Tuesday 6 March 2018

எம் நூற்றாண்டுப் பள்ளியே ...



                                                         நூற்றாண்டு விழா காணும் 

                           தொரப்பாடி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கான                                         

                                                             வாழ்த்துக் கவிதாஞ்சலி   







இது என் தாய்க்கு நான் பாடும் தாலாட்டு
என்தாய்க்கு என்றா கூறினேன் ...?
இல்லை ...இல்லை...நம் தாய்க்கு
தாலாட்டு என்றா கூறினேன் ...?
இல்லை இல்லை ...
நான் என்ன இவளை உறங்க வைக்கவா போகிறேன் ?
அல்லவே ...
உற்சாகப் படுத்தத்தானே போகிறேன் ...!
அப்படியானால்  இவளை துயிலெழுப்ப
நான் பாடும் சுப்ரபாதம் ...
திருப்பள்ளியெழுச்சி ...

பாரதியும்  பாடினான் அன்று
பாரதமாதாவுக்கு ஒரு பள்ளியெழுச்சி
இன்று இந்த மாணவ நண்பனும் பாடுகிறேன்
என் பள்ளிக்கும் ஒரு பள்ளியெழுச்சி
இதற்கு காரணம் என் மாணவ சகோதர்களின்
பள்ளிக்காய் திரண்ட சீர்மிகு எழுச்சி !

பள்ளிக் கூடம்
இரண்டு வார்த்தைகளில் ஒரு கவிதை
ஏழு எழுத்துக்களில் எனக்கு வாய்த்த ஒரு அம்மா
எனக்கு மட்டுமா?
இதை இங்கே கூட்டமாய் குழுமி இருக்கிறோமே
நம் அனைவருக்கும் கூட
இவள்தானே தாயுமானவள் ...!

என் தாயுமானவளே ...!
என் இரண்டாம் தாயே ...!
இன்னுமேன்உ றக்கம் ...துயிலெழு !

நம்மை ஈன்ற அன்னை கூட
நம்மை சுமந்ததென்னவோ பத்து மாதங்கள்தான்
ஆனால் எம் தாயே...!
ஐந்து  ஆண்டுகள் அல்லவா எங்களை சுமந்திருந்தாய்
உன் வகுப்பறை என்னும் கருவறையில்
அன்று மாணவனாய்க் கருக்கொண்டோம்
எங்கள் ஆசான்கள் ஊட்டிய அமுதக்  கல்விப்  பாலைப்
பருகிய காரணத்தால் அல்லவா இன்று
ஆசிரியனாய்
மருத்துவனாய்
பொறியாளனாய்
காவல்துறை அலுவலனாய்
வழக்கறிஞனாய்
விஞ்ஞானியாய்
கலைஞனாய்
கவிஞனாய்
இன்னும் இன்னும்
பல்கலை வித்தகனாய் உருக்கொண்டோம்...!
அத்தனைக்கும் மேலாய்
நல்ல மனிதனாய் இருக்கின்றோம்...!
எமையெல்லாம் ஆசிர்வதிக்க எண்ணமில்லையா../
விரைந்து துயிலெழு 1

அன்று தொடங்கி இன்று வரையிலும்
மாணவச் சமுதாயமாகிய எங்களையெல்லாம்
ஆசான்கள் என்னும் சிற்பிகள் கொண்டு
அனுபவம் என்னும் உளியினால்
செதுக்கிச் சிலையாக்கும் சீர்மிகு பணிக்குக்
களம்  அமைத்துக் கொடுக்கும்
சிற்பக்  கூடம் அல்லவா நீ!
சீக்கிரம் துயிலெழு !

நூற்றாண்டுகளின் நுழைவாயிலை நோக்கி
பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் உனக்கு
ஆண்டுகள் பல கடந்தாலும் 
எம் தமிழன்னைபோல சீரிளமை கொண்டு இளங்குகின்றாய் 
உன் மக்கள் அல்லவா  நாங்கள் !
உன்நூற்றாண்டைக் கொண்டாட மனம் கொண்டோம்

தலைமையாசிரியரின்  பகீரதப் பிரயத்தனம் காரணமாய்
இங்கு பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் உறுதுணையாய் நிற்க 
இவ்வூரின் நாலஉள்ளங்கள் பல ஆதரவுக்கு கரம் நீட்ட

புத்துணர்வு பெற்று இன்று
புத்தொளிர் பள்ளியானாய்
பெருமிதத்துடன் பூரித்து நிற்கிறாய்!
போதும் உறக்கம் ...! உடனே துயிலெழு !

எம் தாயே ...!
குடியிருந்த கோயில் காண நாங்கள்
குவிந்துள்ளோம் ஒன்றாய் இன்று...!
பல தலைமுறைகள் உன்னால்தான் இன்று
நாங்கள் அனைவரும் உன்னில் இன்று ...!
வாழ்விற்கான பாதையை காட்டிய வள்ளலே ...!
வாழ்வாங்கு நாங்கள் வாழும் செய்திகள் பகிர
எங்கள் கால்கள் உனக்கான பாதை நோக்கப் பயணப்பட்டன
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயாய்
நீ திகழும் கோலம் காண கூடியுள்ளோம் இங்கு.
நின் பாதமலர் தொழுகின்றோம்
எம் பள்ளியே துயிலெழு !

இதோ நாங்களெல்லாம்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி மூழ்கி
மலரும் நினைவுகளை
முத்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம்!
நெகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்து
பள்ளிப் பருவ  நினைவுகளை
பிள்ளைப் பருவ நினைவுகளை 
அசை போட்டு மகிழ்கின்றோம் !
அறிவுக் கண் திறந்த  ஆசான்களையெல்லாம்
ஒருங்கே கண்டு கண்கள்  பனித்திருக்கின்றோம் !
ஒளிவிளக்கே துயிலெழு!


உன்னால் நாங்கள் பெருமை அடைந்தோம்...!
இன்று உன்னையும் நாங்கள் பெருமைப் படுத்துகின்றோம்!
இப்பள்ளியில் படிப்பதனால்  பெருமையடைகின்றோம்...!
இப்பள்ளியும் எங்களால் பெருமையடைச் செய்வோம்
என்ற உறுதிமொழி ஏற்றோம் அன்று !
அவ்வுறுதிமொழியினை நிறைவேற்றி
அனைவரும் உன்முன்னே இன்று !
அன்பே துயிலெழு!

உன்னில் நான் படித்த காலங்கள் என் கண்களில் நிழலாடுகின்றன .

அப்போது நீ புதுப்பேட்டை கடைவீதியில்  V.V.பாஸ்கர் அவர்களின் இல்லத்திற்கு எதிரே ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கி கொண்டிருந்தாய் .

உனக்கு ஒரு பெயர் கூட உண்டு ..பொம்பள பள்ளிக் கூடம்

வைசியர் சத்திரத்தில் இயங்கி வந்த 
தொடக்கப் பள்ளி ஆம்பளை பள்ளிக் கூடம் ..

ஆம் ...அப்போது எல்லாருமே அப்படிதான் அழைத்தார்கள் 
இரு பள்ளிகளையும் ...!

இதுவரையிலும் அதன் காரணம் என்னவென்று எனக்கு விளங்கியதேயில்லை ...!

உன்னை நான் தாயாக உருவகிக்க 
நீ பொம்பளை பள்ளிக் கூடம் என்பதன் காரணமாகவும் இருக்கலாம் .


என்னை என் தந்தை முதன் முதலாய் சீருடை மாட்டி 
பள்ளிக்கு அழைத்து வந்த காட்சி என் கண்முன் விரிகிறது ...

பள்ளியில் சேர்க்கைக்கான தேங்காய் ,வெற்றிலை பாக்கு , 
வாழைப் பழம்  , பூ இவற்றோடு 
ஒரு பைசாவுக்கு  விற்குமே ..
ஆரஞ்சு சுளை மிட்டாய் அதில் ஒரு பாக்கெட் வாங்கி கொண்டு 
என் பிஞ்சு விரல்கள் பிடித்துக்கொண்டு 
ஆந்த ஓட்டுக்  கட்டிடத்தின் உள் நுழைகிறார்.
அவர் ஒரு ஆசிரியர் .
அவரை அப்பள்ளியில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது .தவிர என்சிற்றப்பா திரு குப்பு சாமியும் , சித்தி திருமதி ஞானமும்  கூட அப்பள்ளியில் அப்போது பணிபுரிந்துகொண்டிருந்தார்கள்.
எனவே அப்பாவை அங்கிருக்கும் ஆசிரியர்கள் எல்லோருக்கும்
நன்கு தெரிந்திருக்கிறது.
இல்லே நுழைந்தவுடன் அங்கிருக்கும் தலைமை ஆசிரியர் -
அவர் ஒரு ஐயங்கார் அல்லது அய்யர் என்று நினைவு -
அவர் பெயர் வரத ராஜன்   என நினைக்கிறேன்.
நல்ல உயரம் .கோண வகிடு எடுத்து
தலையைத் தூக்கி வாரியிருப்பார் .
மெல்லிய சிவப்புக் கோடாய் நாமம் இட்டிருப்பார் .
தடித்த பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி அணிந்திருப்பார் .
அவர் என் தந்தையை  வரவேற்க
என் தந்தை அவருக்கு வணக்கம் சொல்லி
பின் என்னையும் அவருக்கு வணக்கம் சொல்ல வைக்கிறார்.
நான் சற்றே நெளிந்தபடி வணக்கம் வைக்கிறேன் .
பின்னர் அட்மிஷன் செய்வதற்காக வேண்டி என் கரம் பிடித்தபடி 
வெயில் வாங்கும் முற்றம் தாண்டி 
இன்னும் இன்னும் உள்ளே போய் 
கட்டிடத்தின் பின் கட்டின் வலப்புறம் உள்ள பகுதிக்கு செல்கின்றார் .

அங்கு ஒரு பெண் ஆசிரியர்
வெண்ணிறத் துணியால் முக்காடு போட்டபடி இருக்கிறார்
அவரை எல்லோரும் சாயபு டீச்சர் என்று அழைக்கிறார்கள்  .. 
சற்றே மெல்லிய ..கரிய நிற உருவம் ...வாங்க சார் என்று என் அப்பாவை வரவேற்று அவருக்கு வணக்கம் சொல்லியபடி என்னை  பார்த்து சிரித்தபடி தன்னருகில் அழைத்து அணைத்தபடி இருக்க ...
நானோ திமிறி அவரது பிடியினை  விடுவித்தபடி 
என் அப்பாவின் வேட்டி சுற்றிய கால்களை 
இறுக்கப் பற்றி பின் புறமாய் ஒளிந்துகொள்கிறேன் 

இதற்குள் தலைமை ஆசிரியர் ... 
என்  அப்பாவிடம் இருந்து பூஜை பொருட்களை வாங்கி 
அங்கிருந்த சாமி படத்தின் முன்பாக வைத்து படைக்கிறார் .
என்போலவே பள்ளியில் சேர வந்திருந்த 
இன்னும் சில என் வயது ஆண் ,பெண் பிள்ளைகளும் 
அழுதபடி ...கண் கலங்கிய படி நிற்க , எனக்கும் அவர்களுக்கும் ஆரத்தி காட்டி திரு நீறு இட்டு மிட்டாய்களை வழங்குகிறார் அவர் .
பின்னர் ,புதிய சிலேட்டு ,பலப்பம் ,
அரிச்சுவடி அட்டை ,ஆகியவற்றையும் 
புதிய பையில் போட்டு என்னிடம் அளிக்கிறார் ....

புதிய அரிச்சுவடியை வெளியே எடுத்து முகர்கிறேன் நான் ..
புதிய பெயின்டின் காகிதம் கலந்த  மணம்  மூக்கை வருடுகிறது .

கையில் உள்ள மிட்டாய்களில் இரண்டை வாயில் இட்டு சுவைக்கிறேன் .

மிட்டாய் வாயில் போனதுமே ஒரு மலர்ச்சி ...
என் முகத்தில் தென்பட்டிருக்க வேண்டும் ..
சாய்பு டீச்சர் என் தந்தையிடம் இருந்து என்னை வாகாக , 
மென்மையாக  தன்னருகில் இழுக்கிறார் 

என்னை மெதுவாக தன மடியில் இருத்தி 
பையில் இருக்கும் சிலேட்டை வெளியில் எடுக்கிறார் .
பலப்பம் கடினமாக இருக்கும் எனக் கருதியோ என்னவோ 
தன கையில் இருந்த சாக்பீஸை 
என் கையில் கொடுத்து பிடிக்கச்செய்து 
என் பிஞ்சு விரல்கள்  பிடித்து சிலேட்டில் -அட்டை சிலேட் அது -
ஒரு புறம் ஆனா ...என்று   கீச்சுக் குரலில் முழக்கியபடி 
என்னை பெரிதாக   எழுத வைக்கிறார் ..
ம்ம் ..என் கூடவே சொல்லு என்றபடி என்னையும் கூற சொல்கிறார் 
மில்லிய குரலில் சொல்கிறேன் ...ஆனா ....!
பின்னர் மீண்டும் மீண்டும்  கோட்டின் மேலேயே 
விரல்களை செலுத்தி பல க்களை கோட்டின்  மேல் கோடுகளாக
எழுத வைக்கிறார்...மீண்டும் மீண்டும்  எழுத  வைக்கிறார் ...
பின்னர்   சிலேட்டின் பின்புறம்   திருப்பி 1 என்ற எண்ணை 
விரல் பிடித்து பெரிதாக எழுத வைக்கிறார் ...
நானும் எழுத எனது முதுகில் மென்மையாகத் தட்டிக் கொடுத்து
வெரி குட் என்று பாராட்ட நான் என் அப்பாவைப் பார்த்து சிரிக்கிறேன் ...

.பின்னர் அங்கிருக்கும் அனைவருக்கும் என் கையால் ஆரஞ்சு சுளை மிட்டாய்களை வழங்க வைக்கிறார் பிறகு ஏற்கெனவே அங்கு புதிதாய் சேர்ந்த மற்ற குழந்தைகளோடு என்னையும் அமரவைக்கிறார்கள்.
பின்னர் என் தந்தை என்னிடம் அழகி கூடாது ..
பள்ளி விட்டதும் அம்மா வந்து அழைத்துச் செல்வார்கள்
என்று கூறி எனக்கு டாட்டா காட்டி
அனைவரிடமும் விடை பெற்று வெளியில் செல்கிறார்.
என் வீடு பள்ளிக்கு மிக அருகாமையில் உள்ளது என்பதனாலோ
அல்லது சிற்றப்பா ,சித்தி ஆகியோர் உள்ளதாலோ என்னவோ
நான் சமர்த்தாக வகுப்பறையில் அமர்ந்துகொள்கின்றேன்...
இது என் முதல் நாள் நினைவு ...பனி படர்ந்த நினைவுகளின்
நினைவுகலில் பனி விளக்கி வரைந்தது .இன்னும் பல நினைவுகள் ..

எதை சொல்வது எதை விடுவது ..

இரண்டாம் வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த
திருமதி ராஜாமணி டீச்சர்... இவர் எங்களுக்கு தூரத்து உறவு .தவிரவும் என்னுடன் நண்பனாய் பழகி வந்த சந்துரு என்பவனை பாட்டியும் கூட .இவரையும் அடிக்கடி சந்தித்திருக்கிறேன் .இப்போதுதான் மூன்று வாரங்களுக்கு முன்னர் காலமானார் .
மூன்றாம்  வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த
திருமதி ஜெயா டீச்சர் ..இவர் போஸ்ட் மேன் மணிவண்ணன்
அவர்களின் தாயார் ..ஓய்வு பெற்ற  பின்னும் கூட
போஸ்ட் ஆபீஸ் ஆர் .டி  பணம் கட்டும் சேவைக்காக
எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார் .
தவிர இவரது பெண்களில் ஒருவர் என் தங்கையின்
வகுப்புத் தோழி என நினைக்கிறேன் .
நான்காம் வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த
திருமதி  மும்தாஜ் டீச்சர் .இவர் தற்போது  என் இல்லத்திற்கு
அண்மையில் வசித்துவருகிறார் ...இல்லை இல்லை ...அவர் வீட்டுக்கு அருகாமையில் தான் நாங்கள் வீடுகட்டியுள்ளோம் .
ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான்.

இன்னும் ஆலிஸ் டீச்சர் ,
தொரப்பாடியிலிருந்து வரும் ராஜாமணி சார் ,லூக்  ஜீவானந்தம் சார் ,
குப்பா சித்தப்பா ..ஞானம் சித்தி போன்றோர்கள்
எனக்கு வகுப்பு ஆசிரியர்களாக இல்லாவிட்டாலும்
பாடம் போ தித்தவர்கள்.

வெயில் வாங்கும் பெரிய சதுர முற்றம் என்று குறிப்பிட்டு இருந்தேனே ...
அங்கு ஒரு கொதிக்க கம்பமும் இருந்தது .
தினமும் அங்குதான் இறை வழிபாட்டுக் கூட்டமும் நடக்கும்.

தலைமை ஆசிரியரின் அறை  உள்ளா அல்லது
அருகில் உள்ள மற்றொரு இலேசாக இருள் சூழ்ந்த அறையிலா                     சரியாக நினைவில்லை...கண்ணாடிக் குப்பிகளில்
பதப்படுத்தப் பட்ட பாம்பு போன்ற உயிரினங்களை
வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

பள்ளி ஆண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
எண்களிக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும் ...
நான் மூன்றாவது படிக்கும்போது என நினைக்கிறேன்
அப்போதைய பிரபலமான எம் ஜி ஆர் பாடல்
இது சொர்கத்தின் திறப்பு விழா ...புது சோலைக்கு வசந்த விழா ..
என்று துவங்கும் பாடலை
இன்று பள்ளியின் ஆண்டுவிழா ....என்று மாற்றி இட்டுக்  கட்டிய
பாடலாக மாற்றி இனிய குரலில் பாடிய வண்ணம்
சில நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்
அக்காக்கள் கலர் கலராக பாவாடை தாவணியெல்லாம் அணிந்து கோலாட்டத்தினை ஆடி பயிற்சி எடுப்பார்கள் .
அப்பாடல் தான் நான் முதன் முதலாகக் கேட்ட இட்டுக்  கட்டிய பாடல் என நினைக்கிறேன் .

இப்போது நான் கவிதைகள் எழுதுவதற்கும் பாடல்கள்
எழுதுவதற்கும்    அதுதான் விதையாகவும் இருந்திருக்க வேண்டும் ..
பள்ளியின் ஆண்டு விழாவெல்லாம்
பள்ளியின் பின்புறத்தில் உள்ள பரந்த இடத்தில நடந்ததாக நினைவு .
அங்குதான் விளையாட்டுப் பீரியட் எல்லாம் நடக்கும் எங்கள் மைதானத்தைத் தாண்டியதும் கைனா செட்டியாரின் நிலமும்
அதைத் தொடர்ந்து வானூத்தூர் அம்மன் கோவிலும் தெரியும்.

அப்போது அறிவியல் கண்காட்சி ஒன்றிய அளவில்
நடந்தது என நினைக்கிறேன் ..
புதுப்பேட்டை சத்திரம் பள்ளியில்  நடந்த விழாவுக்கு
எங்களையெல்லாம் அழைத்துச் சென்றது நினைவிருக்கிறது .
அதேபோல் புதுப்பேட்டை முருகன் தியேட்டர் ...
இது முத்து மாரியம்மன் கோவில் தாண்டி உள்ளது ..
அங்கு ஒருநாள் பகல் காட்சியாக எதோ குழந்தைகள் படம் ..
பெயர் நினைவிலில்லை ...
அங்கும் எங்களை பள்ளியிலிருந்து
வரிசையாக அழைத்துச் சென்றது இன்னும் நினைவில் உள்ளது...
இப்போதும் சரி அப்போதும் சரி ...
எப்போதுமே மாணவர்களுக்கு பள்ளியை விட்டு
வெளியில் செல்வதானால் மகிழ்ச்சிதானே ...
நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?
கும்மாளத்திற்கு கேட்கவா வேண்டும் ...?
ஒரே கொண்டாட்டம்தான்...
துள்ளித் திரிந்த வண்ணத்துப் பூச்சி பருவமல்லவா அது ..
நாங்கள் பறந்து மகிழ்ந்த நந்தவனம் அல்லவா அது ...!

ஒரு காலத்தில் யாரோ முன் பின் தெரியாதவர்களை
நண்பர்களாக்கி மகிழ்வித்த அந்த புனித மண்ணில்தான் ...
இப்போது முன் பின் அறிமுகமில்லாத
ஒரு ஆணையும் பெண்ணையும் மண மக்களாக மாற்றி
தம்பதிகளாக வாழ்வில் இணைக்கும் ஒரு தளமாகத் திகழ்கின்றது.
ஆம்... காலஓட்டத்தில் நாங்கள் பயின்ற பள்ளி
இப்போது ஒரு திருமண மண்டபம் .

ஆம்  இப்போது  உள்ள லதா ஸ்ரீ நிவாச மஹால் தான் அந்த இடம்...!

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
என்று பாடினான் நம் பாரதி ..
ஆனால் புதுப்பேட்டையின் ராசியோ என்னவோ தெரியவில்லை ...
நான் படித்த  பள்ளிகள்  இடங்கள்
இப்போது திருமண மண்டபங்களாய் ...
ஆம்... தொரப்பாடி பள்ளி இயங்கி வந்த
நிலப் பகுதி லதா ஸ்ரீனிவாச மஹால் ஆனதைப்போல
நான் 6,7 மற்றும் 8 ஆவது வகுப்புகளை படித்த பள்ளியின்இடமும்
திருமண மண்டபம் ஆகவிருக்கிறது ...!

ஆம் ... அந்த இடம் எது தெரியுமா ..?
தற்போதைய பாரத ஸ்டேட் வங்கியின் எதிரே உள்ள இடம்தான் அது ...

நான் தொரப்பாடிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பை முடித்தவுடன்
புதுப்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளியில்
6 ஆம் வகுப்பில் சேர்ந்தேன் ...
அப்போது பள்ளி இரண்டு இடங்களில் இயங்கி வந்தது ,
6 முதல் 8 வரை இடைநிலைக் கல்விக்கூடம் மெயின் ரோடில் இருந்த
ஆரிய வைசியர் சமூகத்துக்கு சொந்தமான
மிகப் பெரிய ஓட்டுக் கட்டிடத்திலும் ,
9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான உயர்நிலைக் கல்விக்கூடம்
பேட்டை வீதியில் தபோது பள்ளி இயங்கிவரும்
அதே இடத்திலும் இயங்கி வந்தது .
அப்போது அப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாய் மாறவில்லை .
அப்போது தலைமை ஆசிரியராய் இருந்த
திரு .பொன் ,சிவநேசன் என்பவர்தான் அதற்கான
ஏற்பாடுகளை செய்து வந்தார் .
அந்த ஆரிய வைசிய சமூகத்திற்கு
சொந்தமான கட்டிடத்தில்தான்
என் பதின் பருவத் துவக்கமும்  இடைநிலைக் கல்வியும்
துவங்கின எனலாம் ..
னாயெங்கள் குடும்பம் அப்போது
அப் பள்ளிக்கு எதிரில்தான் வசித்துவந்தது
அதன் பின் அனைத்து வகுப்புகளும்
பேட்டைத் தெருவில் இயங்கி வந்த
பிரதான பள்ளிக்கே  மாறிப் போக ...
 காலத்தின் சுழற்சி அந்த இடத்தையும் திருமண மண்டபமாக மாற்றிக்கொண்டிருக்கிறது .
என் நண்பர் திரு கனக ராஜ் என்பவர்தான்
அந்த மண்டபத்தைக் கட்டி வருகிறார்.

எது எப்படியோ ...
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாகக் கூறுவார்கள்
சொர்க்கத்தில் யார் வாசம் செய்வார்கள் .?
இறைவன் ... கடவுளர்கள்... அல்லவா ?
அப்போது திருமணம் நடைபெறும் இடம் கூட சொர்க்கம்தான் ...
கடவுள் இருக்கும் இடம்தான் .
அப்படியானால் திருமண மண்டபங்களும்
ஒருவகையில் கோவில்கள்தான் ..
இருந்துவிட்டுப் போகட்டும் ...!

இன்னும் சில துணுக்குச் செய்திகள் இருக்கின்றன ..
நான் படித்த உன்னைப் பற்றி '''

பலப்பம்  ,சாக்பீஸ்  போன்றவற்றை என்னையறியாமல்
வாயிலிட்டு மென்றுவிடுவேன் ..
திடீர் திடீரென்று எனது பிரேம் உடைந்து போன  சிலேட்டின்
நான்கு முனைகளும்  என் பற்கள் பட்டுக் காணாது போகும் ..
போதாத குறைக்கு எனது புத்தகங்களின் நுனிப் பகுதிகளும்
என் பல்லால் அரைபட்டு வயிற்றுக்குள் சென்றுவிடும் ...!

 கண்ணன் மண்ணை அள்ளித் தின்ற பிறகு
 வாயின்  ஓரம் ஒட்டி   இருக்கும்  மண்ணால்
 தன் தாய் யசோதையிடம் மாட்டினானே
அந்தக் கதையாய் என் வாயின் ஓரம் ஒட்டிய
அல்லது உதட்டில் படிந்த வெண்மை நிறத்தால்
சாயபு  டீச்சரிடம் மாட்டிக் கொள்வேன் ..
ஏய் ...சோவைப் பையா ..திரும்ப திரும்ப பலப்பம் சாப்பிடறயா
இரு இரு ... உன் அப்பாவிடம் சொல்றேன்
என்று கீச்சுக் குரலில் கத்தியவாறு
என் காது மடல்களை பிடித்துத் திருகியதை
மறக்க முடியுமா என்ன?


அப்போதெல்லாம் சத்துணவுத் திட்டம் கிடையாது .
மத்திய உணவுத் திட்டம் என்ற பெயரில்தான் அது இருந்தது .
உணவைப் பள்ளி வளாகத்தில் சமைப்பது கிடையாது .
வேறு எங்கோ ஒரு பொதுவான இடத்தில சமைத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் தனித்தனி பேரல்களில்
வேன்  மூலம் வந்து இறங்கும் .
அநேக நாட்களில் சுடச் சுட கோதுமை உப்புமாவோ
அல்லது ஒரு சில நேரம் காய்கறிச் சாதமோதான் வரும் .
அந்த கோதுமை உப்புமாவின் சுவை ஏனோ
எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது .
கோதுமை உப்புமா வழங்கப் படும் நாளில்
எனது வீட்டுக்குச் சென்று ஒரு தட்டோடு வந்துவிடுவேன் .
என் வீடு மிக அருகாமையில் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா ?தட்டில் வாங்கி ,சூடு தாங்காமல்
சிறிது சிறிதாக கையில் எடுத்து ஊதி ஊதி
உருண்டையாக்கி உண்டுவிடுவேன் ..
ஆனால் காய்கறிச் சாதம் -அதுவும் அந்த அரிசியின் பழம் வாசனை
எனக்குப் பிடிக்காது ... வாங்கவே மாட்டேன் ...
அநேகமாக சத்துணவில் அந்த அரிசி வாசனை கூட
இன்னும் மாறவில்லை போலும் .

அடுத்த விஷயம் .எனக்கு பள்ளி ஆசிரியர்களைவிட
ரொம்ப பிடித்தவர் ஒருவர் அப்பள்ளியில் இருந்தார் .
எனக்கு மட்டுமல்ல ..அநேகமாக
எல்லோருக்கும் அவரைப் பிடித்திருக்கும் .
வாட்ச்மேன் மாமாதான் அவர்
லாங்  பெல் அடித்து எல்லோரையும்
வீட்டுக்கு அவர்தானே அனுப்பி வைக்கிறார் .
அப்படிதான் நாங்கள் அந்த வயதில் நினைத்திருந்தோம் .
அவருக்கு பெயர் கூட வைத்திருந்தோம் .
மணி மாமா ...அதாவது மணியடிக்கிற மாமா ...
அதனால்தான் பொங்கல் தீபாவளி என
பண்டிகைக்  காலம் வந்துவிட்டால்
அவருக்கான பணிடிகைக் காசு கொடுக்கும் முதல் ஆளும் நானாகத்தானிருப்பேன்.

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது லட்சுமி ஸ்டுடியோ போட்டோகிராஃபர் தனக்கும்
உயரமான ஸ்டாண்டில் வைத்த  கேமராவுக்குமாய்
ஒரு பெரிய கருப்பு   துணியைப் போர்த்தி
ராஜாமணி டீச்சர் நடுவில் அமர எங்களை தரையிலும் பெஞ்சிலுமாய் வரிசையாய் அமர வைத்து
எடுத்த வகுப்புக் குழுப் படம்.
கருப்பு வெள்ளையில் உள்ள அந்தப் படத்தின்
ஒரு பிரதியை நானும் வாங்கியிருந்தேன் .
என் மாணவப் பருவம் வரையிலும் கூட எங்கள் வீட்டில் அது இருந்தது. பின்னர் எப்படியோ அது காணாமல் போய் விட்டது .
அப் பொக்கிஷத்தை தவற விட்டது எனது துரதிர்ஷ்டம்தான்
அந்தப் போட்டோவில் கூட   நான் டை எல்லாம் கட்டி
ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பேனாக்கும் .

என்ன ...இந்தப் பதிவில் போட 
பள்ளி நினைவாக எந்தப்  படமும் இல்லை.

ஆனாலும் நான் பள்ளி படித்த போது
வெவ்வேறு சமயங்களில் எடுத்த
எனது பால பருவப் புகைப் படங்களை
இங்கு பகிர்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.


எனக்கு பாடம் போதித்த ஆசிரியர்களை பற்றி சொன்ன நான்
என்னுடன் பயின்ற சக நண்பர்களை பற்றிக்
கூறாமல்  விட்டதின் காரணம் ஆசிரியர்கள்
என்   நினைவில் நின்ற அளவு
நண்பர்கள் நிற்கவில்லை என்பதுதான் ... ..


இருப்பினும் எனக்கு மூவர் பெயர் மற்றும் முகம்
ஓரளவு நினைவு வருகிறது..
ஒருவர் எனக்கு இரு வயது மூத்தவர் ...
அவர் பெயர் அப்பர் ...கோட்டலாம்பாக்கம் ...
அவர் எனக்கு வகுப்புத் தோழர் இல்லை ...
அவருடன் பழகியதில்லை ...
அவர் என் மனதில்  பதியக்  காரணம் அவரது பெயர் ...
ஆம் அப்பர் சாமி என்ற என் தந்தையை என் பாட்டி
அப்பர் என்றுதான் அழைப்பார் .
ஒருவேளை அது காரணமாக இருக்கலாம் .
 மற்ற இருவர் தோழா இல்லை ...
 தோழிகள் ...
 ஒருவர் கோட்டலாம் பாக்கம் காவேரி ..
 மற்றொருவர் வெள்ளாஞ்செட்டித் தெரு சித்ரா ...
இருவருமே என்னுடன் முதல் வகுப்பிலிருந்து
ஐந்தாம் வகுப்பு வரைஒன்றாகப் படித்தவர்கள்.

குறிப்பாக தோழி காவேரி தினமும் வெள்ளை நிற பட்டையான
கிரைப் வாட்டர் பாட்டிலில் ஆரஞ்சு சுளை  மிட்டாய் போட்டு
கலர் கலராய் தண்ணீர் கொண்டு வந்து
தானும் குடித்து எனக்கும் கொடுப்பார்..

இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது ...
இதை தட்டச்சு செய்யும் வேளையில் கூட
என் உதட்டில் முறுவல் தவழ்கிறது ...

தோழிகளே ...இருவரும் எங்கு உள்ளீர்கள் தெரியவில்லை ...
ஆனால் நீங்கள் இருவரும் பேரன் பேத்திகளுடன் மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என நம்புகிறேன் ..
இறைவன் எல்லா நலமும் ஆரோக்கியமும் அருளட்டும் ...

முக்கிய செய்தியினை முத்தாய்ப்பாக அல்லவா சொல்லவேண்டும்?

எனக்கு மட்டுமல்ல ...என் தாய் திருமதி சுந்தரவல்லியும் கூட
உன்னிடம்தான் பயின்றுள்ளார்..
அவருக்கும் ,அவருடைய அக்கா
அதாவது எனது பெரியம்மாவுக்கும்கூட
நீதான் கல்விக்கண்ணைத் திறந்துள்ளாய் ....

ஏ அம்மா ...எத்துணை தலைமுறைகளாக
நீ சலிக்காது கல்விப்பணி ஆற்றுகின்றாய் ...?
எத்துணை ஆயிரம் ஆயிரம் பேர்களை
நீ வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய் ...

அம்மம்மா ... நீ என் தாய்க்கும் அம்மா ...
அதனால் நீ எனக்கு அம்மம்மா ...பாட்டி ...
தலைமுறைகள் தாண்டியும் கல்வி தரும்  மூதாட்டி ...!

ஏ தாயே ... என் அருமைப் பள்ளியே ...
 என் நினைவுகளை அலை அலையாய் தவழவிடுகிறாய் ...
என் வசந்த கால வண்ணத்துப் பூச்சிப் பருவத்துக்கு அழைத்துச் செல்கிறாய் ...
 என்னை மட்டுமா ...

இப்பதிவினை கண்ணுறும் அனைவரையும்தாம் ...

உனக்கு என் கோடானு கோடி வணக்கங்கள் ...
 எனக்கு கல்வி போதித்த ...
எண்ணையும் எழுத்தையும் கற்பித்து ஆளாக்கிய
இரண்டாம் பெற்றோர்களுக்கு
என் பணிவான மேன்மையான வந்தனங்கள் ...

எம் நூற்றாண்டுப் பள்ளியே  
எம்மை வளர்த்து ஆளாக்கிய பள்ளியே...!
எம் வாரிசுகளின் வருங்காலத்தையும்
உன்வசமே ஒப்படைக்கின்றோம்
எங்களை போன்றே
அவர்களையும் செதுக்கியெடு!
செம்மைப் படுத்திச் சீர்தூக்கு !
உன்னால் சிறப்புற
உன்னால் மேம்பட
உன்னால் உயர்வடைய
இதோ எம் மாணவர் சமுத்திரம்
உன்முன் தவம் கிடக்கின்றது !
உறக்கம்போதும் அம்மா உடனே துயிலெழு !

எமக்கு அறிவைப் புகட்டிய ஆசான்களுக்கும்
எம் பிள்ளைப் பருவக் குறும்புகளுக்கு
இடம் கொடுத்த உனக்கும்
என் நெகிழ்ச்சிமிகு சமர்ப்பணங்கள் !
என்போன்றே ஆயிரமாயிரம்பேர்
சமர்ப்பணங்கள் ஏற்றிட
எம்தாய் நீ துயிலெழு!

நினைவலைகளில் நீந்திய களிப்புடன் .....!
வாய்ப்புக்கு நன்றி பகிர்ந்து
வழிவிடுகின்றேன் வரும் காலத்திற்கு...!
வசந்தங்கள் காத்திருக்கின்றன ...!
வாருங்கள் என் சொந்தங்களே!
நம்மை வளர்த்துவிட்ட அன்னைப் பள்ளிக்கு 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவோம் ...

நாம் மறைந்தாலும் தலைமுறைகளைத் தாண்டியும் 

நம் தலைமுறைகளை வளர்த்தெடுக்க  வாய்த்திருக்கின்ற 
நல் அன்னையே வாழ்க நீ 
இந்த வையத்து நாட்டிலெல்லாம் ...
வாழிய வாழியவே ...!































No comments:

Post a Comment