உனக்குள் உன்னதம்
உலகம் பல நேரங்களில்
திறமைசாலிகளைத் திரும்பிப் பார்ப்பதில்லை
வெற்றியாளர்களை மட்டுமே விரும்பிப் பார்க்கின்றது
நிரம்பப் போற்றுகின்றது
சாதாரணன் செய்வது சாதனையேயானாலும்
உலகின் கண்ணுக்கு அவை சாதாரணங்களே
ஒருசிலர் செய்யும் சாதாரணங்கள் கூட
பெரும் சாதனைகளாகவே போற்றப்படுகின்றன
என்ன செய்யப்படுகின்றது என கவனிக்க
உலகம் ஒருபொழுதும் தயாராயில்லை
யாரால் செய்யப்படுகின்றது என்பதனையே
உற்று நோக்குகிறது இவ்வுலகம்
உலகம் உன்னை உற்றுப்பார்க்கிறதா
ஊர் உன்னைப் போற்றுகின்றதா
உதறிவிடு அக்கவலைகளை
உலகம் உன்னைப் பார்க்கிறதோ இல்லையோ
உன்னுள் உள்ள உள்மனம்
உன்னை உற்றுப் பார்க்கின்றது
உன் செயல்களை உன் மனம் பாராட்டும்
உன் மனம் பாராட்ட உற்சாகம் ஊற்றெடுக்கும்
உற்சாகம் ஊற்றெடுக்க
உன்னதங்கள் பெருகிவிடும்
உன்னதங்கள் வான் முட்ட
ஊரெல்லாம் உனைப் பார்க்கும்
உலகுனை ஒருநாளில் நிச்சயமாய்
உன்னை நன்றாய் உற்றுப்பார்க்கும்
உன்னை நன்றாய் உற்றுப்பார்க்கும்
No comments:
Post a Comment