நான் ஓவியன் ஆன கதை.
நான் ஒரு சித்திரக்காரன்
நான் ஒரு ஓவியக் கலைஞன் .
நான் ஒரு ஓவிய ஆசிரியர் .
என் நாடி நரம்புகளில் குருதியோட்டந்தனில் சித்திரத்தின் மீதான காதல் கலந்து ஓடிய வண்ணம் இருக்கின்றது .
இந்த சுவாசங்களில் நிறைந்த ஓவியக் கலையின் மீதான ஆர்வமானது என் சிந்தையெங்கும் வியாபித்துள்ளது .
என்னை நானே திரும்பிப் பார்க்கிறேன்
என்னுள் சித்திரத்தின் மீதான ஆவல் ஒட்டிக்கொண்டது எப்படி ?
ஓவியத்தேடல் எப்போது முதல் என்னுள் துளிர்த்தது ?
தூரிகைக் கனவு என்னைத் துரத்திப் பிடித்தது எந்தசமயம்?
இதற்கெல்லாம் விடை தேட என் நினைவுகளை சற்றே ரீவைண்ட் செய்து பார்க்கப் போகிறேன்.
இதோ ..கால எந்திரம் பின்னோக்கிப் பயணிக்க எத்தனிக்கிறது ....!
நான் ஏறப் போகிறேன் .
நான் சித்திரப் பிரியனான கதையை நானே எனக்குள் தேடப் போகிறேன் ....!
வண்ணங்கள் என் எண்ணமெலாம் குடியேறிய கதையை உங்களிடம் பகிர போகிறேன் .
சுவாரசியம் நிரம்பிய என் பிள்ளைப் பருவ நிகழ்வுகளையும் பதின் பருவ நிகழ்வுகளையும் பட்டியலிட்டு தரப்போகிறேன்.
என்னை காலதூரிகை ஓவியனாய் வரைந்த கதை வடிக்கப்போகிறேன் ...!
புறப்படலாமா?
என் மூன்றாம் அகவையில் தொடங்குகிறேன் நான் .
என்னை நானே உணர்ந்து நினைவுகள் நெஞ்சில் புகை மறைத்தார் போன்று படியாது படிந்திருந்த பசுமை துவங்கிய பருவம் அது .
பிறந்தது 1967 ல் ஒரு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் ...புதன் கிழமை .
என்னை இப்புவிக்கு தந்தவர்கள் ..வரும் காலத் தூரிகைக்காய் தாரை வார்த்தவர்கள்...அப்பர்சாமி மற்றும் சுந்தரவல்லி தம்பதியினர் .
எனக்கு முன்னர் பிறந்து என்னுடன் விளையாட்டுக்காய் சண்டையிடக் காத்திருந்த என் சகோதரி சுமதி .
நான் பிறந்து மூவாண்டுகள் கழிந்து எங்கள் பால பருவத்திற்கு பலமும் வளமும் சேர்த்திடப் பிறந்திட்ட என் தங்கை சுஜாதா .
என் அப்பாவுடன் பிறந்த சகோதரர்கள் மூவர் .இவர்கள்தான் என் வாசிப்பு ஆர்வத்திற்கு ...சித்திரத் தேடலுக்கு களமாய் நின்றவர்கள்.
என் அன்புக்குரிய பாட்டி .என் தந்தையின் தாய் .
என்று கூட்டத்திற்கு குறைவில்லா கூட்டுக குடும்பம் எங்களுடையது .
நான் பிறந்து வளர்ந்தது கடலூர் மாவட்டம் பலாவிற்குப் புகழ் பெற்ற பண்ணுருட்டிக்கு அடுத்துள்ள புதுப்பேட்டை என்னும் கிராமம் .
கிராமம் என்றதும் எதோ பாரதி ராஜா படத்தில் வரும் பற்றிக் காட்டு கிராமம் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம் .
பெரிய பேரூராட்சி .கைத்தறி லுங்கிக்குப் பெயர் போனது .அமரர் கல்கி எல்லாம் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள் தெரியுமா?அதை அவரே தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்,அப்படிப் பட்ட புகழ் பெற்ற ஊர் அது.
அந்த ஊரிலே பேருந்துகள் செல்லும் பிரதான சாலையில் , கடைவீதிக்கருகில் இருந்தது எங்கள் வீடு .எங்கள் வீட்டுக்கு அருகில் காவல் நிலையமும் இருந்தது .எதிரேயே அரசுப் பள்ளியின் ஒரு பிரிவும் இயங்கி வந்தது .தெருவில் இறங்கி மேற்காகத் திரும்பினால் காசிவிசுவ நாதர் ஆலயம் கண்களை படும் ...தினமும் கோபுர தரிசனம்தான் .
தூரிகை வரையும் ....
No comments:
Post a Comment