரு உன்னதம் உப தொழிலாகிறது

இது 1999 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் , ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நான் எழுதிய ஒரு கட்டுரை .

அப்போது நான் ஆசிரியர்தான் ...ஆனால் அரசுப் பணி அல்ல .
தனியாய் ஒரு ஆங்கில நர்சரி துவக்கப் பள்ளியை நடத்தி வந்ததோடு அதே பள்ளியிலேயே கற்பித்தல் பணியையும் நடத்திவந்தேன் .என் தந்தையும்கூட ஒரு ஆசிரியர்தான் .

ஆசிரியர் பணியின் மீது ஒரு இடையறாத காதல் இருந்தது சிறுவயதிலேயே எனக்கு .

அதில் ஏகப்பட்ட கனவுகளும் ,திட்டமும் அவற்றை நிறைவேற்றத் துடிக்கும் முனைப்பும் எனக்குள் சிறுவயது முதலே இருந்தது எனலாம் .

அவற்றை எல்லாம் நான் நடத்திவந்த எனது பள்ளியில் செயல்படுத்தி ஓரளவு வெற்றியும் கண்டேன் என்றுதான் கூறவேண்டும் .

அப்போது எனது பார்வையிலான அரசுப்  பள்ளி ஆசிரியர்கள் குறித்து எனது எண்ணங்களுக்கு ஒரு கட்டுரை வடிவம் தந்தேன் .

அது சமயம்  புதுப்பேட்டை கவிஞர் . கல்விப்பணித் திலகம் திரு N .தாஜுதீன் அய்யா அவர்களின் மகன் மைதீன் அவர்கள் எனக்கு பழக்கமானார் . மாணவன் என்ற பருவத்திலிருந்து இளைஞன் என்ற வடிவத்துக்கு ... நிலைமாற்றம் அடைந்துகொண்டிருந்தவர் .துடிப்புள்ள , தேடலுள்ள அநியாயத்தைக் கண்டு கொதிக்கின்ற இள ரத்தம் கொண்டவர் .தட்டிக் கேட்பதற்கென்றே சமூகத்தின் அரண் என்ற இயக்கத்தை துவக்கியவர் .அதற்கான சின்னம் @ இலச்சினை ( logo ) கட வரைந்து தந்துள்ளேன் .அவர் நடத்திய ஒரு புரட்சி இதழ்தான் அணுகல் என்ற விளம்பர இதழ் . அனைவருக்கும் இலவசமாக வழங்கப் பட்டு வந்தது .

நான் கூட இதன் தாக்கத்தில் ஸ்வாசிகாவின் அறிவியல் அலைகள் என்ற மாத சஞ்சிகையை விளம்பர தாரர் மூலம் இலவசமாக நடத்திவந்தேன் .


அந்த அணுகல் என்னும் சஞ்சிகையில் மலர் 1  ( ஆகஸ்ட் மாதம்  வெளியானது இதழ் 1 ) 2 ஆவது இதழில்  ( செப்டம்பர் மாதம் வெளியானது )இக்கட்டுரையை வெளியிட்டு சிறப்பித்தார் தோழர் மைதீன் ..என் கட்டுரை ஒரு பத்திரிகையில் வெளிவந்தது மிக்க மகிழ்ச்சியளித்தது .

அந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்களும் வாசகர் கடிதங்களாக மைதீனுக்கும் , எனது தனிப்பட்ட முகவரிக்கும் கூட வந்து என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கின .அடுத்த அணுகல் இதழில் அவையும் வெளியிடப்பட்டன .

இப்போது இக்கட்டுரை வெளியாகி 19 வருடங்கள் ஆகிவிட்டன .
அணுகல் பத்திரிகை வெளிவருவதில்லை

எனக்கு 2002 ல் அரசுப் பணி கிடைத்துவிட்டது .
மைதீன் பாண்டிச்சேரியில் வாழ்ந்துவருகிறார் ...
அவரது இலக்கிய & சமூகப் பணிகள் முக நூலில் பதிவதன் மூலம் தொடர்கிறது .

நான் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளேன் மேலும் மனவண்ணங்கள் என்னும் வலைப்பூ ( blog ) மூலமும் முகநூல் , ட்விட்டர் மூலமும் எனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறேன் .

நிற்க,

ஒருமுறை  மைதீன்  அவர்களை  சந்தித்தபோது சந்தேகத்துடன் கேட்டேன் .மைதீன் அணுகல் பத்திரிகையில் ஒருமுறை ஆசிரியர்  குறித்து  கட்டுரை எழுதியிருந்தேனே ...அதன் பிரதி ஏதேனும் கைவசம் வைத்திருக்கிறீர்களா?என்று சற்றே சந்தேகத்துடன்தான் கேட்டேன் .சிரித்தபடி  அதெல்லாம் பத்திரமாக இருக்கிறது ...நிச்சயம் தருகிறேன் எனக் கூறிச்சென்றார். பின்னர்  அது பற்றி சுத்தமாக மறந்துபோனேன் .

ஆனால் ,அன்றைய அணுகல் பத்திரிகையின்  ஒரு ஒளிநகல் ஒன்று மைதீன் மூலம் சமீபத்தில் கிடைத்தது .வீட்டுக்கே வருகை தந்து கொடுத்துவிட்டுப் போனார் .

அக்கட்டுரையை வாசித்தேன் .வியந்தேன் .

எழுதிய அன்றைய நாளுக்கும் 19 வருடங்கள் கழித்து அக் கட்டுரையை வாசிக்கிற இன்றைய நாளினுக்குமான நீண்ட இடைவெளியில் ஆசிரியர் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் என்னென்ன ?

 நினைத்துப் பார்க்கிறேன் ...
கண்ணுக்கு கெட்டியதூரம் வரையிலும் முன்னேற்றம் ஒன்றும் காட்சியளிக்கவில்லை .

மாறாக ஆசிரியர்களின் மேல் அள்ளிப் பூசப்படும் சேற்றின் அளவுதான் அதிகரித்திருக்கிறது .

அவர்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கும் சுமைகள்தான் அதிகமாயிருக்கின்றன .

வெகு தூரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நம்பிக்கை நட்சத்திரங்கள் காட்சியளித்தாலும் கூட வெறுமை வேதனை அளிப்பதாகவே உள்ளது .

ஆசிரியப்பணி இன்னும் கடினமாய் இருக்கிறது .

கடினமாக ஆக்கப்பட்டு இருக்கிறது .

ஒருமுறை  பள்ளியில் ஒரு வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த மாணவர்களிடம்  நீங்கள் எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறீர்கள் என்று வினவியபோதுமருத்துவர்  , பொறியாளர் , காவல்துறை ,  விளையாட்டு வீரர்,ஓவியத்துறை ,திரைப்பட இயக்குனர்  ,  இன்னும் பிற துறைகளின் பெயர் வந்ததே தவிர   ஒருமாணவர்கூட   நான் ஆசிரியராகப் போகிறேன் என்று சொல்லவே  இல்லை .இது பற்றி அம்மாணவர்களிடம் நான்  காரணம்கேட்டபோது ஒரு மாணவன் எழுந்து நமுட்டுச் சிரிப்புடன் சொன்ன பதில் இது .

சார்...நாங்களே உங்கள இந்த பாடுபடுத்தறோமே ...எதிர்காலம் எப்படியிருக்குமோ தெரியல ...பாவம் சார் நீங்கல்லாம் ...வாத்தியாருங்கள  எங்கள மாதிரி பசங்க ரொம்பவே ஓட்டறாங்க ... அடங்க மாட்டேன்றாங்க ...ஆனா எங்களுக்கு எங்களுக்கு உங்க அளவுக்கெல்லாம் பொறுமையில்லை சார் ...அதான் வாத்தியார் வேலைய நினைச்சாலே ஜெர்க் ஆகிறோம் சார் .

எப்படியிருக்கிறது  பாருங்கள் ...!ஆசிரியர்  பணியின் மீதான மாணவர்களின் பார்வை  ...!

மாணவர்களின் பார்வை மட்டுமா ...ஒட்டுமொத்த சமுதாயத்தின் பார்வையும்கூட நாறித்தானே போய்விட்டது ...
சாரி ...மாறித்தானே போய்விட்டது...!

ஆம் ..!

ஆசிரியர்களுக்கான சமுதாய மரியாதை மிக வேகமாக சறுக்கிக் கீழிறங்கிக்கொண்டிருக்கிறது .

ஒத்துழைப்பே வழங்காத பெற்றோர் ,  ஆசிரியர்களை ஏளனப் பார்வை பார்த்து எதற்குமே கட்டுப் பட மறுத்து தத்தாரிகளாகிக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டம் , கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது கட்டளைகளை மட்டுமே பிறப்பிக்கும் கல்வி அதிகாரிகள் , இடையில் அவர்களை விழி பிதுங்க வைக்கும் கல்வி சாராத பணிகளான ஆதார் கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை பணி ,தேர்தல் பணி ,ரேஷன் கார்டு ..என இன்ன பிற புள்ளிவிவர சேகரிப்புப் பணிகள் உயர் மதிப்பெண்கள் மற்றும் 100 %  தேர்ச்சி விழுக்காடு துரத்தும் அழுத்தம் ...பேனை பெருமாளாக்கி பெருமாளை  பேயாகக் காட்டி TRB ஏற்றத்துடிக்கும் ஊடகங்கள் ...என இன்னும் இன்னும் சொல்லமுடியாத இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள் ...!

 என்ன செய்யலாம் ...?

சரி ...அதற்குமுன் நான் எழுதியிருந்த அக்கட்டுரையை வாசிப்போமா ...?

                                                                                                                        ( வாசிப்போம் ...)































அரசுப் பள்ளி ஆசிரியர்கள் V S பொது மக்கள்


அரசுப்  பள்ளி ஆசிரியர்கள்   V S    பொது மக்கள்

அது என்ன மாயமோ தெரியல மந்திரமோ தெரியல ...
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பார்களே அதைப்போல பொதுமக்கள் எல்லோருக்குமே
ஆசிரியர்கள் என்றாலே சற்று இளப்பமாகத்தான் இருக்கும் போல !

அரசுப்  பள்ளிகள் சரியில்லை .
இதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்ற அசட்டு எண்ணம் மக்களின் மனதை ஆட்டிப் படைக்கிறது .அதுவும் சமீப காலங்களில் சமூக
வலை த்தளங்களில் அதிகமாக  வறுபடுவது அரசுப்  பள்ளி  ஆசிரியர்களாகத்தான் இருக்கிறார்கள் .

அதற்கு அவர்கள் முன் வைக்கும் ஒரே காரணம் அரசுப்  பள்ளி  ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதுதான்  என்பதே .

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தம் மீதே அதாவது தம் கற்பித்தல் திறன் மீதே நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் அவர்கள் தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்களாம் ...!

அவர்கள் அத்தனைபேரும் தம் பிள்ளைகளை அரசுப்  பள்ளிகளில் சேர்த்துவிட்டால் அடுத்தகணமே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாயாஜாலம் போல அனைத்து அரசுப்  பள்ளிகளுமே ஆக்ஸ்போர்டு கல்வி நிலையங்களுக்கு ஈடாகிவிடுமாம் .எப்படி இருக்கிறது கூத்து ?

இதற்கு முக நூலில் வந்த பதிவிற்க்குப் பின்னூட்டம் வந்தது இப்படி ...!

"அரசுப்  பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை  அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் .அப்படி இல்லையெனில் அவர்களது பணி பறிக்கப் பட வேண்டும் "

அனைத்து  அரசுப்  பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பிடிக்கவில்லையென்றால் அவர்களின் பணியை பறிப்பது வரவேற்கத் தக்கதே ...அதற்கு முன்னர் ஒரு  வெள்ளோட்டம் போல இப்படிச் செய்தால் என்ன ?

அதாவது  ஆசிரியர்கள் கிடக்கட்டும் ஒருபுறம் ...அவர்கள் கீழ் மட்டப் பணியாளர்கள்தானே !

இவர்களுக்கெல்லாம் வழிகாட்டிகளாகவும் ,முன்னோடிகளாகவும் ,படியாளப்பவர்களாகவும் ,கலங்கரை விளக்கங்களாகவும் திகழ்கின்ற உயர்மட்ட அதிகாரிகள்,பதவியாளர்கள் ,பெருந்தலைகள் இருக்கிறார்களே

அவர்களிடம் செல்வோமா முதலில் ?

அந்த முக நூல் பதிவாளர் சொன்ன திட்டத்தை முதலில் இவர்களிடத்தில் செயல்படுத்திப் பார்ப்போம் ....திட்டம் வெற்றி பெற்றால் அதை பார்த்து அரச பள்ளி ஆசிரியர்கள் " ஆஹா நம் வழிகாட்டிகள் தமது வாரிசுகளை அதாவது தம் மகனை அல்லது மகளை அல்லது மகன் வழிப் பேரன் பேத்திகளை அல்லது மகள் வழிப் பேரன் பேத்திகளை அரசுப்  பள்ளியில் சேர்க்கும் போது நாம் மட்டும் ஏன் நமது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் ? என்று உணர்ந்து ...வெட்கி ...தம் பிள்ளைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிடுவார்கள் அல்லவா ?
டீலா ? நோ டீலா ?

டீல் என்னவென்று பார்த்துவிடுவோமா?

அதாவது 

முதல்வர் வீட்டு வாரிசுகள் 
கல்வி இயக்குனர் வீட்டு வாரிசுகள் ...
அமைச்சர்கள் வீட்டு வாரிசுகள் ...
ஆட்சியர் வீட்டு வாரிசுகள் ...
பா ம உ க்கள் வீட்டு வாரிசுகள் ...
ச ம உ   க்கள் வீட்டு வாரிசுகள்.... 
முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் வீட்டு வாரிசுகள் 

இவர்கள் எல்லாம் கூட அரசுப்  பள்ளியில்  படிப்பதுதான் 
நியாயம் இல்லையா ?

அரசு கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிரியர்கள் வீட்டு வாரிசுகள் அரசுப் பள்ளிகளிலும் அரசுக் கல்லூரிகளிலும்தான் படிக்கிறார்களா/

நீதிபதிகள் ,தாசில்தார்கள்  ,வருவாய் அலுவலர்கள் ,பதிவாளர்கள் ,காவல்துறையினர் ...இன்ன பிற அரசு ஊழியர்களின் வாரிசுகள்
( அதாவது பிள்ளைகள் அல்லது பேரப் பிள்ளைகள் ) நிச்சயம் அரச பள்ளியில்தான் படிக்கிறார்களா?


அப்படி இல்லையாயின் அவர்களது பதவி 
அல்லது பணிகள் பறிக்கப் படலாமா ?

முக நூலில் மேதாவித்  தனமாக பதிவிடும் நண்பர்களே ...!
முதலில் தங்களது பிள்ளைகள் அரசுப்  பள்ளியில்தான் படிக்கிறார்களா?

தமிழ் நாடு அரசுப்  பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக இருந்தால் போதாதா ?

ஆங்கில மீடியம் எதற்கு ?

ஏன் ஒவ்வொரு அரசுப்  பள்ளியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை எல்லாம் அவர்களின் உயர் கல்விக்கு உதவுகிறேன் பேர்வழி என்று அரசே அவர்களை வலுக்கட்டாயமாக அருகாமை மாவட்டத்தில் உள்ள பெரும் கல்விக் கொள்ளை பள்ளிகளில் சேர்த்து அதற்குப் பணமும் செலவழிக்கிறதே ? இதுவரையிலும் அம்மாணவன் அரசுப் பள்ளியில் பயின்றுதானே ...அரச பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களிடம்தானே கல்வி கற்று அவ்வளவு உயர்ந்த மதிப்பெண்ணை பெற்றான் ...இப்போது அரசுக்கு அப்பள்ளி ஆசிரியர்களிடம் நம்பிக்கை போய் விட்டதா என்ன ?

( எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பில்  460 ,470 ,475 ,477 என்று மிக நல்ல மதிப்பெண்கள் பெற்ற  மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலைக் கல்வியை எங்கள் பள்ளியில் படிக்கவேயில்லை தெரியுமா?
அவர்கள் எல்லாரும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தயவில் அருகமை மாவட்டத்தின் A K T , மற்றும்  மவுண்ட் பார்க்  பிரபலப் பள்ளிகளில் படிக்கச் சென்றுவிடுகிறார்கள் ..அப்படி சீராகி செல்லும் மாணவர்களிடம் பக்குவமாகப் பேசி அவர்களது பெற்றோர்களையும் ஒரு வழியாக சரிக்கட்டி எங்கள் பள்ளியிலேயே படிக்க வைக்க சம்மதிக்க வைத்தால் ...உடனே தொலைபேசியில் அழைத்து அவர்களை வசவு மாரி பொழிந்து வேரோடு பிடுங்கி அங்கே நட்டுவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள் நம் அதிகாரிகள் )

என்ன நடக்கிறது இங்கே இடையில்?

அது ஒரு புறம் இருக்கட்டும் ...ஏற்கெனவே இங்கே சமுதாயத்தில் பெற்றோர்களுக்கு ஆங்கிலப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மோகம் ஆட்டி வைக்கிறது ...தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரச பள்ளி ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று கேன்வாஸ் செய்து மாணவர்களை தொடக்கப் பள்ளியில் சேர்க்கும் நிலைமை .இந்த லட்சணத்தில் 25% இட  ஒதுக்கீடு என்ற பேரில் இருக்கும் சொற்ப மாணவர்களையும் தனியார் பள்ளிகளுக்கே தாரை வார்க்கும் அரசாங்கத்தை எங்கேனும் கண்டதுண்டா ?

இப்படி மதிப்பெண் மோகம் காட்டி தனியார் பள்ளிகள் ஒருபுறம் மாணவர்களை தம் பக்கம் இழுக்க ...மறுபுறமோ சற்றும் லஜ்ஜை இல்லாத அரசு ( அதிகாரிகள்?!) 25% கட்டையாக கல்வி உரிமைச்சட்டத்தின் பேரில்  தனியார் கல்விநிலையங்களை நோக்கி மாணவர்களை துரத்த ...

மாணவர் சேர்க்கை குறைந்ததால் காற்றோடிப் போன வகுப்பறைகளை , பள்ளிகளைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடவும் அருகாமைப் பள்ளிகளில் ஒருங்கிணைத்து ஆசிரியர்களின் பிழைப்பில் மண்ணைப் போடும்  அரசை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

இந்த லட்சணத்தில் அரச பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தால் ஆசிரியர்கள் மேல் நடவடிக்கையாம் ...
 சும்மாவா சொன்னார்கள் ...?
 'நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு எட்டு ஆடு கேட்குமாம் ' என்று ?




ஏன் தனியார் பள்ளிகள் அத்தனையையும் இழுத்து மூடிவிட்டு  அவற்றை எல்லாம் அரசுப்  பள்ளிகளோடு இணைத்துவிடக் கூடாது ?

அப்பொழுது அரச பள்ளி ஆசிரியர்கள் வேறு வழியே இல்லாமல் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் மட்டுமே சேர்ப்பார்கள் அல்லவா?

ஆலோசிக்கலாமே நண்பரே ...!

நான் அரசுப் பள்ளி ஆசிரியர்தான் ...
எனக்கு ஆண்டவன் அருளால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை 

பிறந்தால் நான் மனசாட்சிப்படி நிச்சயம் அரசுப்  பள்ளியில்தான் சேர்ப்பேன் 

சரியா?






Friday 25 May 2018

பாஷுவா பத்மாவதி அம்மன் ஆலயம் @ ஜெயின் டெம்பிள் -கிருஷ்ணகிரி


பாஷுவா பத்மாவதி அம்மன் ஆலயம் @ ஜெயின் டெம்பிள் -கிருஷ்ணகிரி 






















சமீபத்தில் ஸ்வாசிகா உறுப்பினர்களுடன் ஒரு மகிழ்வுப் பயணம் ...
ஹொகேனக்கல்லை நோக்கி ...

காலை ஹொகேனக்கல் அருவியை அடைந்து திகட்ட திகட்ட உடல் & உள்ளம் குளிராக குளிர ஒரு குளியல் ...நனையல் ...!

பின்னணி நன் பகல் வேளையில் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள ராயக்கோட்டை நோக்கிய பயணம் ...
மண்டை பிளக்கும் & வறுத்தெடுக்கும் வெயிலில் ராயக் கோட்டை மலையேற்றம் ...திப்புக்கோட்டையை அடைந்து செல்பி மழை ...

அதன் பின்னர் நெடுஞ்சாலை புளியமரத்தடி நிழலுபயத்தில் மாலை உணவு

( உண்மையில் அது மத்திய உணவு )

பின்னர் கிருஷ்ணகிரி படகு இல்லத்தில் மாலை குழு குழுவாக படகு சவாரி .

அதன் பின்னர் வானம் இருட்ட ..
காற்று சுழன்றடிக்க
வருண பகவான் பன்னீர் தெளித்து வரவேற்கும் வகையில்  சாரல் மழையாய் துவங்கி கடும் மழையாய் வெளுத்துக்கட்ட ...

இக்குளிர் சூழ்நிலையை சற்றும் எதிர் நோக்காத நாங்கள் கோடையில் பயண போனசாக குளிர் சூழலை அனுபவித்தபடி பாஷுவா பத்மாவதி அம்மன் ஆலயம் என்னும் ஜெயின் டெம்பிள் சென்றடைந்தோம் .மாலை 6-30 மணிதான் ஆனது எனினும் வருண பகவான் உபயத்தால் ஆகாச ராஜன் ரொம்பவும் இருட்டிக் காண்பித்தார் .

மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தபடியால் ஒருவருமே வேனை
விட்டு இறங்கவில்லை .ஒரு 10 நிமிடம் சென்றது ...மழை சிறு தூறலாக மாறி பன்னீர் சாரலாகி தவிட்டு மழையாகும் நேரம் வேனில் இருந்து இறங்கி ஆலயம் முன்பாக சென்றோம்























வாழ்நாள் சாதனைக் கலைஞர் விருது

வாழ்நாள் சாதனைக் கலைஞர் விருது 

அப்பாளு .C .சம்பந்தம்










தகப்பனார் பெயர் A .சின்னசாமி பத்தர்
தாயார் பத்மாவதி அம்மாள்
பிறந்ததேதி 20-05 -1939
பாட்டனார் அப்பாலு பத்தர் .
இவர் பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் . இப்பள்ளி போர்டு ஹை ஸ்கூல் என்று  வழங்கப் பட்டு வந்தது .


அப்பாலு பத்தர்  ராமலிங்க அடிகளார் திரு உருவபொம்மையை  செய்து  தர  
அவரும் அதனை வாங்கி பொன்னான மேனியை மண்ணால் செய்தனையே  
எனக் கூறி கீழே போட்டுடைத்தார்  எனும் செய்தி 
வள்ளலார் வரலாற்றில் வருகின்றது .


அவர் வசித்து வந்த தெரு இப்போதும் அவர் பெயரினால் 
அப்பாலு பத்தர் தெரு என்றே வழங்கப்படுகிறது .
நான்கு தலைமுறைகளாக களிமண் மற்றும் காகிதக் கூழ் கொண்டு இவர்கள் செய்யும்  பொம்மைகள் உலகப்  புகழ் புகழ்பெற்றவை 
என்பது பண்ணுருட்டியில் வாழும் பலருக்கும் தெரியாது .


ஆம் பண்ணுருட்டி பலாப் பழத்துக்கு ,முந்திரிக்கு மட்டும்தான் 
புகழ்பெற்றது என  அனைவரும் நினைத்திருப்போம் .
அனால் இது காகிதக் கூழ் பொம்மைகளுக்கு கூடப் பெயர்பெற்றதுதான் .
பின்னர் வந்த பலா ,முந்திரி இவை பொம்மையின் புகழை 
பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றே கூறவேண்டும் .
பிரௌன் நிற அல்சேஷன் நாய் பொம்மைகள் ,
செட்டியார் பொம்மைகள் 
உலகப் பிரசித்தி .
கடோதகஜன் செட் ,கும்பகர்ணன் செட்,  ,
தசாவதார செட் ,சரஸ்வதி போன்றவையும் புகழ்பெற்றவையே .


இவற்றுள் காகிதக் கூழ் கொண்டு செய்யப்பட்ட 
மீனாட்சிக் கல்யாணம் பொம்மை உயர்திரு சம்பந்தம் அய்யாவுக்கு 
1992-93 ஆம் வருடத்தில் பூம்புகார் ஸ்டேட் அவார்டு பெற்றுத் தந்தது .


தமிழ் நாட்டில் பாரம்பரியமாக கொலு வைத்துக் கொண்டிருக்கும் 
அத்துனைபேர் இல்லங்களிலும் 
இவர்கள் செய்து அளித்த பொம்மைகள் கட்டாயம் இருக்கும் .
இன்னமும் இவர்களுக்கு பல ஆர்டர் வந்தாலும்கூட 
நபர்களின் பற்றாக குறையால் இவர்கள் 
சிலவற்றை மட்டுமே செய்து வருகிறார்கள்.
காகிதக் கூழ் பொம்மைகள் பற்றிய 
ஒரு ஆவணப் படத்திற்காக இவர் வீட்டிற்குச் சென்றபோதுதான் 
நானும் இவரைப் பற்றியும் 
இவர் செய்துவரும் பொம்மைகளின் சிறப்பு பற்றியும் 
நன்கு தெரிந்துகொண்டேன்.

இவருக்கு S . பிரகாஷ்,S .மகேஷ் பாபு ,
S .லட்சுமிநாராயணன்  மகன்களும் உள்ளனர் .
புகழ் பெற்ற பத்திரிகை ஓவியர் மணியம் செல்வன் இவரது உறவினர் .
இவரது மூன்றாம் தலைமுறை இப்போது 
கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறது .
இவருக்குப் பிறகும் இக்கலை அழியாது பண்ணுருட்டிக்கு புகழ் சேர்க்க 
இக்கலையை அடுத்துவரும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு  
ஆர்வம் கொண்ட மாணவச் செல்வங்களுக்கு 
கற்றுத்தந்து அழிந்து கொண்டிருக்கும் 
இக்கலையை புதுப்பித்து உயிர்ப்போடு 
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் 
என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை

இவரது கலைத் திறமையைப் பாராட்டி  , 
பண்ணுருட்டிக்கு புகழ் சேர்த்துவரும் 
இவரது பொம்மைகளின் அழகை பாராட்டி
இவருக்கு நமது ஸ்வாசிகா இயக்கம் 
வாழ்நாள் சாதனைக் கலைஞர் என்ற பெருமை மிகு 
விருதினை அளித்துப் பாராட்டுகிறது .
அவர்   தனது துறையில் மேலும் பல சாதனைகள் படைக்கவும்
நலமாக வாழ நல்லஆரோக்கியத்தையும் வழங்க இறைவனை வேண்டுகிறோம் .

கலைகளில் சாதனை படைக்க  முதுமை ஒரு   தடையல்ல  
என்பதை நிரூபித்து வரும் சம்பந்தம் அய்யாவை 
நீங்களும் வாழ்த்தலாமே !

Monday 21 May 2018

கவிதை கணேசன் - தொல் பொருள் சேவா செம்மல் விருது .

தொல் பொருள் சேவா செம்மல் விருது .

கவிதை கணேசன் அவர்களுக்கு


பண்ணுருட்டி பகுதியில்  அநேகமாக கவிதைகணேசனை அனைவரும் அறிந்திருப்பர் .இவரைப் பற்றிய செய்திகள் நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அடிக்கடிவருவதை பார்த்திருக்கலாம் .

இவர் எங்கள் பள்ளியில் பணியாற்றிய N C C அலுவலர் திரு பாலச்  சந்தர் மூலம்தான் எனக்கு அறிமுகம் .அவருடைய வகுப்புத் தோழர் .சமவயதினர் . ஆனால் தோற்றத்திலோ மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் .

கவிதை கணேசன் அய்யா முதல் சந்திப்பிலேயே எனக்குள் பிரம்மிப்பை ஏற்படுத்தியவர் .ஓய்வுபெற்ற பின்னரும் இவ்வளவு சுறுசுறுப்பாய் ஆர்வமாய் பயணங்களுக்கு அசராத ஒரு மனிதரை பார்ப்பது மிக அபூர்வம் .

பண்ணுருட்டில் தற்போது முத்தையா நகரில் வசித்து வருகிறார்.
 பெற்றோர் .ஜானகிராமன் & ஜெயலட்சுமி .பண்ணுருட்டி அரசுமேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் .உணவுத் தரக்  கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் .

பழங்கால பொருட்கள் ..சில நேரங்களில் நாம் கேள்விப்பட்டிராத, பார்த்தேயிராத பொருட்டாகள் ,அருங்காட்சியகங்களில் கூடக் கணக்கு கிடைக்காத பொருட்கள் என பல அபூர்வ பொருட்கள் இவரது சேகரிப்பில் உண்டு . பழங்கால நாணயங்கள் ,வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் ,வரிசையாக 100 எண்கள் கொண்ட ரூபாய் நோட்டுக்கள் என பணத்தில்
இத்தனை வகைகளா என நம் விழிகள் வியப்பில் விரியும் .( ஒவ்வொரு முறை இவற்றைக் காட்சிப் படுத்தும்போதும் பார்வையாளர்கள் சில பல ரூபாய் நோட்டுக்களை லபக்கிக்கொள்வது இவருக்கு வருத்தம்தான் ... எவ்வளவுதான் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தாலும் களவு போவதை தவிர்க்க இயலவில்லை என்கிறார் சற்றே வருத்தத்துடன் .)

பிரபல வி ஐ பி க்களிடம் இருந்து இவர் சேகரித்திருக்கின்ற கடிதங்கள் , கையெழுத்துக்கள் தனி கலெக்ஷனில் ....

முத்தாய்ப்பாக

500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்வகைகள் , 300க்கும் மேற்பட்ட பலவிதமான பாரம்பரிய விதைகள் இவரது சேகரிப்பில் உண்டு .

இவற்றை சேகரித்து வைத்திருப்பது மட்டுமல்ல இந்தியாவெங்கும் அலைந்து திரிந்து அவற்றை பொதுமக்களுக்கு காட்சிப் படுத்திவருவதுதான் இவரது சிறப்பு .

விவசாயக் கல்லூரிகளுக்கு விருந்தினர் விரிவுரையாளராகப் போய் மாணவர்களுக்கு நமது பாரம்பரிய தாவரங்கள் , விதைகள் குறித்து விரிவுரையாற்றிவருகிறார் .

தான் செல்லும் , பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்து வீடியோப்படங்கள் எடுத்துத் தானே அவற்றை எடிட் செய்து யு டியூப் சென்று தனக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் தொடர்ந்து பதிவுகள் இட்டுவருவதோடு இவ்வளவு பணிகளுக்கு இடையில் சமூக வளைத்த தளங்களிலும் சிறப்பாக இயங்கி வருகிறார் .

தனது  வீட்டில் விதம் விதமான தாவரங்களை வளர்த்துவருகிறார் .
நம் சூழலுக்கே ஒத்து வராத ஆப்பிள் ,திருவோடு மரங்களையும் கூட வளர்த்துவருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் .திருவோடு மரத்தில் காய்க்கும் திருவோட்டுக் காய்களை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கேள்விப்பட்டு வந்து ஆர்வத்தோடு பார்த்தும் இலவசமாக பெற்றும் சென்றுவருகின்றனர் .( முன்கூட்டியே பதிவு செய்திருக்கவேண்டும் .)

சமீபத்தில் டெல்லியில் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரம்பரிய விதைகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்டு வந்திருப்பது இவரது சிறப்பு .

பல்வேறு அமைப்புகள் இவரைப் பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்கிவருகின்றன . அவ்வகையில் குறிப்பிடத்தகுந்தது இவர் பெற்றுள்ள நம்மாழ்வார் விருது .

இவரை மேலும் சிறப்பிக்கும் விதமாக எங்கள் ஸ்வாசிகா இயக்கம் இவரது சிறந்த சேவையினைப் பாராட்டி ஸ்வாசிக்காவின் பெருமைமிகு விருதான தொல் பொருள் சேவா செம்மல் என்ற விருதை வழங்கிப் பாராட்டினோம்.

இவர் தனது சேவைப் பயணத்தைத் தொடரவும் ,மேலும் பல சிறப்புகள் பெறவும் வாழ்த்தி மகிழ்கின்றோம் .

சாதனைகள் புரிய முதுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து பம்பரமாய் சுழன்று வாழ்ந்துகொண்டிருக்கும் கவிதை கணேசன் அய்யாவை நீங்களும் வாழ்த்தலாமே !






















Friday 18 May 2018

செல்வன் திருக்காமேஸ்வரன்

செல்வன் திருக்காமேஸ்வரன் .( சைவத் திருமுறை சேவா ரத்னா )

யார் இந்த திருக்காமேஸ்வரன் ?

நான் இவனை சந்தித்தது எப்படி?


பண்ணுருட்டி செந்தமிழ் சங்கத்தின் தலைவரும் எனது நண்பருமான சுந்தர பழனியப்பன் அவர்களின் தந்தையார் திரு சுந்தரம் தாயார் திருமதி சகுந்தலா ( இவர்கள் ஒருவகையில் எங்கள் உறவினர்கள் கூட)இவர்களின் 80 அகவைப் பூர்த்தியைமுன்னிட்டு சதாபிஷேகம் அண்மையில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது .அதையொட்டி ஆசிவழங்கும் நிகழ்வு கோவிலின் எதிரேயுள்ள S.வ .திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

நானும் என் மனைவியும் மண்டபத்தின் வாயிலில் நுழைகின்றோம் .சற்று
முன்னர் ஒரு தேவ கானம் கேட்டதே என்கிற மாதிரி ஒரு தெவீக குரல் ஒலிப்பெருக்கி வழியே வழிந்துகொண்டிருந்தது .ஆர்வத்துடன் உள்ளே சென்றோம் ...

அங்கே மேடையி ஒரு சிறு பாலகன் காவி தரித்து ருத்ராட்ச மாலைகள் அணிந்து நெற்றியில் உடலிலும் திரு நீறு துலங்க சாட்ஸ்சாத் அந்த திருஞான சம்பந்தர் மீண்டும் ஒரு திரு அவதாரம் புரிந்தாற்போல் அமர்ந்து தேவகானம்  புரிந்து சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தான் .நான் வைத்த கண்  வாங்காமல் அவனையே பார்த்த வண்ணம் அவன் குரலினிமையில் மயங்கித்தான் போனேன் ...நான் மட்டுமல்ல ...அங்கிருந்தோர் அநேகமாக அனைவருமே அவன் மழலை இசையில் சொக்கிப் போயிருந்தனர் .நிகழ்வு முடிந்ததும் மேடைக்கே சென்று அவனை வாழ்த்தினேன்.

பின்னர் விசேஷம் முடிந்து மண்டபத்திற்கு வெளியே சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவனும் அவன் தந்தையாரும் திருவதிகை வீரட்டானேஸ்வரரை தரிசித்துவித்து மீண்டும் மண்டப வாயிலை நோக்கி வந்துகொண்டிருந்தனர் .அப்போது அவனை அருகில் அழைத்து அவனைப் பற்றி வினவினேன் .தன்னைப் பற்றியும் தான் படிக்கும் வகுப்பு பற்றியும் தெரிவித்தான் . அப்போதே தீர்மானித்துக் கொண்டேன் .எங்கள் இயக்கம் நடத்தும் அடுத்த விழாவில் இச்சிறுவனை கௌரவிக்கவேண்டும் என்று . அவனை வாஞ்சையோடு அணைத்து இன்னும் நன்றாக வளர வாழ்த்தி அவனிடம் எனது விசிட்டிங் கார்டு ஒன்றையும் அளித்தேன் . பெற்றுக்கொண்ட அவன் உடனே தனது தந்தையிடம் அதனைத் தர ,அவர் பதிலாக கொடுத்த அவனது விசிட்டிங் கார்டை வாங்கி வந்து என்னிடம் அளித்தான் .இதுதான் நான் அவனை முதலில் சந்தித்த நிகழ்வு ..

இனி திருக்காமேஸ்வரனைப் பற்றி ...

புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த திரு ஆனந்தன் -திருமதி சங்கீதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவன் செல்வன் திருக்காமேஸ்வரன் .
2009  வருடம் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று பிறந்தவன் .புதுச்சேரி அமிர்தா வித்யாலயாவில் 4 ஆம்  படித்து வருகிறான் .

தனது 4 ஆம் வயதிலேயே மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள சிவபுராணத்தை இசையோடு பாடி குழந்தை சாதனையாளர் என்னும்  முதல் விருதினைப் பெற்றான் .

அன்று  துவங்கிய இவனது இறைப்  பயணமானது  இன்று  வரை தொடர்கிறது .இதுவரை  150 க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை தமிழகம்,கேரளம் ,கர்நாடகம் ,ஆந்திரம்  என பல மாநிலங்கள் கடந்து  வெளிநாடுகளில் கூட நிகழ்த்தியுள்ளான் .

விகடன் குழும வெளியீடான சக்தி விகடன் தனது கவர் ஸ்டோரியில் இவனைப் பற்றிக் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்துள்ளது ..

தினத்தந்தி டிவி தொடங்கி தினமலர் இணையம் வரை இவனது சாதனைகளை பற்றிய செய்தித்தொகுப்பு - ஆவணப் படங்களை ஒளிபரப்பு செய்துள்ளன.

இவனை வாழும் திருஞான சம்பந்தன் என்றே வர்ணித்துள்ளன.

இது வரை எந்த குருவிடமும் சென்று இசை பயிலாமல் சுயம்புவாகவே வளர்ந்து பெற்றோரின் வழிகாட்டல் மட்டுமே துணையாகக் கொண்டு தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடரும் திருக்காமேஸ்வரன் ,தந்து நிகழ்வுகள் மூலம் கிடைத்த  அனைத்தையும் திருக்கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கும் ,ஊனமுற்றோர் உதவிக்கும் ,பொதுத்தொண்டுக்குமே செலவிட்டு வருவதும் பாராட்டுக்கு உரியது .

இவனது இறைதொண்டொடு கலந்த பொதுத்தொண்டைக் கேள்வியுற்ற புதுவை ஆளுநர் மேதகு கிரண்பேடி முதல் பல தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் வரை இவனைப் பாராட்டி 15  க்கும் மேற்பட்ட விருதுகளை அளித்து சிறப்பு செய்துள்ளனர் .

இச் சாதனை சிறுவனைப் பாராட்டி எங்கள் ஸ்வாசிகா இயக்கம் இவனுக்கு சைவத் திருமுறை சேவா ரத்னா என்னும் பெருமை மிகு விருதினை வழங்கி மகிழ்கின்றது .இவ் இவ்விருதினை இவனுக்கு அளிப்பதன் மூலம் எங்கள் ஸ்வாசிகா இயக்கம் பெருமை கொள்கிறது .

இச் சிறுவன் தனது பாதையில் மேலும் பல சாதனைகள் புரியவும் ,சிறப்புகள் பெறவும் எங்கள் இயக்கம் வாழ்த்தி மகிழ்கிறது

முக்கியமான குறிப்பு .:
இவனது ஆன்மீக சாதனைகளைக் கண்ட சென்னை அன்பர் ஒருவர் தனது சொந்த செலவில் இவனையும் இவன் தந்தையையும் திருகி கயிலாய யாத்திரைக்கு அழைத்து சென்றுள்ளார் .விருது வழங்கும் விழா நாளில் இச் சாதனை சிறுவன் திருகி கயிலாய யாத்திரையில் இருந்ததனால் அவ்விருதை அவனது தாயார் திருமதி சங்கீதா அவர்கள் பெற்றுக் கொண்டு ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயானார் .

கயிலாய யாத்திரை முடிந்ததும் திருக்காமேஸ்வரன் தனது தந்தையுடன் வருகைதந்து ஸ்வாசிகா இயக்கத்தின் பொறுப்பாளர்களை ,உறுப்பினர்களை சந்திப்பான் என்று மகிழ்வுடன்கூறிச் சென்றுள்ளார் சாதனைச் சிறுவனின் தாய் .

சினிமாப் பாடல்களையும் ,குத்துப்பாட்டையும் சேட்டையுடன் பாடி ஆடுகின்ற இன்றைய சிறார் ,மாணவர்களிடையே ...திருக்காமேஸ்வரன் அபூர்வ சிறுவன்தான் ...இல்லையா ? நன்கு தேடுவோம்.. நம் வீட்டு மழலைகளிடம் கூட இப்படி ஏதேனும் அற்புதத் திறமைகள் ஒளிந்திருக்கும் ...தேடுவோம் ..வெளிக்கொணர்வோம் ...உலகம் முழுமைக்கும் தெரியவைப்போம் ...!

இதோ இங்கு நீங்கள் காணும் கயிலாய விண்ணப் படங்கள் கூட 18-05-2018 அன்று இரவு திருக்காமேஸ்வரனின் தந்தை கட்செவி அஞ்சல் மூலம் எனக்கு அனுப்பியவையே ...

திருக்காமேஸ்வரன் ...சீக்கிரம் வா ...உன் தாய் உனக்காகக் காத்திருப்பதை போலவே நாங்களும் காத்திருக்கிறோம் .!
















Thursday 17 May 2018

மன வண்ணங்கள்: நானும் பால குமாரனும்

மன வண்ணங்கள்: நானும் பால குமாரனும்: நானும் பால குமாரனும் பால குமாரன் ... எனக்குப் பிடித்த ஆறெழுத்து மந்திரச் சொல் ...! என் பதின்வயது வாசக தளத்தை மற்றொரு தளத்திற்...

நானும் பால குமாரனும்

நானும் பால குமாரனும்





பால குமாரன் ...
எனக்குப் பிடித்த ஆறெழுத்து மந்திரச் சொல் ...!
என் பதின்வயது வாசக தளத்தை மற்றொரு தளத்திற்கு கொண்டு  சென்றவர் .
 நான் முதன்முதலாய் அவரை வாசித்தது ஆசைக் கடல் நாவலில் தான் ...மூழ்கிவிட்டேன் முழுதுமாய் அவரது எழுத்து நடையில் ...!
இரும்புக்குதிரைகள் ஏறிப் பறந்தேன்  ,
மெர்குரிப்பூக்கள்  பறித்தேன் ...
ஆனந்த வயலில் அறுவடை செய்தேன் ...!
கனவுகள் விற்பவனிடத்து கனவுகள் யாசித்தேன் ...
இன்னும் இன்னும் ...எழுத இருக்கிறது ...
உடையார் வாசிக்கும்போது கால எந்திரத்தில்  அவரோடு சேர்ந்து
சரித்திரக் காலத்தில் பயணப்பட்டு
ராஜ ராஜனோடு வாழ்ந்த அனுபவமும்
பெரிய கோவில் கட்ட கல்சுமந்தவர்களுள்
நானும் இருந்ததாய் உணரச் செய்த பாங்கும் ...
பதின் பருவமே ஒவ்வொருவருக்கும் கனாக் காலம்தான் ..
எனக்கு மட்டும்
அந்தக் கனவை வாச மலர் பூக்கும் ...
வண்ணத்துப் பூச்சிகள் நட்சத்திரங்கள் சுமந்து பறக்கும்
சொர்க்கபுரி வசந்த வனமாக்கியது
உனது எழுத்துக்களின்மீதான நான் கொண்ட நேசமும் .
உனது படைப்புகளின் மீதான எனது தொடர் வாசிப்பும் அல்லவா ?
எங்கள் ஊரில் எனது நண்பன் ரவி , கிரி ,.....என
ஒரு சங்கிலியாக உனக்கான ஒரு வாசகர்  வட்டமும்  உண்டு ..
உன் நாவல் வரும்போதெல்லாம் வெறிபிடித்தார் போல்
உன் கதைகள் வாசித்து பின்
அதுபற்றி விவாதிப்பில் மூழ்குவதேல்லாம்
ஒரு இனிய பிற்சேர்க்கை
என் குடும்பத்தில் எனது அக்காவும் கூட உனது தீவிர வாசகிதான் .
உன் நாவலை வாசிக்கும் யாரும் புதிதாய் ஒரு தொழிலை கற்றுக்கொள்ளலாம்போல் இருக்கும் ...!
ஏதேனும் ஒரு செய்தியை ...ஒரு கலையை
உன் படைப்பு முழுக்க பூஜை அறை சுகந்தமாய் வியாபிக்கச் செய்துவிடுவாய் அல்லவா...?


நீ இறந்து போனதாக கேள்விப்பட்டு நெஞ்சம் பதறியதும் ,
விழிகளுக்கு நீர் திரையிட்டதும் நிஜம் ...
ஆனால் என் புத்தி சொல்கிறது ...உமக்கு ...உம் போன்ற
காலத்தை சிறை  பிடித்து காகிதத்தில் அடைத்த எழுத்தாளர்கள்
ஒரு பொழுதும் மரணிப்பதில்லை...
ராஜ ராஜ சோழன் தான் கட்டிய கற்கோயிலில் ஜீவித்திருக்கிறான்  இன்னமும் ...
நீயோ உனது எழுத்துக்களின் நடைகளில் கம்பீரம் காட்டி
தோழமையுடன் புன்னகைத்து
நித்தமும் எங்கள் விழிகளில் வசித்திருப்பாய் ...உன் நாவல்கள் விலை அதிகமாக இருக்கும்போது
எங்கள் கரங்களில்  பாக்கெட் நாவலில் மலிவு விலைப்  பதிப்பாய் தவழ்வாயே ...மறக்கமுடியுமா ?
என் இல்ல நூலகத்தில் புத்தக அலமாரியில்
உனது படைப்புகளால் நிரம்பி வரிசையாக அமர்ந்துள்ளாயே ...!
உன்னை என் விரல்கள் வருடுகின்றன ...
நீ வாழ்ந்த காலத்தில் வாழுகின்ற பெருமைதனை
எண்ணி நெஞ்சம் விம்முகிறது.
உன்னோடு அளவளாவுகிறேன் ஒரு வாசகனாய்
நீ எழுதிய படைப்புகள் மூலமாய் ...
போயிட்டு  வாங்க பாலகுமாரன் ...
அப்படின்னு சொல்லி வழி அனுப்பத் தயாராயில்லை நான் ..!
என்னுடனே நீ இரு ...பேசு ...மகிழ் ... மகிழ்வளி ...புத்தக ரூபத்தில் !




Wednesday 16 May 2018

எங்கள் ஸ்வாசிகா இயக்கம் வருடந்தோறும் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை வயது பேதம் பாராது அங்கீகரித்து சிறப்பு செய்து வருகின்றது .அவ்வகையில் இந்த ஆண்டு இரண்டு சிறார்களுக்கும் ,வயதில் மூத்த கலைஞர்களுக்கும் விருது வழங்கிப் பெருமைப் படுத்தி அதில் தானும் பெருமை கண்டுள்ளது .

முதலில் செல்வன் . தியாக்ஷ்வா

சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் .
தந்தை சுரேஷ் குமார் .
தாயார் காயத்ரி. இவர் பண்ணுருட்டியை அடுத்த
புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் .
தியாக்ஷ்வாவுக்கு ஓவியக் கலைக்காக 
சித்திரக்கலை வளர் சுடர் விருது வழங்கப்பட்டுள்ளது.
செய்த சாதனைகள் இதுவரையிலும் 176க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளான்.
ஓவியக்கலையில் பல முறை உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளான் .

தின மலர் சிறுவர் மலரில் இவனைப் பற்றிய
கவர் ஸ்டோரி 2 பக்கத்திற்கு வெளியிட்டு கௌரவப் படுத்தியுள்ளது .
ஜெர்மனி ,லண்டன்,ஜப்பான் என உலகநாடுகளுக்கெல்லாம்
பறந்து பறந்து படங்கள் வரைந்து பாராட்டுகளும்
பரிசுகளும் பெற்று தொடர்ந்து தன்னை ஓவியக்  கலையில் சாதனை படைக்கத்  தூண்டும் பெற்றோர்க்கு பெருமை சேர்த்து வருகிறான் .

அவனுக்கு சித்திரக்கலை வளர் சுடர் என்னும் பெருமைமிகு விருதினை வழங்கி அவர் மேலும் பல சாதனைகளை இத்துறையில் புரிய வாழ்த்தி மகிழ்கிறோம் ... இச் சாதனையாளனை நீங்களும் வாழ்த்தலாம் ...

( சதா ஏதாவது கிறுக்கித் தள்ளும் குழந்தைகளின் தலையில் தட்டி படிப்பைப் பாரு ..மார்க்கு வாங்கு எனும் பெற்றோர்களே ...கவனம் தேவை ... அந்தக் கிறுக்கலின் பின்னே  தியாக்ஷ்வா போன்ற ஒரு இளம் சாதனையாளன் ஒளிந்துள்ளான் )

Thursday 10 May 2018

23 ஆவது இலவச ஓவியப் பயிற்சி முகாம் நிறைவு விழா


       நாங்கள் நடத்திய இம்முகாமைப் பற்றி பதிவிடவேண்டுமெனில் தொலைகாட்சி நெடுந்தொடர் போலாகிவிடும் .விருதுபெற்ற சாதனையாளர்கள் குறித்த  விரிவான பதிவு இனி வரும் நாட்களில் ...

எனவே நிறைவு விழா குறித்த


ஸ்வாசிகாவின் கோடைக்கால இலவச ஓவியப்  பயிற்சி முகாம் நிறைவு விழா

           ஸ்வாசிகா இயக்கம் கடந்த 23 வருடங்களாக கோடைக்கு காலத்தின் பொது மே -1 முதல்  மே -10 வரை ஓவிய பயிற்சிமுகாமை நடத்திவருகிறது .ஸ்வாசிகா இயக்கம் பத்து நாட்கள் நடத்திய ஓவிய பயிற்சி முகாம் நிறைவு விழா 10-05-2018 அன்று பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது .நிகழ்வுக்கு  பள்ளியின் தலைமை ஆசிரியர் பூவராக மூர்த்தி அவர்கள் இப் பொன்னான விழாவுக்குத் தலைமை தாங்கி குத்துவிளக்கின் ஒரு முகத்தை ஒளியூட்ட ,திருமதி புவனேஸ்வரி முத்துக்குமரன் , திருமதி விஜய லட்சுமி  கவிதை கணேசன் ,திருமதி காயத்ரி சுரேஷ் குமார் ,திருமதி சங்கீதா ஆனந்தன் ஆகியோர் மற்ற முகங்களை ஒளியூட்டி   விழாவை மங்களகரமாக துவக்கி வைத்தனர். முகாமில் பங்கேற்று மாணவர்களுடன் மாணவராக ஓவிய பயிற்சி பெற்ற பகுதி நேர ஓவிய ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாட விழா இனிது துவங்கியது பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.
       
         சக்தி ஐ டி  ஐ  தாளாளர் சந்திரசேகர் அவர்கள் ஓவியக் கண்காட்சியைத்  திறந்து வைத்தார் .மாணவர்கள் கண்காட்சிக்காக  வரைந்த ஓவியங்கள் ,போட்டியில் வென்றோரின் ஓவியங்கள் சாதனை ஓவியன் செல்வன்  தியாக்ஷ்வா வரைந்த 90 ஓவியங்கள், மாணவர்களின் கலைப் படைப்புகள் ஆகியவற்றோடு தியாக்ஷ்வாவின் பாராட்டுப் பட்டயங்கள் ,விருதுகள் ,பதக்கங்கள் சாதனை ஓவியங்கள் என அனைத்துமே காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தின,

       பண்ணுருட்டி சொக்கநாதன் அவர்கள் புகைப் படக் கண்காட்சியை திறந்து வைத்தார் .ஓவியர் முத்துக்குமரன் அவர்களின் கேமரா க்ளிக்கிய கவிதைகள் என்ற தலைப்பில் அவரது ஒளிப்படக் கருவிக்குள்   உறைந்த காலப் பதிவுகள் வண்ணப்படங்களாக  காட்சிப் படுத்தப்பட்டிருந்தன .அப்படம் குறித்த தகவல்கள் குரள்  வெண்பாவாய்  அவரால் இயற்றப்பட்டு அப்படங்களில் கீழேயே பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது .

         அதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை ரங்கப்பன் அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் .திருவள்ளுவர் சிலைக்கு கவிதை கணேசன் அவர்களும் பாரதியார் சிலைக்கு ஜெய்சங்கர் அவர்களும்  மாலை அணிவிக்க சக்திவேல் அவர்களும் ஏனைய சான்றோரும் விவேகானந்தர் சிலைக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர் .கலைவாணி முருகன் அவர்கள் கவிதைகணேசனின் தொல் பொருள் கண்காட்சியைத் திறந்துவைத்தார் .பழங்கால நாணயங்கள் , தற்போது உபயோகத்தில் இல்லாத கால ஓட்டத்தில் நாம் மறந்து போன அல்லது  கண்களை விட்டு மறைந்துபோன பொருட்கள் பெரும்பாலானவை காட்சிப்படுத்தப் பட்டதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும் .மேலும் அவர் பெற்ற பாராட்டுப் பாத்திரங்களும் ,விருதுகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .

        விழாவில் முதல் நிகழ்வாக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன .

            விருதாளர்களை ஸ்வாசிகாவின் நிறுவனர் முத்துக் குமரன் அறிமுகம் செய்துவைத்தார் .

            சென்னை அசோக் நகரைச் சேர்ந்த தியாக்ஷ்வா என்னும் 7 வயது சிறுவனுக்கு 'சித்திரக்கலை வளர் சுடர் ' விருதும் .

            புதுச்சேரி வில்லியனூரை சார்ந்த திருக்காமேஸ்வரன் என்னும் 8 வயது சிறுவனுக்கு  ' சைவத் திருமுறை சேவா ரத்னா ' விருதும்,\

        பண்ணுருட்டியை சார்ந்த கவிதை கணேசன் அவர்களுக்கு ' தொல்பொருள் சேவா செம்மல் ' விருதும்  ,

         பண்ணுருட்டிய சார்ந்த பொம்மைக் கலைஞர் அப்பாளு சம்மந்தம் அவர்களுக்கு  ' வாழ்நாள் சாதனைக் கலைஞர் ' விருதும் வழங்கப்பட்டன .

           முன்னதாக ஸ்வாசிகா தலைவர் மதன் அனைவரையும் வரவேற்றார் .இணை செயலாளர் முருகானந்தம் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் . இணை செயலாளர் விஜய் முகாம் அறிக்கை வாசித்தார் .

         கலைவாணி முருகன் ,ஜெய்சங்கர் ,ஆசிரியர்கள் மோகன் குமார் ,செந்தில் குமார் ,சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

        செயலர் ராஜேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார் .

        புதுச்சேரி,வேலூர்,காரைக்கால் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஓவியக் கலைஞர்களும் கும்பகோணம் ஓவியக் கல்லூரி மற்றும் புதுவை பாரதியார் பல்கலைக் கூடம் இவற்றைச் சார்ந்த மாணவ மாணவியரும் சிறப்பாகப் பயிற்சி அளித்தனர் .

        முகாமில் பங்கேற்ற  மாணவர்களுக்கு அளிக்கப்பட பின்னூட்டப் படிவத்தில் பெரும்பாலான மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு ...விஷயம்....இம்முகாமை 10 நாட்கள் மட்டுமே நடத்துவது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ( இந்த பத்து நாள் முகாமை நடத்துவதற்குள் நாக்குத் தள்ளுகிறதே ...யப்பா ...)அடுத்த முகாம் எப்போது வரும் என்று காத்திருப்பதாகவும் ...பலர் ஐந்து ,நான்கு ,மூன்று வருடங்களாக தொடர்ந்து இம்முகாமில் பங்கேற்றுப் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள் ...மிக்க மகிழ்ச்சி ....!

இம்முகாமில் பயிற்சி பெற்று இப்போது  கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவக்  கண்மணிகளும் இளந்தலைமுறை ...வருங்கால ஓவியர்களுக்கு பயிற்சி அளித்தது கூடுதல் சிறப்பு .

        போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு விலை உயர்ந்த வண்ணம் தீட்டும் உபகரணங்களும் , கேடயங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன .முகாமில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்
கலந்துகொண்டு ஓவியக்கலையின் பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டனர் . இவர்களுள் பண்ணுருட்டி பகுதியைச் சார்ந்த மாணவர்கள்  மட்டுமல்லாது கோடை விடுமுறையைக் கழிக்க தம் உறவினர் வீட்டுக்கு வருகை தந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மாணவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்  தக்கது.