Monday 31 December 2018

திருநூலாற்றுப்படை - 19

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நால் அறிமுகம் - 19



சுப்ரபாரதிமணியன் திருப்பூரைச் சேர்ந்தவர் .
சாகித்ய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருப்பவர்.ஏராளமான புதினங்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ள இவரது ' சாயத்திரை ' என்னும் நாவல் N.C.B.H கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது .இவரது பல நூல்கள் பல்கலைக் கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னமும் கூட இதே போன்றதொரு தலைப்பில் நூலொன்றினை அறிமுகப் படுத்தியுள்ளதாக நினைக்கின்றீர்களா ...!
ஆம் ..! அது மனக்குகைச் சித்திரங்கள் ..!ஆத்மார்த்தி தீட்டியது !
இது மனக்குகை ஓவியங்கள் ...
சுப்ரபாரதிமணியன் தீட்டியது ...!
இரண்டு நூலுக்கும் ஒரேமாதிரி தலைப்பு சற்றே குழப்படியாக அமைந்தது துரதிர்ஷ்டமே !ஆனால் புத்தகம் வெளியிடப்பட்ட காலத்தைக் கருதும்போது சுப்ரபாரதிமணியன் முந்திக்கொண்டவராகிறார்...!
ஆத்மார்த்தி நாம் அன்றாடம் சந்திக்கும் ,நம் வாழ்வில் தவிர்க்க முடியாத சில மனித உருவத் தீற்றல்களை நமது மனக் குகைக்குள் தேடவைக்கிறார்.
ஆனால் சுப்ரபாரதிமணியனோ தமிழ் இலக்கிய உலகில் ...புத்தகப் பேரண்டத்தில்... ஒர் வாசகன் தவிர்க்கவே இயலாத எழுத்தாளர்களுள் சிலரது எழுத்துக்களின் வீச்சை ..அவர்களது கதாவிலாச முகவரியை.. ஒரு எழுத்தாளன் என்பதைத் தாண்டிய ஒரு வாசகனாய் ..
சில நேரங்களில் அவர்களோடு பழகிய தருணங்களில் அவர்களது வாழ்வை உள்வாங்கிய நேசனாய் ...
எட்டி நின்று பார்க்கும் ஒரு பார்வையாளனாய்...தன்னையும் பாவித்துக்கொண்டு, தனது மனக்குகைகளில் ஓவியங்களாக்கிக் காட்டி ..
நம்மையும் அவ்வாறே
அந்தப் படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் அணுகவும் ...
அந்த அனுபவ வண்ணங்களைத் நமது எண்ணம் என்னும் தூரிகையால் தொட்டுத் தொட்டு நமது மனக்குகையின் சுவர்களிலே ஓவியங்களாகத் தீட்டவும் வைத்துவிடுகிறார்.
பாரதியார்,புதுமைப்பித்தன், சுந்தர்ராமசாமி,
தோப்பில் முகமது மீரான்,நகுலன்,தகழி சிவசங்கரன் பிள்ளை , ஞானி,சா.கந்தசாமி, சுஜாதா, துறைவன்,திலகவதி,வைரமுத்து ,
தங்கர்பச்சான் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் எழுத்து வடிவங்களை தனக்கேயான பாணியில் அலசியுள்ள அற்புதமான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இக்கட்டுரைகள் நம்மையும் அவரது விழிகள் வழியே ஒவ்வொரு எழுத்தாளனையும் காணவைக்கிறது ...
குறிப்பாக எழுத்தின் நடைகளில் காணப்படும் வறட்டுத்தனம் வியாபார நோக்கம் கொண்ட படைப்பாளிகளை எரிச்சலடையச் செய்வதும் ..வாழ்வின் தரிசனமாய்க் கண்டதை தனது படைப்புகளின் மூலம் முன்னிறுத்துவதும் ...சுந்தரராமசாமியின் வாழ்நாள் இலக்கியப் போராட்டமாக இருந்தது என்ற சிறு பத்தி ஒன்றே போதும் இந்நூலடக்கத்தின் கனபரிமானத்தை உணர்ந்து நோக்க .
*வாசிப்பு அனுபவம் மூலம் வெவ்வேறு மனிதர்களுடன் உறவாடும் வாய்ப்பைத் தருகின்றது ...
*இன்றைய இலக்கியச் சூழல் அருவருப்ப தருவதாய் ,அயற்சி தருவதாய் உணரும் பலர்
வாசிப்பும் படைப்பு அனுபவமும் தருகிற மீட்சியை முழுமையாக நிராகரித்துவிட்டு தற்காலிக கேளிக்கைகளில் அமிழ்ந்துபோகிறார்கள்...
*படைப்பாளியின் களத்தையும் அனுபவங்களையும் விசாலமாக்கிக்கொள்ளவும் ,வித்தியாசமாக்கிக்கொள்ளவும் முயற்சியும்,தேடலும் தொடர்ச்சியான வாசிப்பும் தேவைப்படுகின்றன.
*இந்திய சமூகத்தின் ஆணிவேராகப் பாதுகாக்கப்படவேண்டிய கூட்டுக்குடும்ப அமைப்பு என்பது இன்று சுலபமாய் விடுபட்டு வருகின்றது .
*அரசாங்கம் வறுமை நிலையிலிருந்து நிவாரணம் தரமுடியாதபோது குழந்தைத் தொழிலாளர் நிலை முன்னிறுத்தப்பட்டு
கட்டாயக் கல்வி புறக்கணிக்கப்படுகிறது .
*எழுத்து வாசிப்பு என்பது ஒரு பயணம் போன்றது .சொல்லாடல்கள் மூலம் எழுத்தாளன் வெளிப்படுத்தும் பிரதேசம்,மக்கள் வாழ்க்கை,
இயற்கைச் சூழல் , அனுபவங்கள் சார்ந்து அவற்றினூடே பயணம் செய்யும் வாசகன் ஒரு படிமத்தை உருவாக்கிக்கொள்கிறான்.
* எளிமையான சொற்கள் மூலம் தனக்கான பிரம்மாண்டமான உலகைப் படைப்பது ; பெரும்பாலும் காட்சி ரூபத்தன்மையில் சாதாரண வாசகனுக்கும் இணக்கமாய் இருப்பது ..
இதுபோன்ற அவரது பார்வைகள் இந்நூல் முழுவதுமே தூவிக் கிடப்பதைக் காணமுடிகிறது...
இந்நூலை வாசிக்கும் ஒருவர் நிச்சயம் ஏதோ ஒரு புரிதலுக்கான புள்ளியில் வாசகன் என்ற நிலையிலிருந்து எழுத்தாளன் என்கிற நிலைக்கும் பரிணமிக்கக்கூடும்.
ஆனால்...
எழுத்தாளர் நகுலனுடனான சந்திப்பில் இவர்களின் பேச்சுக்கு
நகுலனின் தொடர்பில்லாத பதில்கள்
என்று பட்டியலிடப்பட்டிருக்கும் முப்பத்து மூன்றில் ,முதலாவதாக உள்ள பதில் இன்னமும் கூட என்னை உறங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருக்கறதே ...ஏன்...?
சின்னக் குழந்தையெ எண்ணெயில் போட்டு முறுவலா ரோஸ்ட் பண்ணி சாப்புடனும் .
என்ன மாதிரி மனநிலையில் இருந்தார் நகுலன்...? நல்லவேளை..நகுலன் இன்று இல்லை ..இருந்திருந்தால் நம் நெட்டிசன்களிடம் மாட்டி முகநூல்,ட்விட்டர், இன்ஸ்டா என அத்தனையிலும் வறுத்து ,ரோஸ்டாக்கி வைரலாகியிருந்திருப்பார் மனிதர்..!
கவுன்ட் டவுன் - 3 நாட்கள் .

திருநூலாற்றுப்படை - 18

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 18



ஓவியர்களுக்கும் ,ஓவிய ஆர்வமும் அது சார்ந்த தேடல் கொண்டவர்க்கும்
வரலாற்று ஆர்வலர்களுக்கும்,
பயண விரும்பிகளுக்கும்
தொல்பொருள் ஆர்வலர்களுக்கும்
ஆய்வு மாணவர்களுக்கும் இந்நூல்
ஒரு பெரு விருந்து.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ஆசிரியர் ஜோப் தாமஸ் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள தேசியக் கலைக்கூடத்தில் பணிபுரிந்தபோது
இந்தியக்கலை வரலாற்றால் ஈர்க்கப்பட்டவர்.
தற்போது அமெரிக்காவில் வடகரோலினா மாநிலத்தில் இயங்கிவரும் புகழ்பெற்ற டேவிட்சன் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்நூலை தமிழில் சுவை குன்றாது மொழிபெயர்த்து வழங்கியிருப்பவர் ஏஞ்சலினா பாமா பால் என்னும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்.
கலைகளில் சிறந்தது ஓவியம்.
தமிழகத்தில் பண்டைக்காலம் முதற்கொண்டே ஓவியக்கலை சிறந்து விளங்கியது.
ஆதிகால மனிதன் வாழ்ந்த குகை ஓவியங்கள் முதல் தமிழகமெங்கும் உள்ள ஆலயங்களின் சுவர்களிலும் ,
பிரகாரங்களிலும் ,விதானங்களிலும்
காணப்படும் கண்கவர் ஓவியங்கள் , சித்தன்ன வாசல் ,பனமலைப்பேட்டை ஓவியங்கள் உள்ளிட்டவை இதனைப்
பறைசாற்றியவண்ணம் உள்ளன.
ஓவியம் தீட்டுவதிலே சிறந்து விளங்கினான் என்பதற்காக மகேந்திர வர்ம பல்லவனுக்கு
' சித்திரகாரப்புலி ' என்ற பட்டம் வழங்கியிருந்தார்கள் என நாம்கூட வரலாற்றின் பக்கங்களில் வாசித்திருப்போம் அல்லவா ?
இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் இந்நூலாசிரியர் தான் முனைவர் பட்டம் பெறுவதற்காக வேண்டி மிக்சிகன் பல்கல்க் கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளே ஆகும் .அவற்றையே மிக நேர்த்தியாக பலரது ஒத்துழைப்புடன் நேர்த்தியான நூலாக்கியிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள ஓவியப் பாரம்பரியம் மிகச் சிறப்பு உடையது;தொடர்ச்சியானது .
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலுமே இப்படியோர் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியத்தைக் காணவே இயலாது .
வரலாற்றுக்கும் முந்தைய காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டுவரை மிக நீண்ட பாதையில் பயணிக்கும் இந்த ஓவியப் பாரம்பரியமானது இதில் பயணிக்கும் நம்மையும் கால இயந்தித்தில் ஏற்றி ஒரு தீர்த்த யாத்திரைக்கே அழைத்துச் செல்கின்றது .
இந்த யாத்திரையின் போது தமிழகத்தின்
குடவரைக் கோயில் ஓவியங்களும் ,
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர் பெருமக்களால் எழுப்பப்பட்ட ஆலயத்தின் சுவரோவியங்களும் ,ஆவணக் காப்பகங்களின் களரிகளில் மறைந்துபோய்க் கிடக்கும் சித்திர அற்புதங்களும், அருங்காட்சியகங்களிலே
உறைந்துபோயிருக்கின்ற ஓவியமகோன்னதங்களும் நமக்கு தரிசிக்கக் கிடைக்கின்றன.
கி.மு 500 ஆண்டுக்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்த பாறை ஓவியங்களின் அறிமுக விவரிப்பில் துவங்குகின்ற இக்கட்டுரையானது முழுதுமாய் நம்மை அந்த காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது எனலாம்.
தமிழகப் பாறை ஓவியங்கள்
பழந்தமிழர் ஓவியங்கள்
பல்லவர் கால ஓவியங்கள்
பாண்டியர் கால ஓவியங்கள்
சோழர் கால ஓவியங்கள்
கலாச்சார மாற்றங்கள்
விஜயநகர கால ஓவியங்கள்
நாயக்கர் கால ஓவியங்கள்
மராத்தியர் கால ஓவியங்கள்
கிழக்கிந்தியக் கம்பனி கால ஓவியங்கள்
காலனி ஆதிக்க ஓவியங்கள்
என பதினொரு கட்டுரைகளாக வரலாற்றுக்
கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுரைகளை வாசிக்கும்போதே
கொணவக்கரை, கரிக்கியூர் ,கீழ்வாலை ,
மாவடைப்பு ஆகிய இடங்களுக்கெல்லாம் நாமும் பயணப்படத் துவங்குகின்றோம் .
சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிவகாமி அம்மன் சன்னிதியின் சுவரோவியத்தை முகப்பு அட்டையில் தாங்கியுள்ள இந்தப் புத்தகம் பல அரிய ஓவிய வர்ணனைகளின் மலர்ச் செண்டாகவே காணப்படுகின்றது.
இடையிடையே பல வண்ண ஓவியங்கள் அடங்கிய, வழு வழு ஆர்ட் தாளில் அழகுற அச்சிடப்பட்ட நிழற் படங்களின் தொகுப்பு கூடுதலாய் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது எனலாம்.மேலும் புகைப்படமெடுக்க இயலாத பல சுவரோவியங்களின் அழகிய வரிவடிவங்கள் ஆங்காங்கே பக்கங்களை அலங்கரித்து நம்மை வசீகரிக்கின்றன;தொடர்ந்து வாசிக்கவும் தூண்டுகின்றன.இக் கோட்டோவியங்கள் அனைத்தும் தொல்லியல் துறையில் பணியாற்றிய திரு கிருஷ்ணசாமி என்பவரால் மிக நேர்த்தியான முறையிலே அழகுறத் தீட்டப்பட்டுள்ளன.இந்நூலின் அட்டையின் பின்புறம் திருப்பருத்திக்குன்றத்து சுவரோவியங்களைத் தாங்கியுள்ளது .
இந்நூலின் பின்னிணைப்பு பல கலை வரலாற்று ஆசிரியர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டுள்ளது.தொடர்ந்து கால வரிசைப் பட்டியலையும் கொண்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும்.
நூலை வாசித்து முடித்ததும் இதில் காணப்பட்ட ஓவியங்களைப் பற்றிய எண்ணங்கள் உமது மனதை ஆக்கிரமிப்பது மிக உறுதி .அதுமட்டுமல்லாது நீங்கள் உறங்கும்போது கனவிலும்கூட அச்சித்திரங்கள் தங்களைக் காண வருமாறு அழைப்பு விடுத்து இம்சை செய்யலாம். அடுத்ததொரு சித்திம் சார்ந்த கலைப் பயணத்திற்கு உமது கால்கள் பரபரக்கலாம்..!
ஆக இந்நூல் சித்திர உலகிற்கோர் தீர்த்தயாத்திரை ...!
நிச்சயம் வாசியுங்கள் ...!
யாத்திரை செய்யுங்கள் ...!
கவுன்ட் டவுன் - 4 நாட்கள்


Saturday 29 December 2018

பள்ளி வாசல் வரை மீண்டும் ஒரு பயணம் - மீள் தொகுப்பு

எல்லோருக்கும் போகி என்பது
பழையன கழிந்து புதியன புகுவது
ஆனால் இன்று குழுமியுள்ள எங்களுக்கோ
புதியன மறந்துபோய்
பழையன புகுந்து மகிழ்வது என்றானது !

ஆம் !

போகியன்று நடைபெற்ற புத்தொளிர் பள்ளி துவக்கவிழாவில்
பங்கேற்ற ஒவ்வொருவரும் தனது  நிகழ்காலம் தொலைத்து
கடந்தகால நினைவுகளை மீட்டெடுத்து
மலரும் நினைவுகளில் மூழ்கித்திளைத்து
கண்கள் பனித்திருந்தனர்.
அந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பகிர்வதே இப்பதிவின் நோக்கம் !

13-01-2018 ஒரு புனித நாள் .
நாங்கள் கல்வியும் கலைகளும்  பயின்ற
புதுப்பேட்டை அரசுமேல் நிலைப் பள்ளி
என்னும் ஆலயத்தின் புணருத்தாரன மகாபிஷேக நாள்
எங்களுக்கு ஆசிரியர்கள் என்ற தேவ ஆசீர்வாதம்
கிடைக்கப் பெறச் செய்த தேவாலயத்தின்
மீள் உயிர்த்தெழு திருவிழா !
உலக வாழ்க்கைக்கான கல்விக்காய்
ஆசான்கள் என்ற பேரருளாளர்களிடம் தொழுகை நடத்திய
எங்கள் பள்ளிவாசலின் சந்தன உரூஸ் பண்டிகை !

தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகள் ஒன்றிரண்டு தவிர
ஏனைய பள்ளிகளின் நிலை ...?
அநேகமாக அவை குத்துயிரும் குலை உயிருமாய்த்தான் இருக்கின்றன என்னும் நெஞ்சில் அறையும் உண்மையின் நிதர்சனத்தை
யாரும் மறுக்கப் போவதில்லை ...!
அப்படிப்பட்ட அநேகப் பள்ளிகளில் ஒன்றுதான் எம் பள்ளியும் .!
குடியிருந்த கோவிலாம் தாய் சீக்கோடு போராடுவதை
எந்த தனயந்தான் பார்த்துக்கொண்டு சகித்திருப்பான் ?
பள்ளியும் நாம் குடியிருந்த கோவில்தானே !

எம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர்
தற்போது பெரிய பெரிய பதவிகளிலும்
பல்வேறு உயர்ந்த பணிகளிலும் பணியாற்றி
பாரெங்கும் பவனி வருகிறார்கள்!
தாங்கள் பெற்ற இச்சிறப்புக்கு காரணமான பள்ளியின்
நிலை மாற்றிட ...சீர்தூக்கிட ...
இன்று பயிலும்
நம் வருங்கால  இந்தியாவின் எதிர்காலங்கள்
இடையூறின்றி கல்விபயில
சரியான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித்  தர  எண்ணம்கொண்டு
தினகரன் என்ற சாமிநாதன் மற்றும் I P S அலுவலர் லோகநாதன்
என்ற இரு நாதர்களும் இதற்கான இறைத்  தூதர்களானார்கள் !
வாட்சப் என்று அழைக்கப்படும் கட்செவி   அஞ்சலில்
புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி என்ற குழுவைத்  துவக்கினார்கள்
இயன்றபோதெல்லாம் தேடித்தேடி நண்பர்களை இணைத்தார்கள் .
சிலர் செய்தி தெரிந்து விரும்பி விரும்பி நாடி இணைந்தார்கள்
அவ்வப்போது ஒன்றுகூடி ஆவண செய்ய ஆலோசித்தார்கள் !
திட்டங்கள் தீட்டினார்கள் ...மற்றோர்க்கும் பகிர்ந்தார்கள்
தன்கொடையும் நன்கொடையுமாய் சேர்ந்த பணத்தால்  பிறந்தது
புத்தொளிர் பள்ளி சொல்லவொணா துன்பங்களுக்குப் பிறகு
துன்பம் என்று கூறினாலும் கூட
கவியரசர் கண்ணதாசனின் மொழியில்கூறினால்
அதுவொரு துன்பமான இன்பம் அவர்களுக்கு !
ஒரு பிள்ளையை ஈன்றெடுக்க
ஒரு தாய் படும் வேதனைக்கு சற்றேனும் குறைவில்லாதது
இப்பணியின்  சுகமான சுமைகள் !
ராகவன் ,மணிவண்ணன் ,சசி , கோபி,
விஜயகுமார் ,லக்ஷ்மி நாராயணன்
செந்தில் ,பாஸ்கர்,அருண் கார்த்திக் ,
பாபு,கோபால்,பாலா ,ரமேஷ் ,
உமா  சங்கர் ,நாராயணன் , விவேக் ,சுரேஷ்
என இப்பணிக்காக உடனிருந்து பாடுபட்ட
நண்பர்களின் பட்டியல் இன்னும் இன்னும் மிக நீளமானது ...
பட்டியலில் இடம் பெறாதோரின் மறைமுக ஒத்துழைப்பும்
மறுக்கவோ ,மறைக்கவோ ,மறக்கவோ முடியாதது .

எல்லோரின் கைகோர்ப்பினாலும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறைஅலுவலர்கள்  ,காவல்துறை அலுவலர்களின்
ஒத்துழைப்பாலும் பள்ளி மெருகேறியது
பல கட்டமாக பணிகள் நடைபெற்றன ...நிறைவு பெற்றன .!
குடிநீர்த்தொட்டி தொடங்கி கழிப்பறை வரையிலும்
விழாமேடை தொடங்கி ஸ்மார்ட் க்ளாஸ் வரையிலும்
புதியதொரு நூலகம் தொடங்கி அகலப்படுத்தப்பட்ட பள்ளி வாசல் வரை
இருக்கைகள் சீரமைப்பு தொடங்கி மழைநீர் தேங்காதிருக்க
மண் அடித்து தரைஉயர்த்துவது வரையிலும் ...
என புனரமைப்புப் பணிகள் நீண்டு பள்ளி முழுமைக்கும்
வண்ணம்பூசுவது வரை நீண்டு நின்றன ...!
அனைத்தையும் குறைவின்றி முடித்தார்கள் !
பெற்ற பிள்ளைகளின் பெருமுயற்சியால் ,பேரன்பினால்
இன்று இதோ புத்துயிர் பெற்று பூரித்திருக்கிறாள்
எங்கள் பள்ளியெனும் நற்றாய் !

இத்துணை யாரும் முயற்சிக்குப் பெருவிழா எடுக்க வேண்டாமா ?
தஞ்சை சரக காவல்துறை ஐ பி எஸ் அதிகாரியும்
நம் பள்ளியின் முன்னாள் மாணவருமான
திரு லோகநாதன் அவர்களின் சீரிய தலைமையிலும் ,
கடலூர் ஆட்சியர் திரு பிரசாந்த் மு வடனரே அவர்களின்
முனைப்பான  முன்னிலையிலும்  ,
கடலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர்
திரு விஜயகுமார் அவர்கள் சிறப்பு சேர்க்கவும்,
மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் அவர்களும்
பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர்
திரு காமராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்கவும்
தீர்மானிக்கப் பட்டு அழைப்பிதழ் அச்சானது ...1
தமக்கு கல்வி போதித்த ...தற்போது ஒய்வு பெற்று
நிறைவாக வாழ்ந்துவரும் அனைத்து ஆசான்களையும்
திசைக்கு கொ ருவராய் தேடித் தேடி அழைப்பு வழங்கினார்கள் !
தமக்கு முன்னும் பின்னுமாய் பயின்ற
அனேக சகோதரர்களையும் ஒருங்கிணைத்தார்கள்1

இதோ இன்றுதான் விழா நாள் ...!
பொங்கலுக்காக ஊருக்கு வரும் அனைவரும்
ஒன்றுகூடும்  பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி
இப்பொன்னாளாம் போகி நான்னாளை தேர்வு செய்து
திரளாக ஒன்றுகூடி விழா எடுக்கின்றனர் தாம் குடியிருந்த கோயிலுக்கு !
காலை முதலே தன்னோடு கல்வி பயின்ற சக தோழர்களைக் காணவும்
தங்களுக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்களைக் காணவும் கூடிநின்ற அந்நாளைய மாணவர் கூட்டம் முதல்
தாம் பள்ளியின் புத்தொளிர் திருநாள்விழா
தாம் பயிலும்  காலத்தில் நடப்பதற்கான பேறு  பெற்ற  பூரிப்புடன்  கூடியிருந்த இந்நாளைய மாணவர் கூட்டம் வரை
தாம் பணிபுரிந்த பள்ளியின் இந்நாள் சூழலையும்
தம் மாணாக்கர்கள் எய்தியுள்ள உயர்வு கண்டு பூரிக்கவும்
வருகைபுரிந்துள்ள அந்நாள் ஆசிரியர்கள் முதல்
இப்போது பணிபுரியும் இந்நாள் ஆசிரியர்கள் வரை
என பள்ளி வளாகமே மகிழ்ச்சியலைகளால்
நிரம்பி வழிந்தது ...!

பள்ளி வாசலின் முன்புறம் அந்நாள் மாணவர்கள் சிலரும்
இந்நாள் ஆசிரியர்கள் சிலரும் இணைந்து
விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்கு
முகமன் கூறி பன்னீர் தூவியும் சந்தனம் அளித்தும்
வரவேற்றவண்ணம் இருந்தனர் .

கடந்த ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் கூட்டம்  ஒரு புறம்
கல்லூரியின் இறுதியாண்டு பயிலும் மாணவர் கூட்டம் ஒருபுறம் ...
பணியில் சேர்ந்து  தமது வாழ்க்கையை
செம்மைப் படுத்திக்கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம் ஒருபுறம்
என கூடி கும்மாளமடித்துக்கொண்டும்
சுய படம்( செல்பி ) குழுப்படம் (குரூபி) என
செல்போன் கொண்டு க்ளிக்கியபடி இருந்த காட்சிகள்
ஒருபுறம் தென்பட்டன .

மறுபுறமோ மிக வயதானவர்களும் ,
நடுத்தர வயதானவர்களும் தம்மோடு பயின்ற
தம் வகுப்புத் தோழர்களை
விழிகளால் கூட்டத்திடையே தேடுவதும்
அவரைக் கண்ணுற்ற கணத்தில்
வியப்பும் பரவசமும் கலந்த மின்னல் கண்களில் வெட்ட ,
கரங்கள் கோர்த்து நெகிழ்ந்து நலம் விசாரித்த காட்சிகள்
ஆங்காங்கே கண்ணில் தென்பட்டன

இன்னொருபுறம் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்று
வெவ்வேறு பகுதிகளில் வசித்துவரும் ஆசிரியர்கள்
தங்களோடு பணியாற்றி பிரிந்து சென்ற
சக ஆசிரிய சொந்தங்களை
நீண்ட வருடங்கள் கழித்து சந்திக்கும் மகிழ்ச்சி
தமது முகத்தில் வெடிக்க
பரவசத்துடன் பேசிமகிழ்ந்ததையும் காண முடிந்தது .

வேறொருபுறம் தம்மிடம் பயின்ற மாணாக்கர்களின் உயர்வு கண்டு அவர்களை ஏற்றிவிட்ட ஏணிகள்
பெருமிதத்துடன் பூரித்தபடி
அவர்களோடு மனம் விட்டுப் பேசி சிலாகித்து
மகிழ்ந்த நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டிருந்தன .
தமது அன்றைய ஆசான்களோடு
தம் குடும்பத்தாருடன் இணைந்து
அந்த நெகிழ்வு நொடிகளை
தமது கை பேசிகளில் காட்சிகளாகப்
பதிவு செய்த வண்ணம் இருந்தனர் சிலர் .

சரியாக 10.30 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வருகைதர
தலைமை ஆசிரியரும் விழாக் குழுவினரும் அவரை வரவேற்றனர் .
பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்
அணிவகுத்து கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர் .

பள்ளியின் முன்னாள் மாணவரும்
கலைச் சோலை இசை நாட்டிய பள்ளியின் குருவுமான
திரு  சுரேஷ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் .

முதல் நிகழ்வாக குத்துவிளக்கேற்றும் மங்கள நிகழ்வு ...!
ஆட்சியர் ,காவல் துறை துணை துறைத் தலைவர் ,
காவல் கண்காணிப்பாளர்,மாவட்டக் கல்வி அலுவலர் ,
தலைமை ஆசிரியர் ஆகிய ஐவரும்
குத்து விளக்கின் ஐந்து முகங்களுக்கும் ஒளியூட்டினார்கள் .

அடுத்து ஸ்மார்ட் கிளாஸ் ,புதிய  நூலகம்,
புதிய குடிநீர் தொட்டி, புதுப்பிக்கப் பட்ட ஆய்வகங்கள்
இவை அனைத்தும் விருந்தினர்களால் முறையாக துவக்கப்பட்டு
பள்ளிக்கு அர்பணிக்கப் பட்டன .

அதனைத்தொடர்ந்து குழுவின் ஒருங்கிணைப்பாளர்
திரு தினகரன் சாமிநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி
இந்நிகழ்வு டத்தொடங்கிய விதம் ,ஒருங்கிணைத்த அனுபவங்கள் ,
பட்ட சிரமங்கள் , தோள்கொடுத்த தோழர்கள் என
அனைத்தையும் சுருக்கமாகக் கூறினார் .


அதன் நீட்சியாக நடன ஆசிரியர் சுரேஷ் நிகழ்த்திய
ஒரு வரவேற்பு நடனம் ..பரத நாட்டியம்...
திருக்குறள் இசையோடு ஒலிக்க
ஜதிகளுக்கு ஏற்ப சிறப்பான அபிநயங்களோடு
முகபாவனைகளோடு மிளிர்ந்தது நடனம்.

அதனைத் தொடர்ந்து  சிறப்பு விருந்தினர்கள்
மேடைக்கு அழைக்கப்பட்டார்கள் .
இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற
ஆசிரியர்களுக்கு  பொன்னாடை போர்த்தி மலர்க்கொத்து  வழங்கி
நினைவுப் பரிசாக நான்கு நூல்களும் வழங்கினார்கள்.

நேரமின்மை  காரணமாக  ஆசிரியர்கள் சிலர் மட்டுமே
தங்கள்  அனுபவங்களை பகிர முடிந்தது .

தலைமையுரை நிகழ்த்திய திரு லோகநாதன் அவர்கள்
தாம் இப்பள்ளியின் மரத்தடியில் அமர்ந்து பயின்ற
பசுமையான நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த நமது ஆட்சியரோ
முற்றிலும் அழகுத்  தமிழில் பேசி
அனைவரையும் வியப்புக்குள்   ஆழ்த்தினார்.
தனது பலமானபணிச் சுமைக்கு இடையிலும்
மிகப் பொறுமையோடு ஒவ்வொரு நிகழ்வையும்
அவர் மலர்ந்த முகத்தோடு ரசித்தது
நம் மாணவர்களின் இந்த கடும் உழைப்புக்கும் , உணர்வுகளுக்கும்
அவர் தந்த  மரியாதையை வெளிப்படுத்துவதாகவே உணர்ந்தேன்.
அதை அவரது வார்த்தைகளும் வெளிப்படுத்தின .
நான் விரைந்து செல்ல வேண்டும் என்பதற்க்காக
உங்கள் நிகழ்வின் நீளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று
உரைத்தது முற்றிலும் அவருடைய பெருந்தன்மை .

மாவட்டக் கல்வி அலுவலர் திரு இராஜேந்திரன் அவர்கள்
பேசும்போது ..மாணவர்களை நோக்கி
நீங்கள் திரைப்படங்களில் மட்டுமே கண்ட நிகழ்வுகளை
உங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
நிஜமாக உங்கள் பள்ளியில்
உங்கள் கண்முன்னே  காட்டியிருக்கிறார்கள்.
இதனையே முன்னுதாரணமாகக் கொண்டு
நீங்களும் வாழ்வில் முன்னேறிய பிறகு
உங்கள் பள்ளியை மறக்காமல்
அதன் முன்னேற்றத்திற்கு உங்கள் பங்களிப்பை
அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்
பொருளாளர் பேசுகையில்
மாவட்ட ஆட்சியர் முழுக்க  முழுக்க  அழகுத்  தமிழில்
பேசியதை சிலாகித்துப் பாராட்டியதோடு அல்லாமல்
இந்நிகழ்வு வருகை தந்த அனைவருக்குமே
ஒரு புது இரத்தம் பாய்ச்சியதாகவும்
அனைவருக்குமே தம் பள்ளிக்கு ஏதேனும் செய்தாக வேண்டும்
என்ற எண்ணத்தை தூண்டி ஓர் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார் .

முன்னாள் மாணவர் திரு ராஜா அனைவருக்கும் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது .

பின்னர் அனைவரும் அதாவது அங்கு வருகை புரிந்த இப்பள்ளியின்  முன்னாள்  ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள்,
சிறப்பு விருந்தினர்கள் ,முன்னாள் மாணவர்கள்
சேர்ந்து ஒரு குழுப்படம் எடுத்துக்கொண்டார்கள் .
பின்னர் அக்குழுப்படம் லேமினேட் செய்யப்பட்டு
அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது .

இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த
இந்நாளைய பள்ளி மாணவர்கள் ,
முன்னாள் மாணவர்கள் ,பொதுமக்கள் ,
சிறப்பு விருந்தினர்கள்என அனைவருக்கும்
சிறப்பான அறுசுவை உணவு மத்திய விருந்தாக அளிக்கப்பட்டது .

இந்த பரபரப்பான உலகில் ...
தனது எதிர்காலத்தைத் தேடி நிகழகாலத்தைக் கூட
சரிவர நுகராமல் ஓடும் அதிவேக ஓட்டத்தில்
எங்களையெல்லாம் மீண்டும் கடந்தகாலத்திற்கே அழைத்துச் சென்று எங்களது பள்ளிக்கூடப் பெற்றோர்களையும்
பதின்பருவ நணபர்களையும் சந்தித்து அளவளாவ
வாய்ப்பளித்த இந்நிகழ்வு ...இந்நாள்...எங்கள் ஒவ்வொருவரின்
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்....
வாழ்நாட்கள்   என்னும் காகிதங்களிடையே
இணைக்கப்பட்ட ஒரு போர்காகிதமாகவே திகழும் என்பதில் ஐயமில்லை .
இவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த
தினகரன் சாமிநாதன்  &  ராகவன் மற்றும்
சார்ந்த நண்பர்களுக்கும் ...
கட்செவி அஞ்சல் புதுப்பேட்டை அரசுமேல்நிலைப் பள்ளி
குழு நண்பர்களுக்கும் நன்றி ...நன்றி...நன்றி....!

விடை கொடு எம் தாயே ...1.
பள்ளி என்ற எங்கள் இரண்டாம் இல்லமே ...!
வாழ்வளித்த வள்ளலே ...!
மனச் சோர்வு ஏற்படும் காலங்களில்
உன் மடியில் தலைவைத்து கடந்த கால கனவு வாழ்க்கையில் மூழ்கி
புத்துணர்வு பெற்று மகிழ்வெனும் முத்தெடுக்க
மீண்டும் வருவேன் ...
விழிகள் பணிக்க விடைபெறுகிறேன் ....!
போய் வருகிறேன்...!

பின்னர் அனைவரும் அதாவது அங்கு வருகை புரிந்த இப்பள்ளியின்  முன்னாள்  ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள்,
சிறப்பு விருந்தினர்கள் ,முன்னாள் மாணவர்கள்
சேர்ந்து ஒரு குழுப்படம் எடுத்துக்கொண்டார்கள் .
பின்னர் அக்குழுப்படம் லேமினேட் செய்யப்பட்டு
அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது .

இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த
இந்நாளைய பள்ளி மாணவர்கள் ,
முன்னாள் மாணவர்கள் ,பொதுமக்கள் ,
சிறப்பு விருந்தினர்கள்என அனைவருக்கும்
சிறப்பான அறுசுவை உணவு மத்திய விருந்தாக அளிக்கப்பட்டது .

இந்த பரபரப்பான உலகில் ...
தனது எதிர்காலத்தைத் தேடி நிகழகாலத்தைக் கூட
சரிவர நுகராமல் ஓடும் அதிவேக ஓட்டத்தில்
எங்களையெல்லாம் மீண்டும் கடந்தகாலத்திற்கே அழைத்துச் சென்று எங்களது பள்ளிக்கூடப் பெற்றோர்களையும்
பதின்பருவ நணபர்களையும் சந்தித்து அளவளாவ
வாய்ப்பளித்த இந்நிகழ்வு ...இந்நாள்...எங்கள் ஒவ்வொருவரின்
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்....
வாழ்நாட்கள்   என்னும் காகிதங்களிடையே
இணைக்கப்பட்ட ஒரு போர்காகிதமாகவே திகழும் என்பதில் ஐயமில்லை .
இவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த
தினகரன் சாமிநாதன்  &  ராகவன் மற்றும்
சார்ந்த நண்பர்களுக்கும் ...
கட்செவி அஞ்சல் புதுப்பேட்டை அரசுமேல்நிலைப் பள்ளி
குழு நண்பர்களுக்கும் நன்றி ...நன்றி...நன்றி....!

விடை கொடு எம் தாயே ...1.
பள்ளி என்ற எங்கள் இரண்டாம் இல்லமே ...!
வாழ்வளித்த வள்ளலே ...!
மனச் சோர்வு ஏற்படும் காலங்களில்
உன் மடியில் தலைவைத்து கடந்த கால கனவு வாழ்க்கையில் மூழ்கி
புத்துணர்வு பெற்று மகிழ்வெனும் முத்தெடுக்க
மீண்டும் வருவேன் ...
விழிகள் பணிக்க விடைபெறுகிறேன் ....!
போய் வருகிறேன்...!